இரும்புத்திரைக்கு பின்னாலிருந்து - 2: வரலாறு

இந்தப் பதிவப் படிக்க கம்பூயூட்டர், இணைப்பு தவிர தேவையான பொருள் ஒன்னு இருக்கு. அது கொசுவத்திச் சுருள். லிக்விடெல்லாம் சரியா வராது. டார்டாய்ஸ் வாங்கி நல்லா பக்கத்திலேயே பத்தவச்சுக்குங்க. ஏன்னா, கொஞ்சம் வரலாறு பாக்கணும் இன்னிக்கு. ரஷ்யாவின் குறிப்பா சோவியத் வரலாறு பத்தி பலருக்கும் தெரிந்திருந்தாலும், மெகாத்தொடர்னு எழுத ஆரம்பிச்சுட்டா வரலாறுன்னு சொல்லி நாலுவாரம் இழுக்கற அருமையான சான்ஸையெல்லாம் விட்டுட முடியுமா? என்னைப் பொறுத்தவரை ரஷ்ய வரலாற்றை சோவியத் யூனியன் உடைவதற்கு முன்னும் பின்னும் என்று பிரிக்கலாம். எவ்வளவு சுருக்கமா சொல்ல முடியுமோ சொல்லிடறேன்.

12-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு விதமான tribes ஆக பிரிந்து இருந்த ரஷ்ய மண்ணில் Grand Duchy of Muscovy என்ற பெயரில் பிரிமிடிவ் அமைப்பு தோன்றியது. டானியல் அலெக்ஸாண்ட்ரோவிச் என்பவர் மாஸ்கோ நகரம் இருக்கிற ஏரியாவில் தக்கணூண்டுக்கு ஆரம்பித்த நாடு இன்று மேற்கில் போலந்து, பின்லாந்து என்று தொடங்கி சீனா, மங்கோலியா வரை விரிந்து கிழக்கே ஜப்பான் அருகே வரை பரந்து கிடக்கிறது. இந்த விரிவாக்கத்தை மிக வெற்றிகரமாக நடத்தியது மூன்றாம் இவான். இவனின் கீழ் தான் பிரம்மாண்ட சைபீரியா ரஷ்யாவின் கீழ் வந்தது. பின்னர் கொடுங்கோலன் இவான் 1V, கேத்தரீனா என்று பலரின் கீழ் ஐரோப்பிய இராஜாங்கங்களிடையேயும் குலாவத் தொடங்கியது ரஷ்யா. ஜார் என்று சொன்னவுடன் சட்டென பலருக்கும் நினைவுக்கு வருவது இரண்டாம் நிக்கோலாஸ் தான். முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட பெருந்தோல்வியாலும், வழக்கம்போல் ஏழைகளை குறித்து கவலையில்லாமல் சுகபோக வாழ்வில் ஈடுபட்டிருந்த நிக்கோலாஸ் 1917-இல் நடந்த புரட்சியை அடக்க முடியாமல், போல்ஷேவிக்குகளிடம் பிடிபட்டு பரிதாபமாக கூண்டோடு கைலாசம் போனான். அதோடு ஜார் வம்சம் அழிந்தது.

லெனினுக்கு பின் 1927-இல் ஆட்சி பீடத்தில் ஏறினான் ஜார்ஜியாவைச் சேர்ந்த கொடுங்கோலன் ஜோசப் ஸ்டாலின். அப்போதுவரை விவசாயத்தையே பெரும்பாலும் நம்பியிருந்த நாட்டில், அதிரடியாய் தொழில்துறை மற்றும் கட்டமைப்பு முன்னேற்றம், பொதுவுடைமையாக்குதல்னு பல காரியங்களைச் செய்தான். ஸ்டாலின் மட்டும் இல்லாதிருந்தால், சோவியத் யூனியன் முன்னேறியிருக்க வாய்ப்பே இல்லையென்று கூறுவோரும் உண்டு. கிராம நிலங்களையெல்லாம் கல்ஹோஸ் என்ற பெயரில் collectivization செய்யப்பட்டது. குறிப்பாய் கஸ்ஸாக்ஸ் எனப்படும் மக்கள் வசித்த தற்போதைய கஸக்ஸ்தானில் பெரும் ரத்தவெள்ளத்தில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாற்றத்தை எதிர்த்தோர் கையாளப்பட்டவிதம் ஹிட்லரையே மிஞ்சிவிடும். The Great Purges என்றழைக்கப்படும் இந்தக் கொடுமையான காலத்தில் அறிவாளிகள் எனக் கருதப்பட்ட விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், இராணுவ அதிகாரிகள், பொறியாளர்கள் என பாகுபாடின்றி சைபீரியாவில் உருவான குலாக்குகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். உலகின் முதல் concentration campகள் இந்த gulag-கள். இதில் இறந்தோர் எண்ணிக்கை பலலட்சங்கள். இன்றளவும் மாஸ்கோவின் முக்கிய சாலைகளில் ஒன்றான Kutuzovskiy Prospekt-இல் உள்ள வெற்றிப்பூங்காவிற்கு இடப்பக்கம் திரும்பினால் Matvievskoe என்றழைக்கப்படும் குட்டி காட்டிற்குள் ஸ்டாலினின் டாச்சா (பண்ணை வீடு) இருக்கிறது (டாச்சா என்பது என்ன என்று வேறொரு சமயம் பார்ப்போம்). அந்த வழியாக சென்றாலே பீதியாய் இருக்கும். இந்த பர்ஜஸ் குறித்து ஸ்டாலின் இரவுச்சாப்பாட்டு நேரங்களில் தன் அந்தரங்க சகாக்களுடன் பல முடிவுகள் எடுத்தது இந்த வீட்டில்தான். மேலும் மேற்கு ரஷ்யாவில் இருந்த பல கிராமங்களை கூண்டோடு புகைவண்டியில் ஏற்றி கிழக்கில் சைபீரியா, ஆசியா பகுதிகளில் அத்துவானத்தில் செட்டில்மெண்டுகள் நிறுவ திட்டங்கள் தீட்டியதும் இங்குதான். அது ஏனென்றால் மத்திய மற்றும் கிழக்கு ரஷ்யாவில் மேற்கத்திய காக்கேஸியன் ரஷ்யர்களை குடியேற்றத்தான். இப்படி தனிமனித அளவில் கொடுமைப்படுத்தப்பட்டாலும், சோவியத் யூனியன் நாடென்றளவில் தொழில்துறையில் அபரிமிதமான வளர்ச்சியடைந்தது.

நாஜி ஜெர்மனியுடன் இரண்டாம் உலகப்போருக்குமுன் சமரச ஒப்பந்தம் செய்துகொண்ட ஸ்டாலின் போர் முன்னேற்பாடுகளை கவனிக்காமல் அசட்டையாக இருந்தான். ஹிட்லரின் படைகள் சான்க்ட் பீட்டர்புர்க்கை சூழ்ந்து கொண்டு இரண்டரை வருடங்களுக்கு சீஜ் வைத்தன. பல மில்லியன் மக்கள் மாண்ட இந்த சீஜில் தம் செல்லப்பிராணிகளையும், சில சமயங்களில் இறந்தவர்களையும் உணவுத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்க்காக உண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர் பீட்டர்புர்க் மக்கள். இன்றளவும் ரஷ்ய மக்களிடம் ஆறாத ரணம் இந்த இரண்டாம் உலகப்போர். ஏறத்தாழ 10 மில்லியன் ரஷ்யர்கள் உயிரிழந்தனர். தோல்வியின் விளிம்பிற்கே போன சோவியத் யூனியனுக்கு சாதகமாய் இரு விஷயங்கள் இருந்தன. ரஷ்யாவின் சீதோஷ்ண நிலை மற்றும் மிச்ச இடங்களில் பெற்ற தோல்விகளின் காரணமாகவும் ஜெர்மானிய இராணுவம் சோர்வடையவே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பெர்லின் வரை துரத்திச்சென்று பெர்லினை அமெரிக்க/பிரித்தானிய படைகளுக்கு முன்னர் கைபற்றியது சிகப்பு இராணுவம். ஸ்டாலின் இச்சமயத்தில் மிகச்சாதுர்யமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஜெர்மானியர்களிடம் போர் புரிய ஆசைகாட்டி, அவர்களுக்கு உதவாமல் கைவிட்டான். இதன் மூலம் சோவியத் யூனியனின் சிகப்பு கரம் எதிர்ப்பின்றி கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நீள ஆரம்பித்தது. அமெரிக்க தலையீடு இல்லையென்றால், அப்போது போரினால் நலிந்திருந்த மேற்கு ஐரோப்பாவும் சோ.யூனியனின் குடையின் கீழ் வந்திருக்கும் என்பது என் ஊகம். இந்தப் போரில் சோ.யூ வென்றதற்கு காரணம் "steam roller" tactic தான். அதாவது, ஒரு வரிசை வீரர்களை எதிராளி கொன்றால் அடுத்த வரிசை முன்னே செல்லும். இதில் இரு வீரர்களுக்கு ஒரு துப்பாக்கி என்றளவு ஆயுதப்பற்றாக்குறை ஆரம்ப காலத்தில். கூட்டத்தை வைத்துதான் வென்றார்கள். மற்றபடி மிகவும் அட்வான்ஸ்டாக அதுவரை இல்லை. அதற்கு பின்னரே நவீனமயமாக்கப்பட்டு ஒரு சிறந்த படையாக "Red Army" விளங்கியது.

அதற்குப்பின்னர் பிரெஷ்னெவ், குருஷேவ் தலைமையில் "குளிர்ப்போரில்" ஈடுபட்டு "ஸ்பேஸ் ரேஸ்", "ஆர்ம்ஸ் ரேஸ்" எல்லாம் அமெரிக்காவோடு சரிக்குசமமாய் விளையாடி அசைக்க முடியாத வல்லரசாக இருந்தது சோவியத் யூனியன் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் உண்மை வேறுமாதிரி இருந்தது. தனிமனித சுதந்திரம் என்பது முழுக்கப் பறிபோனது. கிட்சன் டைனிங் டேபிள்களில் கூட வெளிப்படையாக அரசியல், சமூக விமர்சனங்களை வைக்கமுடியாத அளவிற்கு கட்டுப்பாடு. Komitet Gozudarstvennyi Bezopasnosti (KGB) - Committee for State Security என்ற சிவிலியன் அமைப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவர்களின் உள்நாட்டு உளவுப்பிரிவு மிகப் பிரபலம். ஆனால், இன்றளவும் பரவலாக அறியப்படாத ரஷ்யாவின் மிகப்பெரும் ரகசியம் GRU என்றழைக்கப்படும் Glavnoye Razvedyovatelnyie Upravleniye - Main Intelligence Directorate. கேஜிபியெல்லாம் ஜுஜுபி என்ற அளவிற்கு மிகப்பெரும் இராணுவ உளவு அமைப்பு இது. உலகெங்கிலும் இருந்தவர்கள் உள்ளூரில் இருக்கமாட்டார்களா என்ன? சோவியத் யூனியனில் இந்த இரு அமைப்புகளுக்கும் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. paranoia என்பது in-born ஆகவே ரஷ்யர்கள் இருந்தார்கள். அடுத்தவர்களையென்ன, சொந்தங்களையே நம்புவதற்கு பயந்தனர். அந்தளவிற்கு எங்கும் ஊடுருவியிருந்தன இந்த உளவுத்துறைகள்.

ஏதேனும் சாதனை செய்தாலும் அடக்கியே வாசிக்கவேண்டிய சூழ்நிலை. உலகின் முதல் விண்வெளிப்பயணரான யூரி ககாரின் இதற்கு அருமையான எடுத்துக்காட்டு. விமான விபத்தில் இறந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ககாரின் அவரின் அபரிமிதமான புகழின் காரணமாக அரசியல் கொலையே செய்யப்பட்டார் என்று சமீபத்தில் ஒரு டிவி சானலின் துப்பறியும் நிகழ்ச்சியில் சொன்னார்கள். இன்றைக்கு பெரிய அதிகாரியாக இருந்தவர், நாளை இருந்த தடமே இல்லாமல் காணாமல் போவார். எங்கே போனார்? என்ன ஆனார் என்று அதிகமாய் கவலைப்படும் நண்பர்களும், சுற்றத்தவர்களும் காணாமல் போவார்கள். இந்தியாவில் சுதந்திரமாய் வளர்ந்த நம்மாலெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அடக்குமுறைகள் அமலில் இருந்தன. வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் tag செய்யப்பட்டு பின் தொடரப்பட்டனர். புகைப்படம் எல்லா இடங்களிலுமெல்லாம் எடுத்துவிட முடியாது. மதம் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தது. பள்ளிகளில் லெனினும், ஸ்டாலினுமே நடமாடும் தெய்வங்கள், கட்சியே ஒரே தீர்வு என்று தினந்தோறும் போதனை செய்யப்பட்டது. இளவயதிலேயே கட்சிமேல் வெறி வளர்த்தது பெரிய சாதனை. இதனால் சோவியத் யூனியனின் கொள்கைகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக சிவிலியன்கள் உண்டானார்கள். மேற்கத்திய பொருளாதார மற்றும் அரசியல் முறை பற்றிக் குறை கூறுவதே ஊடகங்களின் வேலையாயிருந்தது.

நியு யார்க், லண்டனிலெல்லாம் உள்ள ஏழை neighbourhood-கள் மற்றும் கலாச்சார சீர்கேடு (western decadence) குறித்த பிரச்சாரப் படங்கள் மற்றும் இந்த வகை சீரழிவிலிருந்தெல்லாம் சோவியத் மக்களை சோஷலிஸமும், கட்சியும், லெனினும் தான் காப்பாற்றினார்கள் என்று நிதமும் போதிக்கப்பட்டது. நமக்கு வேடிக்கையாய் இருந்தாலும், அதை மக்களும் நம்பத்தான் செய்தனர். சென்ஸார், ஸ்பின் டாக்டர்கள் புண்ணியத்தால் சோவியத் யூனியனின் பொருளாதார மற்றும் இராணுவத் தோல்விகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆப்கான் போரின் முழுத்தோல்வியை பலரும் அறிந்தே இருக்கவில்லை. அமெரிக்காவுடன் போட்ட விண்வெளி, ஆயுதப்போட்டிகள் ஒரு புறமென்றால்... மறுபக்கம் பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை தங்கள் சோஷலிஸ சார்பு நிலையிலேயே வைத்திருக்க பணத்தை வாரியிறைக்க வேண்டியிருந்தது. அந்தச் செலவுகளுக்கு ஈடுகட்ட வழியில்லையென்றாலும் வீம்புக்காக போட்டி தொடர்ந்தது. புராதனமான கட்டமைப்பினால் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திரன் குறைந்தது. இழப்புகளை ஈடுகட்ட செயலற்ற நிறுவனங்களுக்கு subsidy என்ற பெயரில் அரசின் பணம் அள்ளிவீசப்பட்டது. தனியார் மயமாக்கலால் streamline ஆன மேற்கத்திய நாடுகள் போல் இல்லாமல் அரசு இயந்திரம் red tape-இல் சிக்கி செயலற்று efficiency என்பதில்லாமல் behemoth என்று சொல்வார்களே, அதே நிலைதான் கடைசியில். ஆனால், சாதாரணர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. இன்னமும் நல்லநிலையில் இருப்பதாகவே கருதினர் மக்கள். தெரிந்தவர்களும் அச்சுறுத்தலுக்கு பயந்து மௌனமாகவே இருந்தனர். 80-களின் இறுதியில் சில காரணங்களால் ஆளுகைக்குட்படுத்தப்பட்டிருந்த மத்திய ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரிவினைக்குரல் கேட்கத்தொடங்கியது. ஆப்கான் போரின் முழு பாதிப்பும் புரிய ஆரம்பித்தது. பொருளாதார சீர்கேடினாலும் sustain செய்யமுடியாத தன் சொந்த எடையின் காரணமாகவே உடைவதற்கென்றே காத்திருந்தது சோவியத் யூனியன். "யானைக்கு அடிசறுக்கினா எப்படி அடிபடும் தெரியுமோனோ? அதத்தான எல்லாரும் எதிர்ப்பாக்குறா! நடக்காதுடி! நடக்காது!" என்று கௌரவம் சிவாஜி ஸ்டைலில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் தான் வந்தனர் இருவர். ஒருவர் மேற்கூறிய காரணங்களின் கர்த்தா. மற்றவர் ஒரு அதிரடி ஆசாமி.


(தொடரும்)

குறிப்பு: எழுபதாண்டுகள் வரலாற்றை நான்கே பத்திகளில் சுருக்குவது இயலாத காரியம். ஆனால் மிகவும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டார்கள் என்பது அறியப்படவேண்டியது. மேற்கூறிய சோவியத் அடக்குமுறைகள் போன்ற விஷயங்கள் நான் என் ஆசிரியர்கள், ரஷ்ய நண்பர்கள் வழியாய் கேள்விப்பட்டவைதான். எவ்வளவு தூரம் உண்மை என்று அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. முன்னமே சொன்னபடி, முழுச்சுதந்திரத்துடன் வளர்ந்த நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாதவை. ரொம்ப dry யாகப் போகுதேன்னு நறநறப்பவர்கள் இன்னும் ஒரெயொரு பதிவு மட்டும் பொறுத்தருளுமாறு கேட்டுக்கறேன். ரஷ்யர்களின் மனநிலையை புரிந்துகொள்ள இவை உதவும் என்பதென் எண்ணம். டேங்க்ஸ் பா..

முந்தைய பாகம்

11 Comments:

  1. rv said...

    test


  2. கீதா said...

    ரஷ்யா பற்றி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்குங்க. சுருக்கமா எழுதணும்னு ரொம்ப சுருக்கிடாதிங்க. கொஞ்சம் விரிவாவே சொல்லுங்க. ரொம்ப நல்லா இருக்கு. அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க.

    கீதா
    http://geeths.info


  3. rv said...

    கீதா,
    மிக்க நன்றி...

    தொடர்ந்து வாங்க...


  4. முகமூடி said...

    நல்ல விறுவிறுப்பு ராமநாதன்... கதை மாதிரியே தெரியல... உண்மை சம்பவம் மாதிரியே இருந்தது ;-))

    // ஸ்டாலினுமே நடமாடும் தெய்வங்கள், கட்சியே ஒரே தீர்வு என்று தினந்தோறும் போதனை செய்யப்பட்டது

    இளவயதிலேயே கட்சிமேல் வெறி வளர்த்தது பெரிய சாதனை.

    மேற்கத்திய பொருளாதார மற்றும் அரசியல் முறை பற்றிக் குறை கூறுவதே ஊடகங்களின் வேலையாயிருந்தது //

    இதெல்லாம் படிச்சதும் நீங்க ஏதோ தமிழ்நாட்ட பத்தி சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன்...


  5. துளசி கோபால் said...

    நாங்கெல்லாம் ச்சின்னப்புள்ளிங்களா இருந்தப்ப 'சோவியத் நாடு'ன்னு ஒரு பத்திரிக்கை
    நல்ல வழவழப்பான தரமான பேப்பரிலே வீட்டுக்கே வந்துக்கிட்டு இருந்துச்சு. படங்கள்
    எல்லாம் ரொம்ப ஜோரா நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சிபற்றியெல்லாம் வர்ணிக்கும்.

    'இருந்தா அங்கே இருக்கணும் .ஏழை பணக்காரன் வித்தியாசமே கிடையாது. எல்லாரும் ஒரேமாதிரி.
    பட்டினியே கிடையாது அப்படி இப்படி'ன்னு நாங்களும் கொஞ்சம் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தோம்.
    அதனாலேதான் பலர், ஸ்டாலின் என்ற பேரு பிள்ளைங்களுக்கு வச்சாங்கன்னு நினைக்கிறேன்.

    தொடர் அருமையாத்தான் போகுது. நல்லா விளக்கமா எழுதுங்க.

    ( கேக்கணுமா? எழுதறது யாரு? என் தம்பியாச்சே!)


  6. rv said...

    பமக கண்ட ஆழக்குத்தரே,
    நல்லா குத்துறீங்க..

    //இதெல்லாம் படிச்சதும் நீங்க ஏதோ தமிழ்நாட்ட பத்தி சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன்... //
    ஏன் தலைவரே, எனக்கு உதை வாங்கி வெக்கணும்னு இவ்வள்வு மெனக்கெடறீரு?

    இது ஒரு வழக்கமான முகமூடி பின்னூட்டம்® என்று வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!


  7. rv said...

    அக்கா,
    //வளர்ச்சியெல்லாம் இருந்தது//

    ஆனா தேங்க ஆரம்பிச்சுட்டது.

    //.ஏழை பணக்காரன் வித்தியாசமே கிடையாது. எல்லாரும் ஒரேமாதிரி.
    பட்டினியே கிடையாது அப்படி இப்படி'ன்னு//
    அடுத்த பதிவு சோவியத் மகாத்மியம்தான்.. பாருங்க.

    //ஸ்டாலின் என்ற பேரு பிள்ளைங்களுக்கு வச்சாங்கன்னு நினைக்கிறேன்//
    நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால், நிஜத்தில் - I wud rather meet Hitler than Stalin in a dark alley on a rainy night!!


  8. குழலி / Kuzhali said...

    இந்த பதிவுகளை சற்று மேலோட்டமாக படிக்க இயலாது, இது எனக்கு பிடித்தமான பகுதி அதனாலேயே சற்று நேரம் ஒதுக்கி படிக்க வேண்டியுள்ளது, எனவே தான் வார இறுதிக்கு ஒத்தி வைத்துள்ளேன்.

    வாழ்த்துகள் இராமநாதன்

    தொடருங்கள்

    நன்றி


  9. rv said...

    நன்றி குழலி,

    தொடர்ந்து வருகை தாருங்கள்..


  10. தருமி said...

    F1 ரேஸ் மாதிரில்ல போகுது...


  11. rv said...

    என்ன தருமி, இந்த கிளாஸுக்கு ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க போலிருக்கு?

    இந்தத் தொடர்ல பதிவு 3, 4 எல்லாம் வந்திருச்சே, பாக்கலியா?

    ஸுஸுகா ரேஸ் பாத்தீங்களா? இந்த சீசனின் பெஸ்ட் அதுதான் இல்ல? உருப்படாத வில்லனேவ் மட்டுமில்லன்னா எங்க தலைவர் கலக்கிருப்பாரு.. எல்லா ரேஸிலேயும் ஏதாவது ஒரு ரூபத்தில சத்ரு வந்துடறாங்க! :(((


 

வார்ப்புரு | தமிழாக்கம்