Showing posts with label ஊர் பொறுக்கும் கலை. Show all posts
Showing posts with label ஊர் பொறுக்கும் கலை. Show all posts

238. பீட்டரின் கோர்ட்டில்... - 1

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.

சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்த படியால், இங்கேயே மூட்டை முடிச்சு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் (அதாவது ரொட்டி, சீஸ், சாலட் இன்னபிற) கட்டிக்கொண்டு சென்றோம்.

ஊரின் பெயர் Peterhof. டச்சு மொழியில் பீட்டரின் கோர்ட் (court) என்று அர்த்தம். ரஷ்யாவின் வெர்ஸாய் என்றும் அழைக்கப்படும் ஊர் இது. சுமார் நூற்றைம்பது நீரூற்றுகளும் (fountains) நான்கு தொடரூற்றுகளும் (Cascades) என அமர்க்களப்படுத்தும் இவ்வூரின் அரண்மனைகள் 'தண்ணி வச்சு காட்டும் வித்தைக்கு' நிகராக வேறொன்றை பூலோகத்தில் காணவியலாது என்று பில்டப் நிறையவே கொடுத்திருந்தார்கள்.

ரயில் நிலையத்தில் இறங்கினால் பேருந்துகள் அனைத்திலும் fountains என்று அடைமொழியில் எழுதிவைத்திருக்கிறார்கள். பத்துநிமிடத்தில் ராட்சத வாயிற்கதவுகளின் அருகில் எங்களை இறக்கிவிட்டார்கள். கடலை, சிப்ஸ், பாப்கார்ன் அதோடு வெகுநாளைக்குப் பிறகு பஞ்சுமிட்டாயும் (அநியாயம் என்னவென்றால் ஒரு மிட்டாய் 1 யூரோ! எனக்கு நம்மூர் எக்ஸிபிஷனும் பீச்சும் நினைவுக்கு வந்து தொலைத்தது) என தயாராய் வைத்திருந்த வஸ்துக்களோடு அரண்மனை காம்ப்ளெக்ஸினுள் நுழைந்தவுடன் வாயைப்பிளந்தபடி எடுத்த படம் இது...


Midway Fountainஇது முதலில் வரவேற்கும் Midway fountain

அரண்மனைக்கட்டிடம் வரையிலான இத்தோட்டத்திற்கு Upper Gardens என்று பெயர். இதைச்சுற்றி ஒரு ரவுண்ட் வந்தபடியே அரண்மனையை நோக்கி நடக்கத்தொடங்கினோம். அடுத்து வந்தது 92 மீட்டர் நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான Neptune Fountain.

Neptune FountainNeptune Fountain நடுவில்.. வேற யாரு? Neptune தான்...

ஜெர்மன் முறைப்படி அமைக்கப்படிருக்கும் இந்த நீரூற்று ஜெர்மனியால் இரண்டாம் உலகப்போரின் போது திருடப்பட்டு பின்னர் முக்கால்வாசி மீட்கப்பட்டு - என பீட்டர்ஸ்பர்கின் வரலாற்றுச்சின்னங்கள் அனைத்திற்குமான common வரலாறு இதற்கும் உண்டு.

நெப்ட்யூனைத்தாண்டினால் வந்தது Oak Fountain.
Oak Fountain
இந்த அப்பர் தோட்டம் ஜுஜுபி என்பது போலவும் அரண்மனைக்கு பின்னாலிருக்கும் லோயர் தோட்டம் தான் சுந்தரமானது என்றும் கூகிளாண்டவர் சூடமடித்து சத்தியம் செய்திருந்ததால் அதனை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

எல்லாருக்கும் ஏற்படும் வலமா இடமா பிரச்சனையில் அதன் அரசியல்களை விலக்கி - அப்போதைக்கு அரண்மனைக்கு வலது பக்கமே செல்வது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

திரும்பிய திசை அப்படியொன்றும் மோசமானதில்லை என்று ஆறுதலளிப்பது போல வரவேற்றது Fountain of the Square Pool.

Fountain of the Square Poolsஇதைத்தாண்டினால் வலதுசாரி என்பது எப்போதுமே கரடுமுரடானதல்ல என்பதாக அரசியல் பேசும் பாதை
The Righteous Path!

கீழெயுள்ள படத்தில் அரண்மனைக்கு மேலே இருப்பது Upper Gardens-ம் நாம் இதுவரை பார்த்த நீரூற்றுகளும். கீழே இருப்பது தான் Lower Gardens. அதைப்பற்றி அடுத்த பகுதியில்...

A View from the Top
பிகு: கடைசி படம் மட்டும் வலையில் சுட்டது

(தொடரும்)

213. மன்னர்களின் கிராமம்!

எழுத ஒண்ணும் மேட்டர் பெரிசா இல்லாததால போட்டோ போட்டு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன். Tsarskoye Selo (மன்னர்களின் கிராமம்) பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பல அரண்மனை வளாகங்களில் முக்கியமானது.

இந்த வளாகத்தில் இரண்டு முக்கியமான அரண்மனைகள் இருக்கின்றன. அவற்றின் உள்ளே பிறிதொரு நாள் செல்லலாம். அதுவரைக்கும் வெளியே சுற்றுவோம்.

மென்ஷிக்கோவ் என்பவருக்கும் சொந்தமான இடத்தை 1708-ல் பீட்டர் மன்னர் (Peter the Great) தன் மனைவி கேத்தரீனுக்கு பரிசாக அளித்தார். கேத்தரீன் ராணியானபின் உருப்பெற்றதே இந்த வளாகம். சுமார் 750 ஏக்கர்கள் பரந்துவிரிந்து கிடக்கிறது அரண்மனைகளும் சுற்றியுள்ள தோட்டங்களும். அரச குடும்பத்தினரின் கோடைக்கால வாசஸ்தலமாக சுமார் இரண்டு நூற்றாண்டுகள் பிரபலமாக இருந்தது. அதற்கப்புறம் என்னாயிற்று என்று கடைசியில் பார்ப்போம். அதற்கு முன்னர் வளாகத்தினுள் நுழைவோம்.

சீராக பராமரிக்கப்படும் தோட்டமும் அதிலுள்ள சிற்பங்களும் அட்டகாசமானவை. அரண்மனையின் பிராதான கட்டடத்துக்கு செல்லும் அழகிய பாதை இதோ...


1. The Main Alley




இதே பாதையில் முன்னே சென்றால் இரு குளங்களைக் காணலாம். வலப்புறம் இருப்பது கண்ணாடிக்குளம் என்றழைக்கப்படுவது. ஏன் என்று சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அதில் தெரியும் மஞ்சள் கட்டடம் அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட குளியல் குதூகலங்களுக்கானது. :) இரண்டாம் உலகப்போரின் போது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தாலும் 1950 களில் அசலுக்கு இணையான முறையில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டது.


2. The Mirror Pond and The Washroom of their Highnesses




முதலாவது எகேத்தரீன் ராணி (Catherine the Great) இங்கே தன் வாழ்க்கையின் பெரும்பாதியை கழித்த அரண்மனை. முற்றிலுமாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டு கண்ணைக்கவரும் ரஷ்யன் பரோக் வடிவமைப்பில் ஜொலிக்கிறது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஹெர்மிடாஜ் அரண்மனைக்கும் இதற்கும் வடிவமைப்பில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். இதன் பிரம்மாண்டத்தையும் நீலம், வெள்ளையுடன் தங்கம் ஜொலிப்பதை போட்டோவில் justify செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். உலகப்போரின் போது பெரும் சேதமடைந்த இந்த அரண்மனையில் மொத்தம் 57 அறைகள் இருந்திருக்கின்றன. இப்போதோ வெறும் 29 மட்டுமே பொதுப்பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளன. மற்றவற்றில் இன்னமும் வேலைகள் நடைபெறுகின்றன. இவ்வரண்மனைக்குள் இருக்கும் அறைகள் உலகின் மற்ற அரச குடும்பங்களையே கூனிக்குறுக செய்துவிடும் அளவுக்கு இருப்பவை. உதாரணமாக இங்கே சென்று பார்க்கலாம்.

அரண்மனையைச் சுற்றி ஆங்கில ஸ்டைலில் சிறிய structured parkஉம் அதைச் சுற்றி பரந்த landscaped parkஉம் இருக்கின்றன.


3. Baroque Facade of The Catherine Palace




சார்லஸ் கேமரோன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கட்டிடவியல் வல்லுநரை பணிக்கமர்த்தி உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் கட்டிட சின்னங்களை ஒரே இடத்தில் கொண்டு வர கேத்தரீன் ராணி விரும்பினார். விளைவு ரோமன் தூண்களும், பாபிலோனியா ஸ்டைலில் தொங்கும் தோட்டங்கள் என புதையலே இருக்கிறது.

4. Cameron Gallery









அருகிலுள்ள பெரிய ஏரியை சுற்றி அழகான நடைபாதை போட்டு வைத்திருப்பதால் நடக்க அருமையான இடம். பகோடாக்கள், எகிப்தின் ஓபெலிஸ்க்கள் என பல காட்சிகளில் முதன்மையானது முற்றிலும் மார்பிளால் ஆன இந்தப் பாலம்.

6. The Marble Bridge





டூரிஸ்ட்களின் தாகம் தீர்க்க அரண்மனை வாயிலில் முளைத்திருக்கும் கபேயிலிருந்து...
7. The Regular garden - view from the cafe





ஓரளவுக்கு சுத்தியாச்சா.. சரி கொஞ்சம் தாண்டி அரண்மனைக்கு பின் பக்கம் போவோம். சுற்றுலாப்பயணிகளின் கண்களில் இன்னும் அவ்வளவா படாதது இது. அலெக்ஸாண்டர் அரண்மனை. கேத்தரீன் பாட்டி தன் செல்லப்பேரன் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச்சுக்காக ஆசைஆசையா கட்டினது இது. கேத்தரீன் அரண்மனைக்கும் முற்றிலும் மாறுபட்ட வடிவில் இருக்கும் இவ்வரண்மனையும் அதைச் சுற்றியிருக்கும் தோட்டமும் இன்னமும் முழுதாக புணரமைக்கப்படவில்லை. காரணம் முற்றிலுமாக ஜெர்மானியர்கள் ஆக்கிரமிப்பின் போது அழிக்கப்பட்டதுதான்.

இவ்வரண்மனைக்கு இன்னும் ஒரு 'சிறப்பு' இருக்கிறது. பின்னால் இருக்கும் கேத்தரீன் ரஷ்ய அரச பரம்பரையின் பொற்காலத்தை காட்டுகிறது என்றால் இவ்வரண்மனையில் தான் அரச பரம்பரையே முடிவுக்கு வந்தது. 1917-ல் புரட்சிப்படையினரால் சைபீரியாவுக்குச் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அதே வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் நிக்கோலாஸ் II மன்னரும் அலெக்ஸாண்ட்ரா ராணியும் அவர்களின் ஐந்து குழந்தைகளும் இங்கேதான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். நிக்கோலாஸும் அலெக்ஸாண்டராவும் தோட்டங்களில் உலாவ பெருந்தன்மையாக அனுமதிக்கப்பட்டிருந்தார்களாம்! என்ன கொடுமை சரவணன் இது?

அவர்கள் நினைவாக ஒரு சிறிய மார்பிள் தக்டு இருக்கிறது அரண்மனையின் பிரம்மாண்டமான வாயிலில். அவ்வளவுதான். அரச பரம்பரையின் வரலாறு முற்றும் என்று நினைவுபடுத்தும் வகையில்.


8. Ruins of Alexander Palace




நியு யார்க் டைம்ஸில் 1917-ஆம் வருடம் நிக்கோலாஸின் வீட்டுச்சிறைப் பற்றி வந்த கட்டுரை.


அதிகாரப்பூர்வமான தளம்

----
இவற்றைத் தவிர அலெக்ஸாண்டர் லைசியம் (Lyceum) என்ற கல்வி நிறுவனமும் இங்கே இருக்கிறது. இதன் மிகப் பிரபலாமான மாணவர் அலெக்ஸாண்டர் செர்கெயெவிச் புஷ்கின். ரஷ்யாவின் முதன்மையான கவிஞர் என்று கருதப்பட்டவ்ர். இவரின் நூற்றாண்டை ஒட்டி 1930களில் இந்த ஊருக்கே புஷ்கின் என்று பெயர் சூட்டியது சோவியத் அரசு. பெரும்பாலான ஊர்களைப் போல் அதன் பழமையான பேரே மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது, சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு.

182. செட்டிக்கோட்டையில் ஒரு வெட்டி - 2

காரைக்குடி திரும்பி வரும் வழியில், ஒரு கிராமத்தில் பெரிய மைதானத்தில் பள்ளிக்குழந்தைகள் உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். லைவ் வர்ணனை எல்லாம் லவுட் ஸ்பீக்கரில் அமர்க்களப்பட்டுக்கொண்டு ஏதோ பள்ளி விழா போலிருந்தது. வேடிக்கை பார்க்க ரெண்டு நிமிடம் நிறுத்தினால் முன்பு அவ்வழியே சென்றபோது தென்படாத போர்ட் ஒன்று தென்பட்டது. அரண்மனைச் சிறுவயல் ஜமீன்தார் ப.முத்துராமலிங்கத்தேவர் நினைவுச்சின்னம் என்று.

மெயின் ரோட்டிலிருந்து சற்றே உள்ளடங்கினாற்போல ஒரு பீடம். அதன் மேல் ஒரு bust. தோளுக்கும் தலைக்கும் சம்பந்தமில்லாதாவாறு மேற்படி தேவரின் ஜென்மப்பகையாளி ஒருவர் செய்த காரிகேச்சர் போன்று இருந்ததை பார்க்க அருகில் சென்றால் வழக்கமாய் கவனிப்பாரற்று கிடக்கும் தமிழக சிலைகளுக்கு நடக்கும் அனைத்து டெக்கரேஷன்களோடும் சிரித்துக்கொண்டிருந்தார் தேவர். இவர் தான் அந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரா என்று தெரியவில்லை. கண்டதேவி ஒன்றும் அவ்வளவு தூரத்தில் இல்லை. அவராகவும் இருக்கலாம் என்று மேலும் விவரமாக போர்ட் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் தேடினால் இன்னும் சற்று உள்ளடங்கினாற்போல ஒத்தையடி பாதையின் கடைசியில் ஒரு வேலி. அதில் வரிசையாக துணிமணிகள் காயப்போடப்பட்டிருந்தன. அவற்றை விடவும் கண்களை பறித்தது சிதிலமடைந்த ஒரு மண்டபமும் தொல்லியல் துறையின் பளிச்சென்ற அறிவிப்புப்பலகையும். முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் அந்த மண்டபம் எந்நேரம் இடிந்து விழும் என்கிற துர்பாக்கிய நிலையிலும் சகலவிதமான எண்டர்டெயின்மெண்ட் செண்ட்ராக சிலர் பயன்படுத்திவருகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் சுற்றிலும்.






போர்டிலிருந்த விவரம்: சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டு பின் மருதுபாண்டியர்களிடம் வந்துள்ள பெரிய கோட்டை. அவர்கள் பலசமயம் இங்கே தங்கி ஆங்கிலேயருக்கு எதிராய் போர் தொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட கோட்டை இன்றைக்கு வெறும் சிதிலமடைந்த மண்டபமாய் சுருங்கியிருக்கிறது. தமிழகத்தில் சுமாரான ஷேப்பில் கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். சேர சோழ பாண்டிய காலத்து சமாச்சாரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. கோயில்கள் நிலைத்திருக்கும் அளவிற்கு கோவின் இல்லங்கள் நிலைக்காமல் போன மர்மம் என்னவோ?

எதிர்பாராமல் மருதுபாண்டியர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு லொகேஷனை பார்த்த திருப்தி. ஆனால் மருதுபாண்டியர்கள் பசிக்கு உதவுவார்களோ? அதனால் காரில் ஏறிய க்ஷணமே மருதுபாண்டியரை மறந்து சுபலட்சுமியைத் தேடி பயணம் தொடர்ந்தது. மதியம் ரெண்டு மணிக்கு ரெஸ்டாரண்டின் வாசலிலேயே நான்கு டேபிள் போட்டு கூரை வேய்ந்த உணவுக்கூடத்தில் அமர்ந்துகொண்டோம். செட்டிநாடு அரண்மனைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுக்கும் பிரபலமாயிற்றே. குழிப்பணியாரம், ஆப்பம், செட்டிநாட்டு 'கர்ரி'கள் பல. சைவபட்சினிகளுக்கு ஐட்டம்ஸ் கம்மிதான். மெட்ராஸிலும் இன்னும் எங்கெங்கேயெல்லாமோ செட்டிநாடு உணவு சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் ஊரில் சாப்பிடுவது போல வருமா என்று நல்ல பசிவேளையில் சித்தம் கலங்கி கனவு கண்டுகொண்டிருந்த எனக்கு பேரிடியாய் இன்முக சர்வர் வந்து மதியம் மூன்றுமணி மேல் சந்தியா வேளையில் சுபயோக நேரத்தில்தான் செட்டிநாடு உணவு கிடைக்கும் என்றார். இதைக் கேட்டு கடுப்பான என்னிடம் காரைக்குடியில் சாப்பிடும் நூடுல்ஸ் கூட செட்டிநாட்டு உணவுதானே என்று நேரம் காலம் புரியாமல் வேறு கடித்தார். ஒருவழியாக புலாவும் சில்லி பனீரும் அடித்துவிட்டு அடுத்து ஆயிரம் ஜன்னல் வீட்டிற்கு செல்வோமே என்று முடிவெடுத்தோம்.

சர்வர் அந்த ஹோட்டலுக்கு பக்கத்தில் தான் இருப்பதாக வேறு சொன்னார். வழி கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறையே ஆயிரம் ஜன்னல் வீடு என்று போர்டில் கோடு போட்டு ரோடு காண்பிக்கிறார்கள். ஒருவழியாக கண்டுபிடித்துச் சென்றால் வீடு ஒன்றும் அவ்வளவு பெரிதாக இல்லை வெளியிலிருந்து பார்க்க. இதில் எப்படி ஆயிரம் ஜன்னல் என்று எண்ணியவாறே கதவைத்தட்டினேன். ஒரு சிறுமி வந்தாள். இது ஆயிரம் ஜன்னல் வீடா என்றேன். சற்று முழித்துவிட்டு "யூ மீன் தவுசண்ட் விண்டோ ஹவுஸ்?" "யா" "யா, திஸ் இஸ் இட்". நாங்கள் வெளியூரிலிருந்து வந்த சுற்றுலாப்பயணி என்று அவளுக்கு புரியவைத்து சுற்றி உலாவலாமா என்றால் "திஸ் இஸ் அ ப்ரைவேட் ஹவுஸ்" என்று போடு போட்டாள். என்ன அம்மணி, ஊர் பூராவும் போர்ட் வைத்திருக்கிறார்களே, என்ன வெளியிலிருந்து பார்த்துச் செல்வதற்கு மட்டும்தானா என்று நான் கேட்டு அவளுக்கு புரியவா போகிறது என்று விட்டுவிட்டேன். வெளியிலிருந்தே பார்த்து ஒரு கும்பிடு போட்டாகிவிட்டது.

தமிழக சுற்றுலாத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரின் நக்கலை நினைத்து கோபம் வந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. சுபலட்சுமி ஆசாமியும் முன்னரே சொல்லியிருக்கலாம். மறுபடியும் காரைக்குடியில் எங்களுக்குத் தெரிந்த ஓரே ஜீவன் சுபலட்சுமி சர்வரைப் பார்த்தால் 'சார், வேணாக்க ஆத்தங்குடி பெரிய மைனர் வீடு பாருங்களேன் ஆனால் திறந்துவிடுவார்களா என்று தெரியவில்லை' என்றார். அது எங்கேஎன்றால் சுமார் இருபது கிலோமீட்டர் செல்லவேண்டும் என்றார். ஆயிரம் ஜன்னல், ஏ.எம்.எம் போன்ற இன்னொரு அனுபவம் தேவையில்லை என்பதால் கானாடுகாத்தானுக்குச் செல்வோமென்று கிளம்பியாகிவிட்டது. காரைக்குடியிலிருந்து பத்துகிலோமீட்டரில் தான் அரியக்குடி இருக்கிறது. கர்நாட இசை லிஜண்ட் அரியக்குடி இராமானுஜையங்கார் ஊரான இதில் உள்ள நகரத்தார் கோயில் பிரசித்தம். முன்பொருசமயமே போயிருந்ததால் அதுவும் ஸ்கிப். அந்தக்கோயில் ஏன் நினைவுக்கு வருகிறதென்றால் கோபுரத்தின் மேல் அனுமாரா/கருடனா தெரியவில்லை. ஒருவர் இருப்பார். அவரைப் பார்த்து நாம் தேங்காயைக் கொண்டு சுவற்றில் போலிங்க் செய்யவேண்டும். தமாஷாக இருக்கும்.

எனிவே, இரண்டு நாள் தங்கியிருந்து பார்க்க விஷயம் இல்லாததால் பாக்கியிருந்த கானாடுகாத்தானைப் பார்த்துவிட்டு கிளம்புவதாக முடிவுசெய்தோம். அங்கேயாவது இதுவரை ஓவர் பில்டப் கொடுத்து கண்ணிலேயே காட்டாமல் விட்ட செட்டிநாட்டு அரண்மனையை பார்க்கவிடுவார்களா என்பது எம்.ஏ.எம் மீது பாரத்தைப் போட்டு கிளம்பினோம்.

(தொடரும்)
---
இன்னும் காளையார்கோயில் படங்கள்







தொடர் என்று போட்டதால் மூன்றாவதாக ஒன்று இழுக்க வேண்டிய நிர்பந்தம். பொறுத்தருள்க.

--------
எம்.ஏ.எம் அருள்செய்தாரா இல்லையா? 'தாவணி போட்ட தீபாவளி'யும் 'கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா' என்று ஆடிய வண்ணத்துப்பூச்சியும் ஆடி அருளிய புனிதத்தலத்தை நான் காண முடிந்ததா இல்லையா? காத்திருப்பீர்! :)

182. செட்டிக்கோட்டைக்குள் ஒரு வெட்டி - 1

பணியிடத்தில் பழுதுவேலைகள் நடைபெறுவதால் இரண்டு நாள் விடுமுறை என்றாயிற்று. சரி, நமது வழக்கமான ஹாலிடே டெஸ்டினேஷனுக்கு செல்வோமென்றால் (அதாங்க கொடைக்கானல் - இந்த ஊருக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம்னு நினைக்கிறேன். வருஷா வருஷம் பக்தர்கள் சபரிமலை போற மாதிரி நமக்கு கொடைக்கானல். இனிமேல் அங்க பார்க்க ஒண்ணுமே இல்லாவிட்டாலும் ஹோட்டலில் தூங்கி, கோக்கர்ஸ் வாக்கில் நடந்து, தூறலில் போட்டிங் சென்று, கார்ல்டனில் புப்பே கொட்டிக்கொண்டு இப்படி பலது பொழுது போவதே தெரியாமல் போகும்) அங்கே மதியநேரங்களில் வெயில் பட்டையை கிளப்புகிறது என்று நண்பர்கள் தகவல் சொன்னார்கள்.

இரண்டு நாட்களுக்கு சுற்றி வருவதுபோல பக்கத்தில் வேறு என்ன இருக்கிறது என்று அலசு அலசென்று அலசினால் ஒண்ணுமேயில்லை என்று நொந்துபோனேன். எதேச்சையாக எங்கள் ஊர் சோழன் சிலைக்கு பக்கத்தில் பெரிதாக தமிழ்நாடு சுற்றுலாக்கழகத்தின் விளம்பரம் பார்க்க நேரிட்டதில் (பல வருஷங்களாக துருப்பிடித்து அங்கேயேதான் இருக்கிறது - சிக்னலில் நின்று சென்றால்தானே கண்ணில்படும்) செட்டிநாட்டு பக்கம் சென்றால் என்ன என்று பல்ப் எரியவே காரைக்குடி பற்றி நெட்டில் தேடினேன்.








செட்டிநாடு என்று அறியப்படும் ஏரியா சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி போன்ற நகரங்களை உள்ளடக்கியது. பிரசித்திபெற்ற ஆலயங்களான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயமும், குன்றக்குடி முருகன் கோயிலும், காளையார்கோயிலும் - இவை தவிர நேமம், இளையாத்தன்குடி உள்ளிட்ட ஒன்பது நகரத்தார் கோயில்களும் இருக்கின்றன. நகரத்தார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்றும் அழைக்கப்படும் தமிழகத்தின் பெரும்பணக்காரர்கள் பலரை உள்ளடக்கிய சமூகம் செட்டியார்களுடையது. அந்தக்காலத்திலேயே பர்மாவுக்கு சென்று தேக்குமர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் தெற்காசியா முழுதும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மூலம் சொல்லிமாளாத செல்வம். சேர்த்த செல்வத்தை வைத்து வீடுகளை கோட்டைகளைப் போல இழைத்து இழைத்து கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தெரு நீளத்திற்கு. இப்படியே மைல்நீளங்களுக்கு நீளும் குறுகலான தெருக்கள். கிராமங்களிலெல்லாம் பெருநகரங்களிலும் காணக்கிடைக்காத சைசுகளில் அரண்மனைகள். உண்மையில் ராஜாக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதானால் 'செட்டிநாடு சிமெண்ட், அண்ணாமலை பல்கலைக்கழகம்' எம். ஏ. எம். இராமசாமி ராஜா, 'ஸ்பிக்' ஏ. சி. முத்தையா, முருகப்பா குழுமத்தின் பரம்பரை வீடு எனத் தமிழகத்தின் செல்வந்தர்கள் பலரின் அரண்மனைகள் இங்கேதான் இருக்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படும் கையேடுகளில் இடம்பெற்றிருக்கும் இந்த ஏரியா நம்மூரில் ஏனோ அவ்வளவு ஆர்வமாக ப்ரமோட் செய்யப்படுவதில்லை தமிழக அரசால். தமிழ்நாடு டூரிஸம் வலைத்தளத்தையும் இன்னும் சில வலைப்பூக்களையும் மட்டுமே நம்பி கிளம்பியாகிவிட்டது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை வழியாக செல்லவேண்டும்.புதுக்கோட்டையில் சாப்பிட நல்ல ஓட்டல் கூட கிடையாது. வழியில் நிறுத்திக்கேட்டால் ஊரிலேயே நல்ல ஓட்டல் கோர்டுக்கு பக்கத்தில் உள்ள "லெட்சுமிநாராயண பவன்" என்பார்கள். நம்பாதீர்கள். அங்கு சாப்பிடுவதற்கு பதில் பட்டினியாகவே கிடக்கலாம்.










புதுக்கோட்டையிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டரில் இருக்கிறது திருமயம். திருமயம் கோட்டை மிகவும் பிரபலமானது. அடையாளம் காண்பது ஒன்றும் கஷ்டமில்லை. மிகவும் சக்திவாய்ந்த கோட்டை பைரவர் கோயிலில் நிறுத்தி வணங்கிவிட்டுத்தான் அனைத்து வண்டிகளுமே செல்லும். கோட்டை பெரும்பாலும் சிதிலமடைந்தே இருக்கிறது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் சிவன் மற்றும் விஷ்ணுவின் கோயில்கள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணு கோயிலை பார்த்திருந்தபடியால், ஞானாம்பிகை உடனுறை சத்தியகிரீஸ்வரரின் திருக்கோயிலுக்கு சென்றோம். சமணம் விடுத்து சைவம் தழுவிய மகேந்திர வர்ம பல்லவன் கட்டிய குடவரைக்கோயில்களில் ஒன்று இது. காலை எட்டு மணிக்கு குருக்கள் கிடையாது. சிப்பந்திகள் ஒருவர் கூட இல்லை. நாங்களும் ஒரே ஒரு வி.வி.ஐ.பி மட்டுமே. சந்திப்பின் அடையாளமாக ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். அந்த வி.வி.ஐ.பியும் "எக்ஸார்ஸிஸ்ட் போல அவுட் ஆப் போகஸில்" விழுந்துதொலைக்காமல் படத்தில் தெளிவாகவே விழுந்திருக்கிறார். மிகவும் அமைதியான சூழல். பிரகாரத்தை சுற்றிவந்தபோது கண்ட கஜலக்ஷ்மியின் அழகு சொக்கவைக்கும்படி இருந்ததால் அவளும் கோச்சுக்காமல் கேமராவில் வந்தமர்ந்தாள். பொறுமையாக படங்கள் எடுத்துக்கிளம்பும்வரை ஆள் அரவம் இல்லை. சத்தியகீரிஸ்வரனுக்கு ஒரு நன்றி சொல்லி கிளம்பினால் அடுத்த ஸ்டாப் பள்ளத்தூர்.

மேலே இருக்கும் போர்டை உற்று நோக்கினீர்களானால் பள்ளத்தூரில் செட்டியார்களின் வீடுகளைச் சுற்றிப்பார்க்கலாம் எனறு பொருள்படும்படி இருக்கும். பள்ளத்தூரில் விசாரித்தால் அப்படி ஒருவீடும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஓரேயொருவர் மட்டும் ஏ.எம்.எம் ஹவுஸ் கேட்டுப்பாருங்கள். விட்டால் விடலாம் என்று சொல்லவே குறுகலான தெருக்களுக்குள் நுழைந்து ஒருவழியாய் கண்டுபிடித்தோம். முகப்பு சிறியதாய் தான் இருக்கிறது. ஏ.எம்.எம் என்றவுடன் யாரென்று ஸ்ட்ரைக் ஆகவில்லை. அப்புறம் சிலநிமிடங்கள் கதவைத்தட்டியதன் பயனாய் சற்றே சோர்வுடன் ஒரு சிப்பந்தி பிரத்தியட்சம் ஆனார். இப்படி அகாலங்களில் காமிராவும் கையுமாய் டூரிஸ்ட்கள் வந்துவந்து களைத்திருந்தார் போலும். அவர் இது ஏ. எம். முருகப்ப செட்டியார் வீடு என்று சொன்னபின்பும் புரியவில்லை. பின்னர் 'டி.ஐ. சைக்கிள்ஸ் தெரியுமா' என்று கேட்டார். அப்போதுதான் Tube Investments of India Ltd, Carborundum Universal Ltd, Coromandel Fertilisers Ltd, EID Parry India, Parry Agro Industries, Cholamandalam DBS Finance (இது பாதிதான்.. முழுசு இங்கே)என்று நீண்டுகொண்டே போகும் ஏழாயிரம் கோடிரூபாய் மதிப்புள்ள தென்னிந்தியாவின் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பில்லியன் டாலர் தொழில் சாம்ராஜ்யங்களில் பிரதானமான முருகப்பா குரூப்புடைய வீடு என்று என் மூளையில் பல்ப் எரிந்தது. 1902-ஆம் ஆண்டு இங்கு பிறந்த ஏ.எம்.எம். முருகப்ப செட்டியார் தென்னிந்தியாவின் தொழிற்துறை முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தவர். சென்ற வருடம் இந்திய அரசு இவரின் தபால்தலையைக் கூட வெளியிட்டது. விஷயத்துக்கு வருவோம். 'இது தனியார் வீடு சார். சுற்றிப்பார்க்க விடுவதில்லையே' என்று வருத்தப்பட்டார். பின்னர் எப்படி தேடி இங்கே வந்தீர்கள் என்றதற்கு இண்டர்நெட், ப்ளாக் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை என்ற நான் சொன்னபோது தங்களைக் கேட்காமலேயே போர்ட் வைத்து வலையில் போட்டது எப்படி என்று நொந்துபோனார். இன்னும் எத்தனை ஆயிரம்பேர் வந்து விடுமுறை நாள் தூக்கத்தை கலைப்பார்களோ என்ற கவலையாக இருந்திருக்கும். பள்ளத்தூரில் ஒரு செட்டிநாட்டு அரண்மனைகூட சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்துவிடப்படவில்லை என்று ஆணித்தரமாகச் சொன்னவர் 'கானாடுகாத்தான் சென்றால் எம்.ஏ.எம்.இராமசாமி ராஜாவின் அரண்மனையைப் பார்க்கலாம். அதுதான் இப்பகுதியிலேயே மிகப்பெரியது' என்று சொல்லியதால் ஏமாற்றத்துடன் (இவ்வளவு பெரிய தொழிலதிபரின் வீட்டு வாசல் வரை வந்து திரும்பிய சோகம்தான்) கிளம்பி காரைக்குடி சென்றோம்.

காரைக்குடியில் அனைவரும் "சுப்பலட்சுமி பேலஸை" ரெகமண்ட் செய்தார்கள். டிபன் பரவாயில்லை. இன்முகத்துடன் சர்வர். வழி சொல்வதில் மிகவும் உதவியாக இருந்தார். பக்கத்தில் சுப்பலட்சுமி மஹாலில் ஒரு கிறிஸ்தவ நிட்சயதார்த்தம். இவை சர்ச்களில் மட்டுமே நடக்குமென்று எண்ணிவந்த எனக்கு, விருந்துவைத்து நாதஸ்வரம் மேளம் கொட்டி ஒரு பாதிரியார் மந்திரங்கள் ஓத கல்யாண மஹாலில் நடந்தது கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. . அதற்கு பிறகு வழக்கம் போல 'முன்பே வா என் அன்பே வா' என்று ஷ்ரேயா கோஷல் வந்து மந்திரம் ஓதி என்னை கிளுகிளுக்கவைத்துவிட்டு சென்றார்.

மணி பத்தரை ஆகிவிட்டிருந்தபடியால் கானாடுகாத்தானை ஒத்திப்போட்டுவிட்டு மதியம் நடைசாத்துமுன் காளையார்கோயில் சென்றுவிடுவது என்று முடிவு செய்து கிளம்பினோம். காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் திருப்பத்தூருக்கு பிரியும் சாலையில் மானகிரி என்ற ஊர் உள்ளது. அதை அடைந்து மெயின்ரோட்டில் இடதுபுறமாய் கள்ளல் செல்லும் சாலையில் திரும்பி கள்ளலை அடைந்தால்.. காளையார்கோயில் என்ற ஊருக்கு வழிசொல்லவேண்டும் என்று திடீர் ஞானோதயம் வந்ததாய் த.அ.நெடுஞ்சாலைத்துறை போர்ட் வைத்து வழிசொல்கிறது. காரைக்குடியிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் இருக்கும்.







காளையார்கோயில் என்று சொன்னவுடன் நம்மில் பெரும்பாலோர்க்கு மண்டைக்குள் மணியடித்திருக்கும். ஏனென்றால் மருதுபாண்டிய சகோதரர்களை தூக்கிலிட்ட இடம் என்று வரலாற்றில் படித்து வழக்கம்போல மறந்திருப்போம். கோயிலின் விசேஷத்தை பார்த்துவிட்டு மருதுபாண்டியரிடம் வருவோம். இந்தியாவிலேயே மூன்று சிவன் சந்நிதிகள், அவர்களுக்கு மூன்று அம்பிகைகள் என்று இருக்கும் ஒரே கோயில் இதுதான். சொர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூவர். இதில் சொர்ணகாளீஸ்வரர் பிரதானம். ஊர் மட்டத்திலிருந்து நான்கு அடி கீழே தங்கக்கவசம் சாத்தப்பட்டு துளியூண்டு இருக்கிறார். இவரை வணங்கினால் பிள்ளைபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். வரகுணபாண்டிய மன்னன் மீனாட்சியை தினமும் தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டானாம். காளையார்கோயிலில் தங்கியிருந்தசமயம் அவன் பத்து மாற்று குதிரைகள் உதவியுடன் மதுரைக்குச் சென்று வணங்கி திரும்பி வருவானாம். ஆனால் ஒருநாள் அவ்வாறு செல்லமுடியாமல் போன காரணத்தால், மதுரை சுந்தரேஸ்வரரே மீனாட்சியைக் கூட்டிக்கொண்டு அவனைத்தேடி வந்ததாக புராணம்.

அஷ்டமாகாளிகள் காளையார்கோயிலை சுற்றி அருள்புரிவதால் காளிகளுக்கு ஈசனாய் அமர்ந்தவர் காளீஸ்வரர் ஆனார். இவருக்கு 1914 ஆம் ஆண்டு ஒரு செட்டியார் பெருமகனார் தங்கத்திலேயே பள்ளியறை செய்து பிள்ளைப்பேறு பெற்றார் என்று வரலாறு.

இப்போது மருதுபாண்டியர்கள். 1733-ஆம் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஒன்றாய் இருந்த இராமநாதபுரம் சமஸ்தானத்தை இரண்டாக பிரித்து ஒன்றை இராமநாதபுரம் சேதுபதிகளுக்கும் மற்றொன்றை சிவகங்கை வம்சத்தினருக்கும் கொடுத்தனர். முத்து வடுகநாதத்தேவரின் தளபதிகளாய இருந்த மருதுபாண்டியர், தேவரின் வீரமறைவுக்குப் பிறகு வேலுநாச்சியாரின் ஆக்ஞைப்படி ஆட்சியைப் பெற்றார்கள். ஆன்மிகப் பணிகளில் மிகவும் ஈடுபாடு கொண்ட அவர்கள் காளையார்கோயில் கோயில் பிரதான கோபுரத்திருப்பணி செய்திருந்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தப்பித்தலைமறைவாகிய நிலையில், ஆங்கிலேய அரசு மருதுபாண்டிய சகோதரர்களைப் பிடிக்க இயலாமல் தவித்தது. வழக்கம்போலவே சதித்திட்டம் சூப்பராய்த் தீட்டி அதன்படி மருதுபாண்டிய சகோதரர்கள் சரண்டர் ஆகவில்லையெனில் அவர்கள் திருப்பணி செய்த கோயில் கோபுரத்தை பீரங்கிகளைக் கொண்டு தகர்த்துவிடுவதாய் மிரட்டியது. தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, சிவன்கோயில் கோபுரம் அழியக்கூடாது என்று எண்ணிய மருதுபாண்டியர் சரணடைந்தார்கள். அவர்களைத் தூக்கிலிட்டு அவர்களின் கடைசி விருப்பபடியே காளையார்கோயில் சிவ சந்நிதியைப் பார்த்தபடியே அவர்களைப் புதைத்தது ஆங்கில கம்பெனி.

கோயிலுக்காக உயிரையே கொடுத்த சகோதரர்களுக்கு கோயிலுக்குள்ளேயே சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை நம்மைப்போன்ற பொதுமக்களிடமிருந்து பாதுகாக்க இரும்பு க்ரில்லும் போடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமான கோயிலை ஆற அமர சுற்றி வர சுமார் ஒன்றரை மணிநேரமாவது பிடிக்கும். அங்கு இருந்த குருக்கள் (பெயர் மறந்துவிட்டது) மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சந்நிதிக்கும் கூட்டிச்சென்று புராணம் சொல்லி, தேவாரம் பாடி - அனுபவம் இனிமையாய் இருந்தது. மருதுபாண்டியருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதாகக்கேள்வி.

கோயிலை விட்டுக்கிளம்பி ரோடு மாறிச் சென்றால் ஒரு ஆச்சரியம். அட்டகாசமான மண்டபத்துடன் தெப்பக்குளம். கொஞ்சம் நிறையவே க்ளிக்கிவிட்டு திரும்ப பேக் டு காரைக்குடி சுப்பலட்சுமி.

(தொடரும்)

180. திருவையாத்து தண்ணிப்பக்கம் - 2

இன்று யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

சங்கீத உலகின் ஸ்டார்கள் இவர்கள். பலரும் டிவியில் நேரில் பார்த்து பழகிய முகங்கள் தான். இதில் பலர் வாரிசுகள் என்பது கூடுதல் சிறப்பு. வாரிசு என்றாலும் தனித்தன்மையும் இருந்தாலேயொழிய வேலைக்குதவாது என்பதற்கு அருமையான உதாரணமும் இருக்கிறது. அது யார் என்று சொல்லி எதற்கு வம்பை விலை கொடுத்து வாங்குவானேன். நேராக கே.ஆர்.எஸ் ஸ்டைலில் இவர்கள் யாரென்று தெரிகிறதா பாருங்களேன்...

1. சிலவருடங்களுக்குமுன் ஓஹோவென்று பேசப்பட்ட இளம்பாடகர். இப்போது வெளியில் அவ்வளவு தெரியாவிட்டாலும் அருமையான குரல்வளம். அப்படியே பக்கவாத்தியக்காரர் யாரென்று தெரிகிறதா? மிருதங்க சக்கரவர்த்திகளில் ஒருவர் என்றே சொல்லலாம்.




பாடகர்: SP இராம்

மிருதங்கிஸ்ட்: ஸ்ரீமுஷ்ணம் இராஜாராவ்

சரியாக சொன்னவர்கள்:
பாடகர்: கொத்ஸ், கே.ஆர்.எஸ்



2. வளர்ந்துவரும் இளம்பாடகி. இவரின் தாயார் ஒரு பிரபலமான வாத்திய இசைக்கலைஞர்.




சாருலதா மணி
பிரபல வீணை இசைக்கலைஞர் ஹேமலதா மணியின் மகள்


விடைசொன்னவர்: கே.ஆர்.எஸ்

3. இந்த சீசனின் ஹாட்டஸ்ட் டாலண்ட் இந்த 24 வயது இளைஞர்தான். இவரின் பரம்பரையும் பெரிய பரம்பரை. யார் இவர்? மிருதங்கக்காரர் முதல் படத்தில் இருப்பவர்தான். இதிலாவது தெரிகிறதா பாருங்கள். அப்படியே கூடவாசிக்கும் பிரபல வயலினிஸ்ட் யாரென்று சொல்வோருக்கு தனிஷொட்டு இருக்கிறது. :))





பாடகர்: சிக்கில் குருசரண் - சிக்கில் சகோதரிகள் லீலா குஞ்சுமணி- லீலாவின் பேரன்
வயலின்: விட்டல் இராமமூர்த்தி

விடை சொன்னவர்கள்
பாடகர்: கே.ஆர்.எஸ், கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், இராதா ஸ்ரீராம்
வயலின்: கொத்ஸ்


4. இப்படத்தில் நீலக்கலர் சட்டையில் உள்ளவரைத்தெரியாமல் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது. பாடிக்கொண்டிருப்பவர் யாரென்று சொல்லுங்களேன். இவரை இதுவரையில் பார்க்காவிட்டாலும் கேட்டாவது இருப்பீர்கள். இவரின் தந்தை மிகவும் பிரபலமான 'பாடகர்'. அவரைத்தெரியாமலும் இங்கே யாரும் இருக்கவே மாட்டீர்கள் என்று சத்தியம் செய்கிறேன்.




பாடகர்: விஜய் யேசுதாஸ்

நீலக்கலர் சட்டை: குன்னக்குடி வைத்தியநாதன்

சரியாகச்சொன்னவர்கள்: சின்ன அம்மணி, கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், கே.ஆர்.எஸ், இராதா ஸ்ரீராம், ஜிரா

5. இப்படத்தில் உள்ள மூவரில் பிரபலம் யார்? இவருடைய தாத்தா கர்நாடக சங்கீதத்தில் தமிழிசைக்கே தாத்தா போன்றவர். அவர் யார்?



நடுவில் இருக்கும் மீசைக்காரர் - பாடகர் பாபநாசம் அசோக் ரமணி

பாபநாசம் சிவனின் பேரன்

விடையளித்தவர்கள்: கொத்ஸ், ஸ்ரீதர் வெங்கட், இராதா ஸ்ரீராம்




6. நவீன வயலின் மேதையென்றே சொல்லலாம். கட்டை பிரம்மச்சாரி. இவர் தாத்தாவும் வயலின் லிஜண்ட்.




ஆர். கே. ஸ்ரீராம்குமார்
வயலின் மேதை ஆர்.கே. வெங்கட்ராம சாஸ்திரியின் பேரன்

சரியாகச் சொன்னவர்கள்: கே.ஆர்.எஸ், கொத்ஸ்


7. இப்படத்தில் உள்ள ஒருவர் சீ.ஏ பட்டதாரி. கணீரென தொண்டையுடன் இவர் பாட ஆரம்பித்தால் அமர்க்களப்படும். இருவரில் யார்? பெயர்? (கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் தான். முயற்சிப்பதில் தவறில்லையே)



வலதில் உள்ளவர்: பாடகர் ஸ்ரீராம் கங்காதரன்


என்ன பரிசு என்று கேட்கிறீர்களா? உண்டு. ஆனால் என்னவென்று பின்னால் சொல்கிறேன்.

--------------------------------
11 ஜனவரி 2007

முதல் பரிசு:
இலவசக்கொத்தனார்: 9 புள்ளிகள் (வயலினாரைச் சொன்னதற்காக ஷொட்டு சொன்ன மாதிரியே :))

இரண்டாம் பரிசு:
கே.ஆர்.எஸ்: 8 புள்ளிகள்

மூன்றாம் பரிசு:
இராதா ஸ்ரீராம், ஸ்ரீதர் வெங்கட்: 5 புள்ளிகள்

ஆறுதல் பரிசு:
ஜிரா, சின்ன அம்மணி

நல்ல பரிசை ஏன் தனியாகக் கொடுப்பது? எல்லோருக்குமே தந்துவிடுகிறேனே.


முதல் பரிசாக கொத்ஸுக்கு இதோ விசாகா ஹரியின் இரண்டரை மணி நேர சொற்பொழிவு தியாகராஜரைப் பற்றி.

1, 2, 3, 4


இரண்டாம் பரிசாக கே.ஆர்.எஸ்-க்கு ஓ.எஸ். அருணின் கண்ணன் பாட்டு!
1
2


மூன்றாம் பரிசாக இராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதர் வெங்கட்டுக்கு சௌம்யாவின் ஜாவளி!
1

ஆறுதல் பரிசாக ஸ்பெஷல் ஸ்ரீராம் கங்காதரனின் 'சிதம்பரம் போகாமல்'!
1

-----------
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
பங்குகொண்ட அனைவருக்கு மிக்க நன்றி!

179. திருவையாறு தண்ணிப்பக்கம் - நாள் 0.5

சதிலீலாவதியில் கோவை சரளாவின் immortal டயலாக் இது. பாகவதர்களெல்லாம் தண்ணிப்பக்கம் உக்காந்துக்கிட்டு பாட்டுபடிக்கும் காலம். நேற்றைக்குத்தான் விழா தொடக்கம். ஏழு மணிக்கு பாம்பே சகோதரிகள் பாடுவதால், ஆறுமணிக்கெல்லாமாவது தஞ்சாவூரிலிருந்து கிளம்பவேண்டிய நிலை. விசாகா ஹரியின் அருமையான ஹரிகதையை (உபயம்: ஜெயா டிவி) விட்டுவிட்டு கிளம்பினோம்.

போய்ச்சேர்ந்தால் எங்கும் 'கை'வண்ணம். பரம்பரை செயலர் திரு. ஜி.ஆர். மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசன் உத்சவத்தை தொடங்கிவைக்க, வந்திருக்கவேண்டிய ஆந்திர ஆளுநர் தன் செயலரை அனுப்பிவைத்திருந்தார் போல. அவரும் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது. ஏன் இருக்கிறது என்றால் என் நியுஸ் உபயமும் தினமலர் தான். காரணம் இந்த 'கை'களின் புண்ணியத்தால் காரை ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு தள்ளிநிறுத்த வேண்டிய கட்டாயம். வாசனை கரித்துக்கொண்டே உத்சவ பந்தலுக்குள் நுழைவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

வைத்திருந்த ஸ்பெஷல் பாஸின் பலனால் மேடைக்கு பின்னால் விறுவிறுவென்று சென்றுவிட்டோம். நேர் எதிரில் மிகவும் தெரிந்த முகம். எங்கேடா பார்த்திருக்கிறோம் இந்த முகத்தை என்று நினைத்தவாறே இடம்தேட ஆரம்பித்தோம்.

செக்யூரிட்டி, செக்கிங் எல்லாம் ஒன்றையுமே காணோம். நானாவது பரவாயில்லை. வேட்டியில் சென்றிருந்தேன். ஏதோ வித்வான் என்று நினைத்து விட்டிருக்கலாமென்றால் என் நண்பன் ஏதோ காலேஜ் கெட் டுகெதர் செல்வது போல ஒரு பழைய டிஷர்டும், அதற்கு ஏற்றதாக சுருணைத்துணி போன்ற ஜீன்ஸும். அவனையும் சாவகாசமாக கேள்வியின்றி உள்ளே விட்டனர் போலீஸார். அவர்களின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டி எங்கே செல்வது என்று அவர்களிடமே கேட்டு மேடைக்கு அருகில் காலியாய் இருந்த இடத்தில் வந்தமர்ந்தோம். அதற்குள் பாம்பே சிஸ்டர்ஸ் "மீ வல்ல" என்று காபியின் கடைசி வாய்க்கு வந்திருந்தார்கள்.






ஏன் அந்த இடம் காலியாக இருந்தது என்று புரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. There's a reason why some roads are less travelled என்று ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தில் கேட்டது நினைவுக்கு வந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் மேலே இருந்த விளக்குகளினால் எங்களுக்கு விட்டில் பூச்சி அபிசேகம் நடந்துகொண்டிருந்தது. ஒரு மட்டமான ஹாலிவுட் horror படத்திலில் பங்கெடுத்த எபெக்ட் இருந்தது. அதனால் அவசர கதியாக காப்பியை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்கு தாவத்தேடினோம்.

நாங்கள் இடம்பிடிக்கவும் முன்னர் பார்த்த பரிச்சயமான முகம் மேடையில் வந்தமரவும் சரியாக இருந்தது. அவர் எல்.சுப்ரமண்யம் என்று அறிவிப்பாளர் சொன்னவுடன் தான் பரிச்சயம் ஏன் என்று புரிந்தது. அடடா, அவருடன் கொஞ்சம் பேசியிருக்கலாமே. வித்வானாட்டம் மேடைக்குபின் வரை போய்வந்தும் கோட்டைவிட்டோமே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவர் அருகிலேயே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன். அம்பி சுப்ரமண்யமாம். அசுர வாசிப்பு. ஆரம்பமே அமர்க்களமாக நிரவதிசுகதா என்று பூர்ணரவிச்சந்திரிகாவில். நிரவதி சுகதா சாதாரண ஆட்கள் வாசித்தாலே பட்டையக் கிளப்பும் ஒரு பாட்டு. அப்படிப்போடு போடு போடு மாதிரி ஒரு மாஸ்ஹிட் நம்பர். அதில் எல்.எஸ் வேறு வாசித்தால் கேட்கவும் வேண்டுமா? கூட ஹரித்துவராமங்கலம் ஏ.கே. பழனிவேல் தவிலும் சேர்ந்தால்?





நிற்க. இப்போது நான் கிளம்ப நேரமாகிவிட்டது. அதனாலேயே நாள் 0.5. மிச்ச அரை நாளை வரலாம். இன்று ஓ.எஸ். தியாகராஜன், சிக்கில் குருசரண், காயத்ரி கிரீஷ். போய் கேட்டுவிட்டு வந்து நாள் ஒன்றை பற்றி முழுக்க எழுதிவிடுகிறேன். ஆடியோ கிளிப்களை ஏற்றிக்கொண்டிருப்பதால் நேரம் பிடிக்கிறது. நேற்றைக்கு பாடியிருக்கவேண்டிய ஓ.எஸ். அருண் வரவில்லை. அதற்கு பதில் டி.என்.சேஷகோபாலன் ஒப்பேற்றினார். அவருக்கு அப்புறம் மகராஜபுரம் ஸ்ரீநிவாசன். அவற்றை பற்றியும் நேற்றைய எல்.எஸ்ஸின் கச்சேரியைப்பற்றியும் நாளை காலையில்.

(தொடரும்)

172. கோவைப்பக்கம் ஒரு நாள்

1. திருச்சி ரோடில் மேம்பாலம் கட்டுவதாகச் சொல்லி சூலூர் தாண்டியவுடன் போக்குவரத்தைத் திருப்பிவிட்டு டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஒண்டிப்புதூர் குறுக்குத்தெருக்களையெல்லாம் காணும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களெல்லாம் இன்னும் சில கிலோமீட்டர் ஊரைச் சுற்றி வரவேண்டுமென்று நண்பர் கூறினார். மேம்பாலம் கட்டி இருபுறமும் ரோடெல்லாம் போட்டு, தண்டவாளத்தின் மேல் போடுவார்களே அந்தப் பகுதியை மட்டும் விட்டுவைத்திருப்பதாக கேள்வி. அதற்கு என்று விடியப்போகிறதோ, 2008 என்று ட்ரைவர் தகவல் சொன்னார், ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. இராஜஸ்தானி சங்க் திருமண மண்டபம் செல்ல வேண்டியிருந்தது. வித்தியாசமான செட்-அப். கீழே டைனிங். மேலே மண்டபம். இனிமேல் ஓசிச் சாப்பாடு சாப்பிட சம்பிரதாயத்துக்குக்கூட மணமக்களை வாழ்த்தவேண்டாம் என்று தோன்றியது.

3. ரொம்ப நாள் கழித்து ரேஸ் கோர்ஸ் ரோடு, கே.ஜி தியேட்டர், ஹாஸ்பிடல் (!) எல்லாம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. பழைய ஞாபகங்கள் நிறைய. பள்ளி விடுமுறை நாட்களில் சித்தப்பாவின் ஹீரோ ஹோண்டாவில் ஏறி வேலை மெனக்கெட்டு சேரன் டவர்ஸ் போக வேண்டுமென்று அடம்பிடித்து (விண்டோ ஷாப்பிங் செய்யக்கூட ஒன்றுமில்லை அங்கே அப்போது), பைக் முன்னாடி அமர்ந்தபடி நேரு ஸ்டேடியத்தை ஒரு ரவுண்ட், அவினாசி ரோட்டில் நார்த் கோயம்பத்தூருக்கு பிரியும் மேம்பால ரவுண்டானா ஏறி இறங்கி, கேஜி ஹாஸ்பிடல் பழமுதிர்ச்சோலையில் ஜூஸோ இல்லை கௌரிசங்கரில் டிபனோ என இனிதே கழிந்தது தினமென்று சுபம் போட்ட நாட்கள். லைப் தான் எத்தனை சிம்பிளாக இருந்திருக்கிறது என்று நினைத்து எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. "குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு கூவச்சொல்லுகிற உலகம்" என்று ஏன் வைரமுத்து உருகி உருகி எழுதினார் என்று ஓரளவுக்கு புரியவும் செய்கிறது.

4. அவினாசி ரோடு மேம்பால ரவுண்டானா இப்போது ரொம்ப மாறிவிட்டது. பெரிய நகரங்களுக்கு மத்தியில் இங்கே கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது வழக்கமாக தென்படும் பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ், போத்தீஸ் போன்றவற்றிற்காக சிரித்து கிளுகிளுப்பூட்டும் அழகான ராட்சசிகள் ஆப்செண்ட். அதற்கு மாறாக ஜான் ப்ளேயர்ஸ், லூயி பிலிப், வான் ஹூசன், ஆலென் சோலி என்று முறைத்து முறைத்துப் பார்க்கும் அரவிந்தசாமி அண்ணாக்கள் மயம். கோவையில் மட்டும் ஏனிப்படி என்று விளங்கவில்லை.

5. இருந்த கொஞ்ச நேரத்தில் பார்த்த சன் நியுஸ். சென்னையில் மழையால் விளைந்த சேதத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் வேட்டியை மடித்துக்கட்டியபடி சேற்றில் இறங்கிப் பார்வையிட்டார். அடுத்து, சென்னையின் புதுமேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் உடனிருக்கையில் வெள்ளிச் செங்கோலுடன் பதவியேற்கிறார்.

வழமையாய் நடந்த இவற்றுள் எனக்கு உறுத்தியது முக்கியமான ஒன்று. இந்த இரு நிகழ்ச்சிகள் என்றில்லை. கும்மிடிப்பூண்டி ஒன்றிய நாலாவது வார்ட் தி.மு.க பிரசிடெண்ட் நன்றி அறிவிப்புக் கூட்டமானாலும் சரி, புதுக்கோட்டை மாவட்ட மனையேறிப்பட்டியில் தி.மு.க தொண்டரின் வீட்டில் எருமை மாடு கன்று போட்டாலும் சரி...உடனே வெளிர் நீலம் அல்லது வெளிர் பிங்க் சட்டை, கறுப்பு பேண்ட் போட்டுக்கொண்டு நல்ல கருகருமீசையுடன் கண்ணாடியணிந்த ஒரு இளைஞர் பளிச்சென்று ஆஜராகி டி.வியில் நிற்கிறார். அவர் நமது மதிப்பிற்குரிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (இணை கூட இல்லை, மத்திய) திரு. தயாநிதி மாறன். இவர் என்ன இந்தியா முழுவதற்குமான மத்திய அமைச்சரா இல்லை தமிழக தி.மு.க-விற்கு பி.ஆர்.ஓ-வா என்று சந்தேகமாக இருக்கிறது. மத்திய அமைச்சருக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து நேரம் கிடைக்கிறது என்று பொதுவில் நேர மேலாண்மை வகுப்புகள் நடத்தினால் அனைவரும் இந்த ஆம்னிப்ரெஸென்ஸ் டெக்னிக்கை கற்றுக்கொண்டு பயன்பெறலாம்.

6. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அரங்கநாத சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருத்தலம். நான் கூட இரங்கநாதர் என்றவுடன் பள்ளிகொண்ட ரங்கநாதரை எதிர்பார்த்தேன். இவர் வித்தியாசமாக இருக்கிறார்.

7. காரமடையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது "தென் திருப்பதி". அசர வேண்டாம். கே.ஜி.டெனிம் கார்ப்பரேஷன் (KG Denim) தெரியும்தானே? trigger ஜீன்ஸ் காரர்களேதான். அவர்களின் மில் வளாகத்தினுள் கட்டப்பட்ட தனியார் கோயில். இதற்கு நிறைய பில்டப். செல்போன், காமிராக்களை வாயிலிலேயே பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். வருகிறவர்கள் அனைவரும் கே.ஜி.டெனிமின் பங்காளியோ விருந்தாளியோ என்று சொல்லி ஒரு லெட்ஜரில் கையெழுத்திட்ட பின்னரே செல்லவேண்டும். உண்டியல் கூட கிடையாது. இந்துசமய அறநிலையத்துறை பலரது சொப்பனங்களில் சிம்மமாய் வருவதனாலோ என்னவோ.

சென்ற வருடம் சில நாட்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்கிறார் என்று அதகளப்பட்டது. அதனால் பிரபலமும் அடைந்துவிட்டது. பிரபலமாகும் வரை கருணையோடு கண்திறந்து பார்த்த நாராயணர், அப்புறம் ஏன் பார்க்கவில்லை என்று உடனே கேட்க நினைக்கும் conspiracy theoristகள் நேராக கோயில் நிர்வாகத்திற்கே எழுதிக்கேட்டுக்கொள்ளலாம்.

மற்றபடி ஒரு சிறு மேட்டில் வெங்கடாஜலபதி சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி எனத் தொடங்கி அத்தூணூண்டு இடத்தில் திருமலைக்கோவில் போலவே அமைத்து முத்தாய்ப்பாக விமான வெங்கடேசரையும் அசலைப் போலவே செய்து வைத்திருக்கிறார்கள். நித்தியபடி அலங்காரம் திருமலைப்பெருமானைப் போலவே. கூட வந்த ஓட்டுநர் திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்டு அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வேண்டுதலை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார். ஐந்து வருடத்திற்கு முன்னர் தோன்றிய தனியார் வெங்கடேசன் திடீரென ஒப்பில்லா அப்பனையும், குணசீலனையும் ஓவர்டேக் செய்தது எப்படி என்று எனக்கு குழப்பம் வந்தது.

பெருமாளைச் சேவித்துவிட்டு வருவோர் அன்னதான டொனேஷன் கவுண்டர், பிரசாத விற்பனை கவுண்டர் என எல்லாவற்றையும் எம்பித்தாவிவிட்டு இலவச பிரசாத கவுண்டருக்கு செல்ல வேண்டும். நான் போன அன்று இனிப்பு மட்டாக ஜோரான சர்க்கரைப்பொங்கலும், மிளகு குழம்பா சாம்பார் சாதமா என மினி பட்டிமன்றம் நடத்த ஏதுவான ஒரு சாதமும் பிரசாதம். தோட்டத்திலேயே அழகாய் பாறைகளை இருக்கைகளாய் வைத்திருக்கிறார்கள். குடிநீர் வீணாக்காதீர் என்று எழுதிவைத்தவர்கள், பிரசாதம் சாப்பிட்டோர் கை கழுவ நீரை வைக்க மறந்துவிட்டார்கள். ஆனால், இருக்கும் தோட்டத்தில் அருமையான மர நிழலில் நன்றாக நிஷ்டை கைகூடுகிறது. ஏன் இப்படி குற்றமாக கண்டுபிடிக்கிறேன் என்று நோக வேண்டாம். திருப்பதியைப் போன்ற பெருமை வாய்ந்தது என்றெல்லாம் பில்டப் கொடுத்து அழைத்துச் சென்ற டிரைவர் மேலுள்ள வெறுப்பினாலும் இருக்கலாம். பக்திக்காக என்றில்லாமல், curiosityக்காக சென்று வரலாம்.

8. அடுத்து காடையூர். காங்கேயத்திலிருந்து ஆறு கி.மீட்டரில் உள்ளது. விசேடமான கோயில் என்று சொல்லி போனதுதான் இங்கேயும். காடையீஸ்வரர், பங்கயற்செல்வி, சுப்ரமண்யர், லக்ஷ்மிநாராயணர், அனுமார், வெள்ளையம்மன் என பலர். என்ன விசேஷம் என்று சொல்ல ஆளில்லை. ஆனால் டிரைவர் புண்ணியவான் சொன்ன ஸ்தல புராணம் இதோ: சிவகுமாருக்கு இவர்தான் குலதெய்வம். சென்ற வாரம் தான் சூர்யாவும் ஜோவும் சிவகுமார் குடும்பத்தினருடன் ரகசியமாய் வந்து சென்றிருக்கின்றனர். கூட்டத்திற்கு பயந்து பொங்கல் எல்லாம் வைக்காமல் சிம்பிளாக கும்பிட்டு கிளம்பிவிட்டனர் என்றார்.

இப்படியாக கோவைப் பயணம் இனிதே முற்றிற்று.



அதிசயமாக பயணப் பதிவு தொடராமல் முற்றிற்று. அதற்காகவே தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம். பெய்யாமலும் போகலாம் என்பது ரமணன் சாரின் லேட்டஸ்ட் தகவல்.

மருதைக்கு போலாமா? - 6

மீனாட்சி, அனுமார்கள், சூப்பர் டிரைவர்

மதுரையின்னு சொன்னாலே மீனாட்சியம்மன் கோயில் aerial shot ஒண்ணுதான் காமிப்பாங்க. பிரமிப்பூட்டும் இமேஜ் அது. அப்படியெல்லாம் நம்மால பாக்க முடியாதே. பொற்றாமரைக் குளம் அருகிலுள்ள வாசல் வழியே உள்ளே நுழைந்தோம். எங்கோ ஒருமுறை படித்தது, கோயிலில் உள்ள மெயின் விக்கிரகங்கள் மட்டும் எண்ணூறுக்கு மேல். கோபுரம் மற்றும் சுற்றும் முற்றும் உள்ளவை என்று கணக்கில் கொண்டால் சுமார் ஐந்தாயிரம் சிலைகள் இருக்குமென்றும் அதே கட்டுரையில் படித்தேன். ஒரிஜினல் சுட்டி கிடைக்கவில்லை.

கல்யாணம் புரிந்த இடமென்றாலும் அதற்குள் கணவன் மனைவியிடையே என்ன சண்டையோ தெரியல, தனித்தனியாத்தான் இருக்காங்க.சுந்தரேசுவரர் எல்லா சிவன் கோயிலையும் போலவே, லிங்கவடிவாகவே இருக்கிறார். இந்த ஊருக்குத் தான் எத்தனை விசேஷமோ, அந்தக் பொற்றாமரை குளத்திற்கு தான் எத்தனை மகிமையோ என்று எண்ணும் வகையில் ஒரு ஆச்சரியமான உண்மை, கோயிலின் பிராகரங்களில் சுற்றியபோதுதான் புரியவந்தது. சர்வேஸ்வரன் நடத்திய திருவிளையாடல்கள் எல்லாமே அநேகமாக மதுரை நகரிலும் அதனை சுற்றியும் தான் நடந்திருக்கிறது.


ஞானசம்பந்தப் பெருமானும் இதைப் புரிந்து தான்..

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே

என்று மதுரையை விட்டு அகலாத சிவனே என்று பாடினார் போல.

மதுரையைப் பொறுத்தவரையில் மெயின் மீனாட்சிதானே? நகைநட்டு எல்லாம் எக்கச்சக்கமாய் போட்டு என்று தானே இன்னும் மதுரையின் அரசி என்ற மாதிரி கம்பீரமாக இருக்கிறாள். பிரம்மாண்ட கோயிலை முழுவதும் சுற்றிவர நாட்கணக்கில் ஆகுமென்று நினைக்கிறேன். இந்தக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை ஒரு மினி அருங்காட்சியகமாக்கி இருக்கின்றனர்.

மீனாட்சி கோயிலை ஒருவாறு சுற்றிவிட்டு, கிளம்பி 108 திவ்யதேசங்களில் ஒன்றான கூடலழகர் கோயிலுக்கு சென்றோம். அடுக்கடுக்கான அமைப்பு கொண்ட கோயில். மிகவும் விசேஷமானதும்கூட. பெரியாழ்வார் இந்தத் தலத்தில் தான்

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே

என்று தம் திருப்பல்லாண்டு பாடி வழிபட்டார் என்று கூறுகிறார்கள்.

கீழே கூடலழகர், மதுரவல்லி. விமானத்தின் மீது ஏறினால் சூர்யநாராயணர், பள்ளிகொண்ட பெருமாள். வைணவக் கோயில்களில் அரிதான நவக்கிரகங்களும் இங்கே உண்டு. இந்தக்கோயில பாத்துட்டு, பரோட்டா ரெண்டு உள்ள தள்ளிட்டு மதுரையிலிருந்து சுமார் 20 கிமி தள்ளியுள்ள கள்ளழகரையும், சோலை முருகனையும் பார்க்க கிளம்பினோம். இந்த முறையும் கூட்டத்தில் சிக்கி அழகர்கோவில் ரோடை தவறவிட்டு, வைகைகரையோரமாகவே ஓடும் ஒரு குட்டி ரோட்டில் திரும்பி ஆற்றின் மட்டத்திலேயே ஓடும் ஒரு பாலத்தைக் கடந்து, ஒருவழியாய் பழமுதிர்ச்சோலை சென்றடைந்தோம். ஆஹா, ரம்மியமான பெயர். ஆனால் பழம் எல்லாம் இருப்பதாகத்தெரியவில்லை. இராமனின் வானரப் படை இப்படித்தான் இருந்திருக்கும் என்று சொல்லுமளவு திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கில் அனுமார்கள். ரோட்டின் குறுக்கே உட்கார்ந்து கொண்டு தங்கள் இஷ்டப்படி லூட்டியடிக்கின்றன. ஹார்ன் அடித்தால் "where's the fire, man?" என்று நக்கல் பார்வை பார்த்துவிட்டு தத்தம் காரியங்களுக்கு திரும்பி விட்டபடியால் மிக அருகில் போய் ஹார்ன் அடித்து மிரட்டலாம் என்றால் 'குரங்குகள் எல்லாம் அனுமார் அம்சம்டா, எங்கேயாவது அடிபட்டுடப் போகுதுங்க.. மஹா பாவம்'ன்னு பின் சீட்டிலிருந்து குரல். ஏன் மாடு, நாய், பன்னிக்குட்டியெல்லாம் அடிச்சா மட்டும் தப்பில்லியான்னு கேட்க நினச்சு, பாதுகாப்பு காரணங்களுக்காக கேட்காமலேயே விட்டுட்டேன்.

பழமுதிர்ச்சோலை - அறுபடை வீடுகளில் ஒன்று என்றாலும், மிச்ச ஐந்து படைவீடுகளைப்போல் பிரம்மாண்டமான கோயில் எல்லாம் இல்லாமல் சாதாரண farm house மாதிரி இருக்கிறது. சம்மருக்கு வந்த முருகப்பெருமான் அவ்வையிடம் 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று கடி போட்ட இடமும் இதுதான். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே நூபுரகங்கை என்ற ஊற்று இருப்பதாகச் சொன்னார்கள். எங்களுக்கு போக நேரம் கிடைக்கவில்லை.

இங்கே பழமுதிர்ச்சோலையில் ஒரு விபரீதம் நடக்க இருந்தது. மலையின் ஸ்லோப்பில் நிற்கும் காரை ஸ்டார்ட் பண்ணும் முன் ஹேண்ட் பிரேக் எடுக்கக்கூடாது என்று தெரிந்தாலும் என்ன நினைப்பிலோ எடுத்தேன்.. ஹேண்ட் பிரேக் எடுத்தப்புறம் வண்டி பின்நோக்கி நகர ஆரம்பித்தபின் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தால் அந்தப் பக்கம் பார்த்தபடி என் அம்மா வண்டி வருவதை கவனிக்காமல் நிற்கிறார். வண்டியோ மேடானதால் வேகமாக பின்நோக்கி நகருகிறது. வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் பிரேக் சர்வோ வேலை செய்யாது அதனால் பிரேக் முழு அழுத்தத்துடன் பிடிக்கவில்லை. ஹேண்ட் ப்ரேக் போட்டு ஒருவாறு ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை புல்லா அமுக்கி, குதிரை கனைப்பு, டயர் புகை, ரோட்டில் கருப்பு தடம் என்று படுஜோரா கிளப்பினேன். இது நடந்தது ஒரு கணப்பொழுதில். இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. பார்க் செய்து வந்தபின், பூக்கடைக்காரர் 'நல்லா வண்டி ஓட்டறீங்க சார் நீங்க' ன்னு உள்குத்துடன் வஞ்சப்புகழ்ந்தார். கெக்கெபெக்கே என்று வழிந்துவிட்டு நகர்ந்தேன். வித்தியாசமான அனுபவம் இது. விபத்துகளுக்கு ஒன்றும் புதியவனில்லையென்றாலும், அம்மா என்று வந்தபின் பதட்டம் பலமடங்காகிவிட்டது. இந்த மாதிரி ரன்னிங் கமெண்டரி வச்சே ஒரு நாப்பது எபிசோட் ஓட்டிடலாம் என்று நினைக்கிறேன், என்ன சொல்றீங்க? :)

முருகனைப் பார்த்தாச்சு. அவன் மாமனைப் பாக்க வேண்டாமா? அதே மலையின் அடிவாரத்தில் தான் கள்ளழகர் இருக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் கருங்கல் தரையின் மீது மூச்சிரைக்க ஓடி, தங்கையை மணமுடித்து தர வந்தமர்ந்த பெருமாளை தரிசனம் செய்தோம். இந்தக் கோயில்களைப் பற்றியெல்லாம் இன்னும் விரிவாக எழுதாதற்கு காரணம், எல்லாம் பலருக்கும் தெரிந்தவை என்பதாலேயே.

அங்கேயிருந்து என்ன, நேராக திருச்சி NH பிடிச்சு ஊருக்கு வந்தாச்சு.

தொடரின் முடிவுக்கு வந்துவிட்டது. இங்க ஒரு moral of the story எழுதணுமே... என் குத்தாலம் போன கதை தொடரிலேயே ட்ரை பண்ணேன். சரியா வரலை. அதனால சிம்பிளா மதுரை ரொம்ப நல்ல ஊரு, கூடவே பார்த்த ஊர்களும் மக்களும் ரோடுகளும் குரங்குகளும் மறக்கமுடியாதவை/வர்கள்னு சொல்லி இத்தோட முடிச்சிக்கலாம்னு நினைக்கிறேன். ;)

இதுவரை பொறுமையுடன் படிச்சதற்கு நன்றி.



இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்
4. மருதைக்கு போலாமா - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்
5. மருதைக்கு போலாமா? - 5:வைத்தீஸ்வரன் கோயில், குஷ்பு

மாஸ்கோ மே - 9: படங்கள்: 1

படங்காட்டி பல நாட்கள் ஆகிவிட்டபடியால்...ஒரு படப் பதிவு

கடந்த மே 9-ஆம் தேதி மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்ற 60-வது நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்ள புஷ், ஷிராக், ஷ்ரோடர், நம் மன்மோகன் சிங் உட்பட 60 நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக முன்னிலை வகிக்க வரவெண்டுமென்று எனதருமை நண்பர் பூடின் அழைப்பு விடுத்திருந்தாலும், என் modesty-இன் காரணமாய், கூட்டத்திலேய் ஒருவனாய் நின்றிருந்தபோது எடுத்த படங்கள். :)









Red Square-இல் உள்ள St.Basil's Cathedral-க்கு பின்புறம் எடுத்தது. நான் சொன்ன உலகத்தலைகள் எல்லாம் அந்தப் பக்கம், அதாவது red square-இல் அமர்ந்திருந்தார்கள்.

மருதைக்கு போலாமா? - 5

மருதைக்கு போலாமா? - 5: வைத்தீஸ்வரன் கோயில், குஷ்பு

என் லட்சியப் பயணத்தொடர் முடியும் சமயத்தில் தானா இப்படியொரு பிரச்சனை வர வேண்டுமா? அடுத்த பாகம் எழுதுவதில் கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள். எழுத வரவில்லையென்பதுடன் குஷ்பு பதிவுகளில் விழும் ஆயிரக்கணக்கான புது பின்னூட்டங்களில் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கறதிலேயே நேரம் போய்விடுவதாலும் இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளேன்.

சரி, நமக்குத்தான் எழுத வரல... ஏற்கனவே மண்டபத்தில எழுதி வச்சுருப்பாங்களே.. அதுகளோட சிறிது நம்ம சொந்த சரக்கையும் சேர்த்து மிக்ஸ் பண்ணினா பதிவு ரெடியாயிடும், இல்லியா? கொஞ்சம் மசாலாவாக்கவும், கொஞ்சம் மேதாவித்தனமாகவும் இருக்கட்டும் என்று மதுரையை பத்தி லோயர் அப்பர் மாதிரி பெரிய ஆளுங்க ஏதாவது சொல்லிருக்காங்களான்னு தேடினேன். off hand ஆக தேவாரம், திருவாசகம் எல்லாம் quote பண்ணுவேன் என்று சொல்ல ஆசைதான்... ஆனால், நீதி, நியாயம் மற்றும் சிலர் என்னைத் தடுக்கிறார்கள். உண்மையில் தேடியது project madurai யில் தான். அங்கே, நான் தேடியதோடு சேர்த்து வேறு இரண்டு அருமையான பாடல்கள் கிடைத்தன. அதனால், இதையே ஒரு பதிவாப் போட்டு இப்போதைக்கு ஓப்பேத்திடலாம் என்கிற ஐடியாவுடன், இதோ..

(மேலும் நம்ம கணேஷ் வேறு இங்கே கலக்குகிறார். அவரும் இந்த ஆர்வத்திற்கு காரணம்.)

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
          பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
          மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
          திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
          போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

                                                                                        - திருநாவுக்கரசர்


வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை-விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

                                                                                        - அபிராமி பட்டர்





இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்
4. மருதைக்கு போலாமா - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்

மருதைக்கு போலாமா? - 4

மருதைக்கு போலாமா? - 4: ஆதிசொக்கநாதர், சில நல்ல மனிதர்கள்

இது சென்ற பதிவின் தொடர்ச்சி..

என் தந்தை ஏன் அப்படி சொன்னார் என்று ஊரினுள் நுழைந்த பின்னரே புரிந்தது. city center-ல் ஆடி, ஆவணின்னு ஆயிரக்கணக்கான வீதிகள். எது எங்கே போகுதுன்னு தலைகால் புரியல. இதுல பாதிக்குமேல் ஒருவழிச்சாலை. போக்குவரத்த ஒழுங்குபடுத்த இது தேவைதான் என்றாலும், நமக்குன்னு வரப்போ ரொம்ப கடியா ஆயிடுது. ஒரு தெருவ விட்டா திரும்ப ஊர் முழுக்க சுத்தி சுத்தி வந்தீகன்னு தான் பாடிக்கொண்டே வலம் வரணும். இதேபோல சிஸ்டத்தை நெல்லையப்பர் கோயிலச் சுத்தியுள்ள வீதிகளிலேயும் பார்த்தேன். ஆனா இங்க சைஸ் ரொம்ப பெரிசு.

தெருப் பெயர்கள் எல்லாம் கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கறது வேற குழப்பம். மேற்கு ஆடி வீதியா? ஆவணி வீதியா ன்னு சர்ச்சை முடியறதுக்குள்ளே சித்திரை வீதின்னு ஒன்னு புதுசா வந்துடும். கோயிலைச் சுற்றி மாட வீதிகள், அவற்றின் ஊடேயும், சுற்றியும் மாதப் பெயர்கள் கொண்ட வீதிகள்னு ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டேன். அதில பல தெருக்கள் மிகக் குறுகலானவை. தெரியாம உள்ள நுழஞ்சிட்டீங்கனா, அப்புறம் அபிமன்யு கதைதான்.

இந்த ஆர்த்தி இருப்பது பெருமாள் கோயில் மேற்கு மாட வீதியில். கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு பின்புறம் இருக்கு. அதனால் கண்டுபிடிக்கறது அவ்வளவு கஷ்டமா இல்லேன்னாலும், மேற்சொன்ன மாதிரி, அந்த தெருவ விட்டுட்டு, பக்கத்து சந்தில நுழைந்து எதிரே வந்த மாட்டு வண்டி, டெம்போ போன்றவற்றை தாண்டிக்குதித்து கொஞ்சம் சர்க்கஸ்காரைப் போல ரெண்டு சக்கரம் பெருமாள் கோயில் மதில்சுவற்றின் மேலெல்லாம் ஓட்டி வெற்றிகரமா ஓட்டலை அடைந்தோம். உள்ளே பரவாயில்லை. பெரிய இடம் இருக்கிறது. ஏகப்பட்ட வெளிநாட்டு பயணிகள் கூட்டம் வேற. ரூம் பத்தி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒண்ணுமில்ல.

ஆதிசொக்கநாதர் கோயில் என்று ஒன்று இருக்கிறது, அதப் போய் பார்த்துட்டு வான்னு யாரோ ஒரு மாமி பத்தி வைக்க இவ்ளோ பெரிய மதுரையில எங்க போய் தேடறது? இனி வண்டியெல்லாம் எடுத்துகிட்டு இந்த ஒன்-வே விளையாட்டெல்லாம் ஆடமுடியாதுன்னு முடிவு பண்ணி வாசல்ல ஒரு ஆட்டோ புடிச்சோம். மீனாட்சியம்மன் கோயிலுக்கெல்லாம் முற்பட்டதுன்னு சொல்லப்படற இந்தக் கோயில் சைஸ் என்னவோ ரொம்ப சின்னது. அது exact-அ எங்கே இருக்குன்னு கேட்காதீங்க. ஏன்னா, எனக்கும் தெரியாது. மாட்டுத்தாவணி என்பது போன்ற மிக செக்ஸியான புறநகர்ப்பெயர்கள் கொண்ட ஊர் மதுரை. அந்த மாடுக்கு தினமும் தன்னோட தாவணிய பஸ்ஸிலெல்லாம் ஏலம் விடுறாங்களேன்னு தெரிஞ்சா பாவம், வருத்தப்படும்.

இந்த மாதிரி பெயர்களைக் கேட்டும் குழம்பாதவர்களுக்கு சிம்மக்கல், யானைக்கால் போன்ற வித்தியாசமான பெயர்களும் உண்டு. இதனால் எந்த ஏரியாவுக்கு போனோமெல்லாம் தெரியாது. கோயில் பேர் சொன்னோம். ஆட்டோக்காரர் அழகாக கொண்டு சேர்த்துவிட்டார். கரை சேர்த்துவிட்டார்னு தான் சொல்லனும். பின்ன.. நானும் பல ஊருகள்ள டிராபிக் பார்த்திருக்கேன். ஆனா, இந்த மதுரை மாதிரி வராதுங்க. சென்னையில் ஓட்டுவோர்க்குக் கூட தனித்தனியே கோயிலெழுப்பலாம்ங்கற மாதிரி ஓட்றாங்க. சிக்னல் விழுந்துட்டா போதும், இந்த நேஷனல் ஜியோல காட்டற locust attack மாதிரி நம்மள் சுத்தி சூழ்ந்து மூழ்கடிச்சிட்டு போய்டறாங்க. புதுசா ஊருக்கு வர்றவங்களயும் கூட்டத்தோடு கூட்டமா ஒன்-வேயில அடிச்சுகிட்டு போய், மினி மதுரைச் சுற்றுலா காமிச்சுருவாங்க. அதனால.. ஆட்டோ ரிக்ஷா தான் சரியான வழி.

ஆனா, ஒண்ணு சொல்லணும். எவ்வளவு மரியாதையா இருக்காங்க மக்கள். ஆட்டோக்காரர் கூட சண்டையெல்லாம் போடாம, மிக மரியாதையாய் சொன்னதக் கேட்டு தலையாட்டினார். நாங்க கோயிலுக்கு போய்ட்டு வரமட்டும் வெயிட் பண்ரேன்னு சொல்லிட்டு அதுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் கூட வாங்கல. இந்த மரியாதை விஷயம், இந்த முறைதான் நான் மிகவும் கவனிச்சு பார்த்தேன். ஒருத்தர் ரெண்டு பேரில்ல.. பல பேரு வெள்ளை கதர்வேட்டி, சட்டை போட்டு, தோளுல ஒரு துண்டு, நெத்தியில வீபூதின்னு மதுரை மாநகரமே ஒரு சட்டசபை மாதிரி இருக்கு. ஏதோ என்னய போய் மதிச்சு சார்-னு ரெண்டு பேர் கூப்பிட்டத மட்டும் வெச்சு சொல்லல.. பேசறதிலேயே ஒரு பதவிசு. நல்ல மக்கள். மரியாதை தெரிஞ்ச மக்கள்.

கோயிலுக்குப் போனோமில்லியா? அங்க ஆதிசொக்கநாதர் இருக்கார். அந்த கோயில் அர்ச்சகர்கிட்ட இந்தக் கோயில்ல என்ன விசேஷம், புராணம்னு கேட்டோம். பெரும்பாலான கோயில்களுக்கு இந்த மாதிரி கதைகள் கேட்கவே போலாம். ஆனா, நிறைய கோயில்கள்ல தட்டுல இருபது ரூவாக்கு குறைச்சலா போட்டா தீபாராதனையே காட்ட மாட்டேங்கறாங்க. அப்புறம் புராணமாவது.. ஆனா, இங்க இவர் பாவம் காது அவ்வளவா கேளாதவர் போல. சரின்னு அவரை விட்டுட்டு பிரகாரம் சுத்தி வந்தோம். அப்போ ஒரு நடுத்தர வயது தம்பதி வெயிட் பண்ணிக்கொண்டிருந்தனர். எங்கள் கூடவே ஆதிசொக்கநாதரையும் பார்த்தவர்கள் அவர்கள். எதற்காகவோ நிற்கிறார்கள் என்று நினைத்து நாங்கள் கிளம்புகையில் அந்தக் கணவர் என்னைக் கூப்பிட்டு 'எந்த ஊருங்க உங்களுக்கு?இப்பத்தான் முததடவையா வர்றீங்களா' னார். 'ஆமா'ன்னு சொல்லவே.. 'நீங்க அர்ச்சகர் கிட்ட கேட்கும் போதே நினைச்சேன். சரி நீங்கள் கும்பிட்டுவிட்டு வரட்டும்னு தான் காத்திருக்கிறேன்' னு சொன்னார். இத்தன நேரம் காத்திருந்து தல வரலாறு சொல்ல வேண்டும் என்று நினைத்தாரா? எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. தலவரலாறு புத்தகம் அலுவலகத்தில் ஸ்டாக் இல்லையென்று அதற்குள் விசாரித்துவைத்து சொன்னவர் பிறகு மிகப் பொறுமையாக எங்களோட cross-questionsக்கும் பதில் சொல்லி அந்தப் பழம்பெரும் கோயிலின் இடைக்காடகர் புராணத்தை சொன்னார். விசிட்டிங் கார்ட் பரிமாற்றம் முடிந்த பின்னர் அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினோம். எங்களுக்கோ இன்னும் அதிசயம். வெளியூரிலிருந்து வந்து அவங்க ஊர் கோயில் பத்திக் அவர நேரடியாக் கேட்கலேன்னாலும் நின்னு நிதானமா எடுத்துச் சொல்லணும்னு தோணுதே.. அதுவே பெரிய விஷயமில்லியா? அதைவிட ஆச்சரியம், நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய ரெண்டாவது நாள் ஒரு கூரியர். ஆதிசொக்கநாதர் திருக்கோயிலின் தலவரலாற்று புத்தகம் அனுப்பியிருந்தார் அதே மதுரைக்காரர். சொந்தங்களுக்கே நிற்க நேரமில்லைன்னு ஓடும் இந்தக் காலத்திலே இப்படி ஒருவரா? மறக்க முடியாத நிகழ்ச்சி இது.

வந்த ஆட்டோக்காரர் லேட்டாக வந்ததற்கு ஒரு வசை கூட பாடாமல், பேசியதற்கு மேல் ஒரு நயாபைசா கேட்காமல் ஹோட்டலில் இறக்கிவிட்டார். அங்கே அடுத்த ஆச்சரியம். சர்வரின் வடிவில். ஓட்டலின் உணவகம் மூடும் நேரம். முப்பது வயது கூட இருக்காது. பார்ப்பதற்கு அச்சு அசல் நம்ம சினிமா நடிகர் முரளி போலவே இருந்தார். என் தம்பி நான்-ஓ எதையோ ஆர்டர் செய்ய ஆரம்பித்தான். 'ஏண்டா, பாவிப்பசங்களா, நடைய சாத்திட்டு வீட்டுக்கு கிளம்பலாம்னு பாத்தா இப்படி கோயில் மாடுங்க மாதிரி வந்து ஒக்காந்துகிட்டு நானு வேணும் பேனு வேணும்னு எகத்தாளம் பண்றீங்க? இரு இரு.. நான் தரேண்டா உனக்கு ஒரு நான்.. இதுவரக்கும் வாழ்க்கையில இந்த மாதிரி நான மவனே நீ சாப்டிருக்கவே மாட்ட பார்' அப்படீன்னு சப்-டெக்ஸ்ட்டுடன் லுக் விடாமல் இன்முகமும், கனிவான பேச்சும் மாறாமல் "சார், இப்ப லேட்டாயிடுச்சு. முன்னாடி செஞ்சதத்தான் சூடு பண்ணி எடுத்துவரணும். அதுக்கு பதிலா, சூடா இட்லி இருக்கு. அது பரவாயில்லியா?"ன்னு கேட்டார். எனக்கு மாரடைப்பே வந்துடுச்சு! 'சொக்கா, இன்னிய நாளுக்கு கோட்டா ஓவர்! இதுக்கு மேல நல்லவங்கள பாக்குறத நம்மால தாங்க முடியாதுடாப்பா'..அப்படின்னு சொல்லி சாப்டு நேரே ரூமிற்கு கொஞ்சம் அலைபாய்ந்த மனம் கொஞ்சம் நிம்மதி பெறுவதற்காக WWF பார்த்துட்டு தூங்கப்போயாச்சு.

(தொடரும்)

இதப் படிச்சாச்சா?
இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?

1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF
3. மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம்

மருதைக்கு போலாமா - 3

மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம், ஆர்த்தி

இது சென்ற பதிவின் தொடர்ச்சி

ஒரு வழியா காலை பூஜை ஆரம்பித்தது. தண்டாயுதபாணிக்கு திருநீறு, பால், பஞ்சாமிர்தம் என பல அபிஷேகங்கள். இந்த முறை கட்டளைக்காரர்கள் யாரும் இல்லாததால், நாங்கள் மட்டுமே. மிக அமைதியாய், தள்ளுமுள்ளு இல்லாமல் முருகன் தரிசனம். சில வருடங்களுக்கு முன்னர் வரை முருகனின் நிலை மிகவும் பரிதாபம். ஒன்றுமே இல்லாமல், கோவணம் மட்டும் தரித்த ஆண்டியானால் கூட சுரண்டுவதில் கில்லாடிகளாச்சே நம்மாட்கள். அப்படி நவபாஷாண சிலை சுரண்டப்பட்டதால் முருகனே தடியின் துணையின்றி நிற்க முடியாத ஒரு சூழ்நிலை. இப்போது குமரனின் விக்கிரகம் எங்கும் பல இடங்களில் வீங்கி இருப்பதுபோல் இருக்கிறது. ஏதோ மூலிகை மருந்தோ என்னவோ தடவி ஒரு மாதிரி பூசி வைத்திருக்கிறார்கள்.

ஓதுவார் ஒருவர் திருப்புகழ் பாட, அவர் சுமாராகப் பாடினாலும் பக்தியில் பாடுவதால் அந்த ambience மிகவும் நன்றாக இருக்கும். பல சமயங்களில் உருவாய் உளதாய் இல்லன்னா ஏறுமயில் ஏறி என்று திரும்பத் திரும்ப ஒரே பாட்டை பாடியே ஓட்டிவிடுவார். ஆனால் இந்த முறை பாடியவரோ கேட்டிராத பல பாட்டுக்களை பாடினார். நன்றாக இருந்தது. இந்த மாதிரி கோயிலில் பாட்டு என்றவுடன் இந்த முறை சென்ற இன்னொரு கோயில் நினைவுக்கு வருகிறது. கீழப்பழுவூர். திருவையாற்றிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் இருக்கிறது இந்த ஊர். பழுவேட்டரையர்கள் காலத்திய சிவன் கோயில் ஒன்று மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளடங்கி இருக்கிறது. அங்கே இப்படித்தான் பணம் எதிர்ப்பார்த்து ஒரு கோயில் ஊழியர்.

அம்பாள் சன்னதியில் அர்ச்சகர் அர்ச்சனை செய்யவிடாமல் பெருங்குரலெடுத்து அந்த ஊழியர் பாட ஆரம்பித்தார். 'தனந்தரும் கல்வி தரும்' என்று அபிராமி அந்தாதிப் பாடலின் முதல் வரியைத் தாண்டவில்லை. வெறுமனே வார்த்தைகளை திருப்பி திருப்பிப் போட்டு ஐந்து நிமிடம் பாடுகிறேன் என்று படுத்தி, திடீரென்று ஞானம் வந்தவராய் 'அபிராமி கடைக்கண்களே' என்று எங்கிருந்தோ கொண்டு வந்து முடித்தார். இதைத்தான் பாட பத்து காசு, பாட்ட நிறுத்த இருபது காசுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

விபூதி அபிஷேகம் முடிந்ததும் பிரஷ்ஷாக கொடுப்பார்கள். அதைப் பூசினாலே குளுகுளுவென்று இருக்கும். ஆனால் விபூதி கொடுத்து போனபின் உடனே பால், சந்தனம் எல்லாம் கொடுப்பதால் அவையெல்லாம் மேலே கீழே கொட்டி, கொஞ்ச நேரத்திற்கு இசுக் பிசுக் தான். இந்த வினியோகம் முடிவதற்கும் அலங்காரம் முடிந்து திரை திறப்பதற்கும் சரியாக இருக்கும். ஒரு வழியாய் அலங்காரமெல்லாம் பண்ணிக்கொண்டு.. சும்மா சொல்லக்கூடாது. அலங்காரம் மட்டும் பிரமாதமாக பண்ணி அமர்க்களப்படுத்தி விடுகின்றனர் இந்த பழநி அர்ச்சகர்கள்.

முருகனேயே சுரண்டும் பழநி கூட்டம் நம்மை மட்டும் விடுமா என்ன? பிரகாரத்திற்கு வந்தீர்களானால், ஒரு பெரிய பட்டாளமே காத்திருக்கும். கோயிலில் வேலை செய்பவரோ செய்யாதவரோ நம்மிடம் கறக்க ரெடியாய் இருப்பார்கள். அவர்களிடமெல்லாம் சாமர்த்தியமாக தப்பித்துக்கொண்டு மடப்பள்ளி அருகேயுள்ள அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே, மீண்டும் பால். அப்புறம் பிரசாத பாக்கெட். ரூமில் வந்து பிரித்துப் பார்த்தால் பிரசாதம் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்திருந்தார்கள். எள் சாதம், புளியோதரை, சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல். நிறைய முந்திரிப்பருப்பு, நெய்யெல்லாம் போட்டு சக்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் பிரமாதம். பஞ்சாமிர்தத்தை முன்னெல்லாம் ஒரு மட்டமான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுத்தருவார்கள். ஆனால், இந்த முறை மிக நேர்த்தியாக சீல் செய்யப்பட்ட டின்னில் கொடுத்தார்கள். அதில் date of mfg, exp date எல்லாமே இருந்தது கூடுதல் சிறப்பு.

அங்கிருந்து குச்சனூர். தேனி தாண்டி 30 கிமி தெற்கில், சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (NH-49) பிரிந்து ஒரு 2 கி.மீ செல்ல வேண்டும். திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் சனீஸ்வரனுக்கு இங்கே குச்சனூரில் தனி கோயில். இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தனிகோயில். சமீபத்தில் தான் பிரபலமாயிருக்கிறது என்று நினைக்கிறேன். கோயில் எதிரிலியே முல்லையாறு ஓடுகிறது. சனீஸ்வரனுக்கு மிகவும் விசேஷமான பரிகாரத்தலம் இது. சனிப்பெயர்ச்சியின் போது மிகவும் கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள்.

சரி, குச்சனூர் முடிந்துவிட்டது. இனியென்ன. மருத தான். தேனியிலிருந்து மதுரை செல்லும் சாலையை மிகவும் ரசித்தேன். மலைகளுக்கு நடுவேயெல்லாம் புகுந்து வளைந்து செல்லுகிறது இந்த NH-49. மதுரைக்கு சற்று முன்னரே, காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரெதிரில் பிரிந்தால் அந்தப்பக்கம் திருமங்கலத்தில் திருநெல்வேலி-கன்னியாகுமரி செல்லும் NH-7ல் சேர்ந்து அங்கிருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சென்று விடலாம்.

குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு இன்னொரு உதாரணமாக இங்கேயும் மலை தான். சூரனை வதஞ்செய்த முருகப்பெருமான் இம்மலையில் அமர்ந்து அயர்ச்சி நீக்கி, சிவபார்வதி முன்னிலையில் தெய்வானையை மணஞ்செய்து திருத்தலம் இது. மலையிலேயே கோயிலின் கர்ப்பக்கிரகத்தைக் குடைந்து, மலைப்பாறையிலேயே முருகப்பெருமானையும் செதுக்கியிருக்கிறார்கள். பார்க்கவேண்டிய கோயில் இது.

அங்கிருந்து கிளம்பி, பெஸ்ட் வெஸ்டர்ன் ஜெர்மானஸ் போகலாம் என்று நானும் தம்பியும் கூற, 'உங்க ரெண்டு பேருக்கும் மதுரையைப் பத்தி ஒண்ணுமே தெரியில.. இப்படி ஊருக்கு வெளியிலலாம் தங்கினா, கத கந்தல் தான்.. அதனால் கூடலழகர் கோயிலுக்கு எதிர்த்தாற்போல் ஆர்த்தி என்று ஒரு ஓட்டல் இருக்கிறது. அங்கே தான் போகப் போகிறோம்' என்று முடிவாக சொல்லி விட்டார் அப்பா. மனதிற்குள் ஆர்த்தியை சபித்துக்கொண்டே மதுரைக்குள் நுழைந்தோம்.

(தொடரும்..)

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF

PS: As usual, got carried away with the title for this post. எத்தன தடவை ப்ளாக்கர் தலையில் குட்டினாலும், மரமண்டையில ஏற மாட்டேங்குது :(

மருதைக்கு போலாமா? - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF

இது சென்ற பதிவின் தொடர்ச்சி.

பழநிக்கு சுமார் 5 கி.மீ முன்னாடியே மலை தரிசனம் செய்யலாம் என்று போர்ட் வைத்துள்ளார்கள். இரவு நேரத்தில் மலை ஜெகஜ்ஜோதியாய் ஜொலிப்பது அழகு. எப்போது பழநி சென்றாலும் திருப்பூர் லாட்ஜில் தான் தங்குவது. comfortable என்று சொல்வார்களே அந்த வகை ஓட்டல் தான் இது. குறிப்பாய் ஓட்டலின் சைடில் புதிதாய் கட்டப்பட்டிருக்கும் ரூம்கள். மெயின் பில்டிங்கினுள் சுமாராகத்தான் இருக்கும். நல்ல சீசன் வேளையில் சென்றால் ரூம் கிடைப்பது கஷ்டம், அதனால் முன்பதிவு செய்துகொள்வது நல்லது. தண்டாயுதபாணிக்கு கேரளாவில் பக்தர்கள் அதிகம் போல. பல KL வண்டிகளைப் பார்க்கலாம். மாலையாகி விட்டதால் தங்கரதம் பார்ப்பது இயலாத காரியம் என்பதாலும், அடுத்த நாள் காலை பூஜைக்கு டிக்கட் இருந்ததாலும் நேராக நளபாகம் தான். எங்களுது இல்லை. ஹோட்டலின் உணவகத்தின் பேரிது. பெரும்பாலும் நன்றாக இருந்தாலும், அங்கே சமைக்கும் ஹெட் நளனின் மூடிற்கு தகுந்தாற்போல் தரமும் மாறுவதுண்டு. குளிரில் காது வெடவெடக்க ஏசிக்கு நேர் அருகில் தான் இடம் கிடைத்தது.

அதென்னவோ தெரியவில்லை, இங்கே வெளியூரில் இருப்பதாலோ என்னவோ, இல்லை எங்கள் வீட்டில் இதெல்லாம் செய்வதில்லை அதனாலோ, வெளியில் சாப்பிடச் சென்றால் அநேகமாக நான் சாப்பிடுவது பரோட்டா தான். இந்த வடக்கத்திய நான், நீ எல்லாம் சாப்பிட்டு போரடித்துவிட்டது. சும்மா இந்த மசாலா, அந்த மசாலா என்று அலட்டுவது வட இந்திய சமையல். ஆனால், நம்மதிலோ மிஞ்சிப்போனால் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி, காரப்பொடி. இதை வைத்தே வித்தைகள் காட்டுவது தமிழ்ச்சமையால் ஆயிற்றே. பரோட்டா..ஆஹா, பல லேயர்களை கொண்ட பரோட்டாவை கஷ்டப்பட்டு லாவகமாக ஒரே கையால் பிய்த்து கூட தொட்டுக்க இருக்கும் வெங்காயப் பச்சடியில் முக்கி சாப்பிட்டால் தெய்வாம்ருதம் தான். குருமாவை விட பச்சடியே பரோட்டாவிற்கு சிறந்தது என்பதுதான் என் கட்சி. தோசையை விட பரோட்டாவின் மேன்மை அதிகம்! ஒன்று தின்றாலும் வயிறு நிரப்பும். தோசைக்கு வேண்டியதைப் போல தேங்காய்ச்சட்னி, காரச்சட்னி, சாம்பார், தோசை மிளகாய்ப் பொடி போன்ற அக்ஸெஸரிகள் தேவையில்லை. வெறும் வெங்காயப் பச்சடி போதும். இப்படி நிறைய. தன்னைப் போலவே வாழ்க்கையும் பல லேயர்களைக் கொண்டது என்று சூசகமாக ஒரு வாழ்க்கைமுறையையே காட்டுகிறது இந்த பரோட்டா. இந்தப்பதிவின் தத்துவக் கோட்டா ஓவர், இல்லை?

பரோட்டாவை விடுங்கள். இந்த சில்லி பரோட்டா இருக்கே. அடாடாடா! ஒரு முறை மதுரைக்கு சென்ற போது என் அப்பா மலரும் நினைவில் மூழ்கி காலேஜ் ஹவுஸில் சாப்பிடுவோம் என்றார். பேர் பந்தாவாக இருக்கிறதே என்று நானும் தம்பியும் அப்பாவியாக தலையாட்ட, ஓட்டல் வாயிலில் நுழைந்தவுடன் தான் நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தோம். ஏதோ திருவல்லிக்கேணி மேன்ஷன் மாதிரி ஒரு ஓட்டல். இதுக்கு ஏதோ ஆக்ஸ்போர்டில் இருக்கா மாதிரி காலேஜ் ஹவுஸ்னு ஒரு பந்தாவான பேரு என்று நொந்துகொண்ட எனக்கு, அப்பா சொன்னது.. 'சாப்ட்டு பாரு. அப்புறம் சொல்லு'. முதல் இம்ப்ரெஷனே சரியில்லை. இதில சாப்பாடா என்று யோசித்துகொண்டிருந்த போது, என்னவோ குருட்டு தைரியத்தில் சில்லி பரோட்டா ஆர்டர் செய்தேன். வந்ததோ பல பீஸ்களை கொத்து பரோட்டாவாக செய்து அதை நன்றாக காரப்பொடியில் மிக்ஸ் செய்து ஆங்காங்கே சிம்லா மிர்ச்சி. காரம் பிய்த்தாலும் விடாமல் மூன்று பிளேட் வாங்கி சாப்பிட்டேன். அவ்வளவு நன்றாக இருந்தது. சரி, ரிடர்ன் டு நளபாகம்.

இங்கேயும் பரோட்டா தான். சாப்பிட்டுவிட்டு ரூமில் WWF பார்த்துவிட்டுத் தான் தூக்கம். இந்தியாவில் இருக்கும் வரை ரெகுலராய் தினமும் பார்க்கும் விஷயம் இந்த WWF. ஸ்டாரில் TNA சரியில்லை. அவ்வாறில்லாமல் தினமும், ஏதாவது லூட்டி அடிப்பார்கள் இந்த WWF-ல். இந்தக் கோடையில் Eddie Guerrero-Rey Mysterio போன்ற சூடான பல நிகழ்வுகள். ஆமா, இந்த சம்மர் ஸ்லாமில் என்னங்க ஆச்சு? யார் ஜெயிச்சது? ஹல்க்-கா இல்ல ஷானா?

அடுத்த நாள் காலை 530க்கெல்லாம் எழுந்து ரெடியாகி 545க்கெல்லாம் விஞ்ச் ஸ்டேஷனிற்கு சென்றாகிவிட்டது. இந்த விஞ்ச்க்கு புதிய ரோப்-கார்கள் வந்தபின் கூட்டம் குறைவாம். காலை வெட்டியெடுத்துக் கொண்டுதான் பெட்டிகளில் உட்காரவேண்டும் என்ற அளவிற்கு சிறிய கார்கள் கொண்டது இந்த விஞ்ச். காலை வேளையில் சூலமங்கலம் சகோதரிகள் கந்தர் சஷ்டி கவசம் பாட மிகப் பொறுமையாய் மலைமேல் ஏறுகிறது. வழிநெடுக தேவஸ்தானம் Terrace பூங்காக்கள் அமைத்துள்ளனர். பூக்கள் குலுங்க பார்க்கவே அழகாய் இருக்கிறது.

இந்த இடத்தில் எனது முதல் திருப்பதி பயணம் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு என் தாத்தா பாட்டியுடன் சென்றிருந்தேன். அப்போது சாமி தரிசனம் எல்லாம் செய்துவிட்டு திரும்புகையில் APSRTC கேண்டீனில் ஆவக்காயை பிசைந்து சாதம் சாப்பிட்டுவிட்டு வயிறு பிராண்ட கீழ்த்திருப்பதி பஸ்ஸில் ஏறினோம். பஸ் கிளம்ப வண்டியை ஓட்டுநர் ஸ்டார்ட் செய்தவுடன், ஏதோ ஒரு புண்ணியவான் "கோயிந்தா கோயிந்தா!" என்றார்! அவருடன் சேர்ந்து பலரும் இந்த மாதிரி கோவிந்தனை கூப்பிட ஆரம்பித்தனர்! எங்களுக்கு ஆவக்காயை சாப்பிட்டது மறந்தே போய் விட்டது. என்னடா, பஸ் மிகவும் ஆபத்தான மலைப்ப்ப்பாதையில் இறங்கும் போது, இவர் இப்படி கோவிந்தன் சரணடி அடைய அவசரம் காட்டுகிறாரே என்று. பல வளைவுகளில் பஸ் திரும்பும்போதும் அதே ஆசாமி கதற அவர் கூடவே சக பயணிகளும் கத்த அது ஒரு காமெடி.

இப்போது விஞ்ச் பொறுமையாய் உச்சியை அடைந்தவுடன், இறங்கி, பிரகாராத்தை சுத்தி கோயிலின் பின்புறத்தில் ஒரு நுழைவு வழியே நுழைந்தோம். அங்கே சிறப்பு தரிசன க்யூவிற்கான கம்பிதடுப்புகளை எல்லாம் தாண்டி, உள்ளே சென்று ஒருமுறை முருகனை அவசரமாய் தரிசித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு இடப்பக்கமாய் வெயிட்டிங் பிரகாரம் இருக்கிறது. அதில் காத்துக்கொண்டிருந்தோம்.

(தொடரும்)

இதப் படிச்சாச்சா?

மருதைக்கு போலாமா -1

மருதைக்கு போலாமா? - 1: திண்டுக்கல், இராஜகாளி, பழநி

லட்சக்கணக்கான வாசகர்களின் (சரி சரி) அன்புக்கட்டளைக் கிணங்கி இதோ அடுத்த பயணத் தொடர். இதுவும் முந்தைய குத்தாலம் போன கதை போல் மெகா வெற்றித்தொடர் (?) ஆகுமா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. :) இந்த முறை தொட்டுச்செல்லப் போகும் இடங்கள்: திண்டுக்கல், தெத்துப்பட்டி, பழநி, குச்சனூர், மதுரை: மீனாட்சி, ஆதி சொக்கநாதர் (மீனாட்சி கோயிலுக்கு முந்தியது), கள்ளழகர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், கூடலழகர் (கள்ளழகர் இல்லை, வேற பழமையான பெருமாள் இவர்). இனி பயணத்தை தொடங்குவோமா?

வருடமொரு முறை பழநி செல்வதுண்டு. அதுபோலவே இந்த வருடமும் கிளம்புகையில் கூடவே, பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் மதுரைக்கும் சென்று திரும்புவோம் என்று முடிவு செய்தோம். என்னைப் பொறுத்தவரை திருப்பதியும் பழநியும் எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடங்கள். பழநி என்ற பேரைக்கேட்டாலே தனியாய் கே.பி.எஸ் வந்து நம் பின்மண்டையில் வெண்கல குரலெடுத்து 'பழம் நீ அப்பா' என்று ரீ-ரெக்கார்டிங் பாடுகிறார் இல்லையா? முருகப் பெருமானும் ஏ.பி.என் படங்களில் வருவது போல் சாதாரணமாய் மிகவும் accessible mood-இல் இருக்கும் இடம் பழநி என்று தோன்றுவதுண்டு எனக்கு. திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் தாண்டினால் பழநி. சுமார் நான்கு மணி நேரப் பயணம்.

திண்டுக்கல்லை பற்றி ஒரு விஷயம். இத்தனை வருடங்கள் பல முறைகள் (30-ஆவது இருக்கும்) திண்டுக்கல் சென்றிருக்கிறோம். ஆனால் எனக்கு தெரிந்த திண்டுக்கல் பை-பாஸ்ஸோடு முடிந்துவிடும். ஊரின் உள்ளே ஒருமுறைகூட போனதே கிடையாது (இந்த லீவில் முதல் தடவையாய், ஊருக்குள் சென்றேன் வேறு விஷயமாக). சேவரிட் சேமியாவின் பிரம்மாண்ட விளம்பரத்தைத் தாங்கிய பாலத்தை தாண்டி சென்று கொண்டேயிருந்தால் பெங்களூர் சாலையையும் கொடைக்கானல் சாலையையும் தாண்டி நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் பழநி சாலை.

சிறிது நேரத்திலேயே ரெட்டியார் சத்திரம் என்று நினைக்கிறேன். இது ஒரு சிறிய கிராமம். இந்த ஊர்க்காரர்கள் யாராவது இருந்தால் உதைக்க வராதீர்கள். பயணத்தில் ஒரு நிமிடம் கண்மூடினால் இந்த ஊர் வந்து போனதே உங்களுக்கு அநேகமாக தெரியாது. ஊரைத் தாண்டின உடனே, இடப்பக்கத்தில் மறைவாய் கோபிநாத சுவாமி திருக்கோயில் நுழைவு வளைவு இருக்கும். இந்த வளைவில் நுழைந்து வயல்வெளி, களத்துமேட்டு எல்லாம் கடந்தால் சிறுது தூரத்தில் தெத்துப்பட்டி என்னும் குக்கிராமம். இராஜகாளியம்மன் கோயில் இங்கே மிகவும் பிரசித்தமானது. இராஜகாளியம்மன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இருப்பதாய்க் கூட கேள்வி. இந்தக் காளியின் ஸ்பெஷாலிடி வாகன யோகம். வந்து போவோருக்கு கண்டிப்பாய் அடிக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாகன விஷயம் என்னவோ எங்கள் விஷயத்தில் நடக்கத்தான் செய்தது. ஒருமுறை அல்ல, இரு முறைகள். என் பெரியப்பாவும் இதையே தான் சொன்னார். ஆனால், நம்பிக்கை வரவில்லை. பின்ன, நாங்கள் கேட்டது E320. 'ஏண்டா, உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல' என்று காளி நினைத்துவிட்டாள் போல. கேட்டத கொடுக்காட்டியும், புதுசு என்னவோ கொடுக்கத்தான் செய்தாள். இந்த முறை என்ன செய்யப்போகிறாளோ தெரியவில்லை. மத்தபடி மிகவும் அமைதியான கோயில், கூட்டமெல்லாம் அறவே கிடையாது. ஆடி மாதம் எல்லா காளி கோயில்களையும் போல் கும்பல் இருக்கும் என்று சொன்னார்கள்.

அங்கிருந்து திரும்ப இந்த குண்டுகுழி ரோட்டில் வரத்தேவையில்லை. மதுரை-ஒட்டன்சத்திரம் சாலையில் சேர்ந்து கொள்ளலாம். இதுவும் ஒன்றும் ஆஹா ஓஹோவென்று இருக்காது என்றாலும், மேற்சொன்ன வயல்வெளி நடுவே வரத்தேவையில்லை. வயல்வெளி ரோட்டிலே இயற்கையை ரசித்தபடி பயணம் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே, இவன் என்ன உளறுகிறான் என்று நினைப்போர்க்கு ஒரு எச்சரிக்கை. டப்பா ரோட்டில் வயலைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்வது ஒரு 10 நிமிடம்..மிஞ்சிப் போனால் அரைமணி சுகமாயிருக்கலாம். கிராமத்து மண்வாசனை வேண்டும் என்று மெனக்கெட்டு டப்பா ரோட்டில் திரும்பிவிட்ட பின் இது சரியில்லை என்று சொல்வதற்கு ஈகோ இடம் கொடுக்காது. கடுகடு சிடுசிடுவென்று சக பயணியரை முறைத்துக் கொண்டிருப்பதுதான் கடைசியில் நடக்கும். இது என் அனுபவத்தில் சொல்வது. Zen & the Art of Motorcycle Maintenance படித்த பலரைப்போலவே, பிர்ஸிக்கின் back-road புராணத்தில் மயங்கி சில மாதங்களுக்கு நானும் இந்த மாதிரி ஆர்வமாய் திரிந்து கொண்டிருந்தேன். அந்த ஆர்வத்தையெல்லாம் பஞ்சராக்கி விட்டது சில அனுபவங்கள். இந்தியாவில் இதெல்லாம் ஒத்துவராது என்பது என் எண்ணம். NH வேண்டாம் குறைந்தபட்சம் SH என்று கண்ணில் பட்டாலே, இந்த பாக்யராஜ் படங்களில் வருவது போல் கிராமத்திற்கு சென்று இறங்கலாம் என்பது போன்ற அசட்டு ஆசையையெல்லாம் மறந்து மெயின் ரோட்டில் சேர்ந்து விடுங்கள். கிராமங்களையே சொந்த ஊராக கொண்டவருக்கு இது பொருந்தாது. குண்டோ குழியோ, சுற்றாரைப் பார்க்க போகத்தான் வேண்டும். ஆனால், தேவையற்று இழுத்துக் கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

இன்னுமொரு விஷயம். ரோட்டில் வழி கேட்கும் போது அவர்கள் சொல்வதை கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே காதில் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே கூறுவது கிடையாது. நமக்கு உதவவேண்டும் என்ற ஆர்வத்தில் தான் பலரும் சொல்வர். வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் நம் நாட்டினருக்கு, குறிப்பாய் கிராமப்புற மக்களுக்கு இணையே கிடையாது. ஆனால், அவ்வாறு உதவுவதாய் நினைத்து சொல்வதில் பல சமயம் நமக்கு கசப்பான அனுபவமே கிடைக்கும். ஒரு முறை, இப்படித்தான் அருமையான NH-45-ல் உளுந்தூர்ப்பேட்டை அருகே நிறுத்தி திருக்கோவிலூருக்கு வழி கேட்டபோது ஒருவர் கொளுத்திவிட்டார். 'ஏன் சார், தேவையில்லாம் சுத்தறீங்க. இந்த குறுக்கு ரோட்டில் போனா ஒரு 30 கி.மீட்டர் கம்மி!". உடனே என் தலையில் விளக்கெறிந்தது! எதற்கு அநாவசியமாக சுத்தவேண்டும் என்று! எதற்கும் 'ரோடு எப்படீங்க இருக்கும்?' ன்னு கேட்டதற்கு 'சூப்பரா இருக்கும் சார். மெயின் ரொடு மாதிரித்தான்' என்று சொன்னார் அந்தப் புண்ணியவான். திருப்பு வண்டியை. விடு கிராமத்திற்குள் என்று திரும்பிய முட்டாள்தனத்தை நினைத்து இன்றும் சிரிப்பு வருகிறது. பல முறை இந்த மாதிரி நடந்திருக்கிறது.

சரி, அதை விடுங்கள். மதுரை ரோட்டின் வழியே ஒட்டன்சத்திரம் வந்தடைந்தோம். பல ஊர்களைப் போல் பஸ்-ஸ்டாண்டு தான் பிரதானம். அந்த நெரிசலைத் தாண்டினால், பழநி ரோடு தான். பழநி சீக்கிரமே வந்துடும். ரெடியா இருங்க.

(தொடரும்)

கு. போ. கதை - 4: குறும்பலா ஈசர், இசைப்புயல், மூன்றருவி

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே

அரவி னணையானு நான்முகனும் காண்பரிய அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக்
குரவமுறு வல்செய்யும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே


என்று சம்பந்தர் பெருமான் திருக்குறும்பலாப்பதிகமும்...

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே

என்று திரிகூடராசப்பருடன் இணைந்து இசைப்புயலும் பாடல் அருளிச்செய்த திருத்தலம் திருக்குறும்பலா ஈசர் குழல்வாய்மொழியம்மையுடன் காட்சிதரும் திருக்குற்றாலம்.

குற்றாலம் என்பது ஏதோ இக்காலத்தில் பிரபலமானது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் வற்றாத வடவருவியில் (பேரருவி) நீராடி அகத்திய முனிவரில் தொடங்கி பலரும் வழிபட்ட சிறப்பான கோயில் இங்கு இருக்கிறது. நாங்கள் சென்றபோது இரவு குற்றாலநாதருக்கு கோயிலின் மாதக்கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு பள்ளியறைப் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று கூறப்படும் தலமரம் என்று ஒரு பலாமரத்தின் கிளைகளை வைத்திருக்கின்றனர்.

இரவு 12 மணிக்குமேல் அருவிகளில் கூட்டம் குறையும் என்று சொல்லப்பட்டதால், அந்த நேரத்தில் சென்றோம். ஆனால், எங்களின் insider
info குத்தாலம் வந்த அனனவருக்கும் தெரிந்திருந்தது போலும். கூட்டம் நிறையவே இருந்தது. இருந்தாலும், மதியம் பெற்ற அனுபவத்தால் இந்த முறை அருவியில் நுழைவது அவ்வளவு கஷ்டமாக இல்லை. இராத்திரியில் குளிர் கொஞ்சம் அதிகமென்றாலும், அது ஒரு புதுவித அனுபவம். ஏதோ பகல் வேளை போல கூட்டமும், கூச்சலும் சேர்ந்து உற்சாகமாய் இருந்தது. மதியம் இருந்த காவலர்களே, பாவம் இன்னும் உட்கார்ந்துகொண்டு இருந்தனர். அங்கு மீண்டும் ஒரு மணிநேரம். அதற்குப் பிறது ஐந்தருவிக்கு சென்றோம்.

ஐந்தருவிக்கு சுமார் 6-7 கீ.மீ ஊரை விட்டு செல்லவேண்டும். வழியில் இசக்கி ரிசார்ட்ஸ் என்று பெரிதாக கட்டிவைத்திருக்கிறார்கள். அதைத்தாண்டி, ஐந்தருவிக்கு சென்றால் அங்கு பேரருவியைவிட கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது வெறும் மூன்றருவியாகத்தான் இருந்தது. அங்கேயும், உள்ளே தவம் புரியும் கணவான்கள் நிறைய. இருபாறைகளுக்கு மத்தியில் அதிவேகத்துடன் கொட்டுவதால் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியில் வராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தனர். அடித்துப்பிடித்து உள்ளே நுழைந்து அங்கேயும் குளித்துவிட்டோம். பேரருவியை விட அதிக வேகத்துடன் இங்கே கொட்டுகிறது. வெளியில் வந்து சூடாய் பஜ்ஜியும், காபியும் குடிப்பதில் ஒரு தனி சுகம்.

புலியருவியில் தண்ணீர் வரத்து இல்லையென்று நண்பர் சொன்னதால் அதை விட்டுவிட்டு, பழைய குத்தாலம் அருவிக்கு சென்றோம். அங்கும் தண்ணீர் குறைவு. மக்களோ நிறைய. குளிக்காமல், வெறுமனே பார்த்து மட்டும் விட்டு அங்கிருந்து கிளம்பி சிற்றருவிக்கு வந்து சேர்ந்தோம். மிச்ச அருவிகளெல்லாம் இலவசம். வாகனத்திற்கு மட்டும் தான் வரி. இங்கே, குளிக்கவே பணம் கொடுக்கவேண்டும். இங்கும் ஒரு மாதிரி குளித்துவிட்டோம். சிற்றருவிக்கு செல்லும் பாதையிலிருந்துதான் செண்பகாதேவி அருவிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். சிற்றருவிக்கு போவதைவிட செண்பகா அருவிக்கு செல்லும் மக்கள் அதிகமாகத் தெரிந்தனர். சுமார் முக்கால் மணி நேரம் மலைப்பாதையில் நடக்க வேண்டுமென்பதால், போகவில்லை.

குத்தாலத்திற்கு ஒரு மணி நேரம் தள்ளி பாபநாசம் மற்றும் பாணதீர்த்தம் அருவிகள் இருக்கின்றன. (இதில் பாணதீர்த்தம் என்பது ரோஜா திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை எடுக்கப்பட்ட சூப்பர் அருவி என்பது ஊருக்கு திரும்பிவந்தவுடன் தான் தெரிந்தது.:( )

குத்தாலம் ஐந்து அம்பலங்களில் 'சித்திர சபை' என்றழைக்கப்படுகிறது. சிவபெருமான் இங்கே ஓவிய வடிவாய் இருப்பதாக ஐதீகம். பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் மிக அழகு. ஆனால் மிகவும் சிதிலமடைந்திருக்கின்றன. இயற்கையால் அல்ல. மூளையற்ற மனிதர்களால். எல்லா ஓவியங்களின் மேலும் கிறுக்கி வைத்திருக்கின்றனர் சில புண்ணியவான்கள். இதைப்பற்றி ஏற்கனவே வேறு பதிவு போட்டுவிட்டதால், இங்கே எழுதவில்லை.

அடுத்து எங்கு போகலாம் என்று ஆர்வமாய் அப்பாவை கேட்டேன்.. 'அது சரி, ஊருக்கு போகலாம்' என்று சொல்லிவிட்டார், ஹூம்.. விட்டால் குத்தாலத்தில் உள்ள அருவிகளிலெல்லாம் குளித்துக் கொண்டேதான் இருக்கலாம். ஆனால், என்ன செய்வது. ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமாகிவிட்டதே.

கூட்டம் மிக அதிகம் என்றாலும், என்னதான் அசுத்தம் அதுஇதுவென்று தேவையற்ற எரிச்சல் பட்டாலும் குத்தால அருவிகளுக்குள் நுழைந்தபின் அவையெல்லாமே மறந்தே போய்விடுகின்றன. அருவியில் டமடமவென்று கொட்டும் நீர் கொடுக்கும் உற்சாகத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் அளவே இல்லை. இயற்கை அன்புடன் கொடுத்த பல பரிசுகளில் அருவிகளுக்கு தனியிடம் உண்டு. யார் வந்தாலும் வராவிட்டாலும், நன்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இயற்கை அன்னை கொடையாய் மழையாய் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். மனிதர்களாகிய நாமும் வாங்கிக்கொண்டே இருக்கிறோம். வாங்கிமட்டும் விட்டால் பரவாயில்லை. நம்மால் இயன்ற வரையில் அவளுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். வருடம் முழுதும் கொட்டிக்கொண்டிருந்த அருவிகள் மெலிந்து மெலிந்து சிலமாதங்களே இப்போது கொட்டுகின்றன. இந்த சுகத்தை நாம் பெற்றால் மட்டும் போதுமா, நம் பின் வரும் மக்களும் பெறவேண்டாமா?

இந்த மூன்று நாட்களில் சென்ற இடங்கள் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், அவற்றின் வரலாற்றுச் சிறப்பும் தமிழ்ப் பெரியோரின் பக்தியும் வியக்க வைக்கிறது. நம் தமிழ்நாட்டில் தான் எத்தனை சிறப்பு, எத்தனை பழமை, எத்தனை மகான்கள். பெரிது பெரிதாக ஊர்களையே தமக்காய் வளைத்துப் போடும் காலத்தில், கோயில்கள் ஒவ்வொன்றும் ஒரு மினி நகரம் என்றளவில் கட்டி பொதுச்சொத்தாய் கொடுத்த தன்னலமற்ற தமிழ் மன்னர்களும், வாகனவசதியெல்லாம் இல்லாத பழங்காலத்திலும் காடுமலைகளில் எல்லாம் நடையாய் நடந்து ஓவ்வொரு திருத்தலமாகத் தேடிச் சென்று அப்பரும், ஞானசம்பந்தரும் மற்ற பெரியோரும் வந்து ஈசனைப் பாடி தமிழும் பக்தியும் வளர்த்த புண்ணிய இடங்களில் நாமும் நிற்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பதற்கே நெகிழ்வாக இருக்கிறது.

மொத்தத்தில், குத்தாலம் என்றவுடன் வெறுப்புடன் கிளம்பி பின்னர் அருவிகளில் உண்மையாகவே மதிமயங்கி இனி வருடம் ஒருமுறையாவது இங்கே வந்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

(முற்றும்)

அப்பாடா.. ஒருவழியா முடிச்சாச்சு. அடுத்த மெகாத்தொடர் பற்றிய அறிவிப்பு விரைவில். காத்திருங்கள்.

திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, திருஞானசம்பந்தரின் திருக்குறும்பலாப்பதிகம் முழுவதும் காண இங்கே செல்லவும்.



இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. குத்தாலம் போன கதை - 1 : திருவில்லிபுத்தூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி
2. கு. போ. கதை - 2: கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், திருச்செந்தூர், தென்காசி
3. கு. போ. கதை - 3: அருவியில் தவம் செய்யும் யோகிகள்

கு. போ. கதை - 3: அருவியில் தவம் செய்யும் யோகிகள்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

தென்காசியிலிருந்து குத்தாலம் 5 கீ.மீ தான். மதியம் போய் சேர்ந்தவுடனே, அப்பாவின் நண்பர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பிரமாதமான சாப்பாடு உண்டு களைப்பாறிவிட்டு (ஆனந்த் சொல்வதுபோல் இந்த தொடருக்கு மெகா சீரியல் tone வந்துடுச்சுனு நினைக்கிறேன்.. என்ன என்னல்லாம் சாப்பிட்டோம்னு பொறுமையா எழுதலாம்னு நினைச்சேன். ஆனா படிப்பவர் மேல் பாவப்பட்டு விட்டுவிட்டேன். இன்னும் இந்த மாதிரி எப்படியெல்லாம் என்னுடைய இந்த லட்சியப் பயணத்தொடரை இழுக்கலாம் என்று ஐடியா தருவோரின் பதிவுகளுக்கு வழக்கம் போல் பின்னூட்டங்களும், நட்சத்திரங்களும் குத்தப்படும்), மாலை 5 மணி சுமாருக்கு மெயின் அருவி என்றழைக்கப்படும் பேரருவிக்கு கிளம்பினோம்.

ஆகஸ்ட 15 வீக்கெண்ட் முந்தைய தினமே முடிந்துவிட்டதால் ஓரளவிற்கு கூட்டம் குறைவுதான். அருவிக்கு அருகிலேயே "malish" கடைகள், அதான் ஆயில் மசாஜ்... ஏராளம். வேறுவேறு சைஸ்களில், பளபளவென்று எண்ணெய் கோட்டிங்-கோடு சிலர் குப்புறப்படுத்து நிஷ்டையில் ஆழ்ந்திருக்க, அவர்களின் முதுகிலே மத்தளம் வாசித்துக்கொண்டிருக்கின்றனர் மசாஜ் ஸ்பெஷலிஸ்ட்கள். அவர்கள் அடிக்கும் அடியில், நீவும் வேகத்தையும் பார்க்கும் நமக்கே வலிக்கிறது. இதற்கெல்லாம் பேரம் பேசி ஒரு ரேட் பிக்ஸ் செய்து கொள்ளலாம். ரேட்டுக்கு தகுந்தாற்போல் மசாஜ். ரொம்ப குறைச்சு கேட்டாலும் ஒத்துக்கிட்டு செஞ்சுவிடுவாங்க. என்ன, பக்கத்து டீக்கடையிலேர்ந்து முந்தைய நாள் வடை சுட்ட எண்ணெய் மசாஜ் கிடைக்கும். அவ்ளோதான்.

அருவியிலிருந்து வரும் தண்ணீர் ஒரு சிறு குட்டையாக தேங்கி, அதிலிருந்து ஆறாக கிளம்புகிறது. குட்டை மிகவும் அசுத்தமாக இருக்கிறது. காலியான சோப்பு, ஷாம்பு டப்பாக்கள் மற்றும் இன்னவென்று விளக்கமுடியாத ப்ளாஸ்டி குப்பைகள் - இவற்றுடன் அருவியில் குளிப்பவர்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, எண்ணெய் ஆகியவை எல்லாம் கலந்து ஒரு வித நுரையுடன் மிதக்கிறது. இந்த குட்டையிலும் சிறுவர்கள் ஏதோ pool மாதிரி குதித்து குதித்து விளையாடுகின்றனர். பெற்றோர்களும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றனர். இந்த குட்டையிலிருந்து கிளம்பும் ஆற்றில் கரையிலேயே உட்கார்ந்து, பிக்னிக் வந்த குடும்பத்து பெண்மணிகள் எல்லாம் சாப்பாடு பாத்திரங்களை கழுவிக்கொண்டும், துணிமணிகளை துவைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இவர்களைத்தாண்டினால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிப் பகுதிகளாய் தடுப்பு கட்டி அழகாகப் பிரித்துள்ளனர். எல்லா நேரமும் இரு காவலர்கள் காவலுக்கு இருக்கின்றனர். ஆண்கள் பகுதியில் நுழைந்தால், சோப்பை முழுதாய் முகத்திற்கும் சேர்த்து தடவிக்கொண்டு, அருவி விழும் பாறையை துழாவியபடியே போவோர் வருவோர் மேலெல்லாம் இடித்துக்கொண்டே அலைகின்றனர் சிலர். இவர்களாவது பரவாயில்லை. தண்ணி பட்டால் சோப்பு போய்விடும். ஆனால் வெளியில் ஆயில் மசாஜ் செய்து கொண்டு வருவோரின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் புண்ணியத்தால், எல்லோருக்கும் எண்ணெய் குளியல் நிச்சயம். அடடா, இந்த தடவையும் சென்ற முறை மாதிரி ஒரு disgusting அனுபவம் தான் கிடைக்கப்போகிறது என்று பெரிய எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் இல்லாமல் போனேன்.

அருவி கிட்டே வந்தாகிவிட்டது. உள்ளே போவதா, சாரலே இவ்வளவு குளிருகிறதே, அருவிக்குள் சென்றால் உறைந்தே போய்விடுவோம் என்று நினைத்துக்கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தால் டவுசர்கூட போடாத சின்னப் பசங்களெல்லாம் சர் சர்ரென்று அருவிக்குள் உள்ளே நுழைந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சரி, இவங்களே பண்ணும்போது நாமும் பண்ணினால் என்ன என்ற வேண்டாத திமிருடன் உள்ளே நுழைந்தது தான் தெரியும். அப்பா.. இத்தனைக்கு நாங்கள் உள்ளே நுழைந்த இடத்தில் அவ்வளவு வேகம் கூட இல்லை. ஆனால், வெடவெடக்கும் குளிர். போன மச்சான் திரும்ப வந்தான் கதையா திரும்பி வெளியே ஓடி வந்துவிட்டேன். ஒரு ஐந்து நிமிடத்திறகு ஒன்றும் புரியவில்லை. பழைய டைப் ரைட்டர் மாதிரி ஆகிவிட்டது. மறுபடியும் சகஜ நிலைக்கு வந்தவுடன், பார்த்தால் என் தம்பி அருவிக்குள் உள்ளே சென்று செட்டிலாகிவிட்டான். சரி, நாமும் போவோம் மறுபடியும் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் நுழைந்தேன்.

இந்தமுறை உள்ளே நுழைந்தபோது அவ்வளவு குளிரில்லை. இன்னும் தைரியம் வந்து, சரி அருவியின் நடுப்பகுதிக்கு செல்வோம் என்று பார்த்தால், க்யூ என்று ஒன்று பெயருக்குத்தான் இருக்கிறது. நகருவதற்கான அறிகுறிகளே இல்லை. புகுந்தவர் வந்திலர் என்று தான் சொல்லவேண்டும். அருவியின் உள்ளே சென்றோருக்கு வெளியில் வருவதாக எண்ணமே வந்ததாக தெரியவில்லை. அருவியின் உள்ளே புகுந்து பாறையில் சாய்ந்துகொண்டே தவம் செய்வது போல் கண்மூடி, கைகளை மேலே தூக்கிக்கொண்டே தியானத்தில் இருக்கின்றனர். சொல்வதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் எரிச்சல் மூட்டும் ஒரு விஷயம் இது. எல்லோரும் குளிக்கத்தானே வந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் இடம் கொடுப்போமே என்றெல்லாம் சிறிதும் எண்ணமில்லாமல் தங்கள் private அருவி போல் ஆக்கிரமித்து கொள்கின்றனர். கூட்டமில்லாத சமயத்திலேயே இந்த மாதிரியென்றால், சீசன் நேரத்தில் இன்னும் மோசமாக இருக்கும் போல. க்யூவில் எங்களைப் போன்று பலர் பே வென்று நின்று கொண்டிருக்க, எண்ணெய் மசாஜ் போட்டவரெல்லாம் எங்களை பை-பாஸ் செய்து கொண்டு நேரடியாக அருவிக்குள் புகுந்துகொள்கின்றனர். எண்ணெய் தேய்க்காதோர் எல்லாம் இந்த எண்ணெய் பிசுக்கு மாபியா-வுக்கு பயந்து இடம் கொடுத்து ஒதுங்க வேண்டியிருக்கிறது. இதை எப்படியாவது ஒழுங்கு படுத்தினால் நன்றாக இருக்கும்.

கடைசியில் might is right - என்பதுதான் இந்தியாவில் செல்லுபடியாகும் என்றபடியால் நாங்களும் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தால்... ஷாக் தான். ஒரு சில கணங்களுக்கு என்ன நடக்கிறதென்றெ புரியவில்லை. தலையில் டமடமவென்று கற்கள் விழுவது போல் கொட்டுகிறது. கண்ணைத் ஒரு நொடிகூட திறந்து பார்க்கமுடியாத அளவிற்கு வேகம். இடிமுழக்கம் தான் கேட்கிறது. ஆனால் ஒரு இனம்புரியாத பரவசம். அப்படியொரு சுகம். விட்டால் நின்று கொண்டே இருக்கலாம் என்பது போல் தான் இருக்கிறது. இந்த பரவசம் தான் உள்ளே போனவரையெல்லாம் வெளியில் வரவிடாமல் செய்கிறது என்று புரிந்தது. வெளியே வந்தவுடன் விவரிக்க முடியாத ஒரு தனிப் புத்துணர்ச்சி.

ஒரு தடவையோடு வந்துவிட முடியுமா? மீண்டும் ஒரு நான்கைந்து முறை உள்ளே சென்று வந்தோம். வெளியில் வர மனமே வரவில்லை. அருவி விழும் பெரிய பாறை முழுவதும் சிவலிங்கங்கள், முனிவர்கள் சிற்பங்கள் எல்லாம் செதுக்கி வைத்துள்ளார்கள். ஆங்காங்கே சிவலிங்கங்களை சிறுசிறு cavity களில் வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி இடங்களில், ஒரு ஆள் உட்காரக்கூடிய அளவிற்கு இடம் இருப்பதால் இங்கு போய் செட்டில் ஆனால், சிவனோடு சேர்த்து நமக்கும் அபிசேகம் தான். வற்றாத வடவருவி என்பது இந்த பேரருவியின் பழங்காலப் பெயர். அகத்தியர் போன்றோர் நீராடிய மிகவும் புண்ணியமான அருவி என்று தலவரலாற்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் அருவி சூப்பர். ஆனால் கூட்டத்தை இன்னும் கொஞ்சம் ஒழுங்கு படுத்தினால் வந்தவர் எல்லாரும் அனுபவிக்கலாம்.

ஒரு முக்கால் மணிநேரம் மற்றவர் எண்ணையாடி, அதைப் போக்க நீராடி ஒருவழியாக வெளியில் வந்தாச்சு. பேரருவியின் அருகிலேயே திருக்குத்தாலநாதர் கோயில். அவரைப் பற்றியும், மத்த அருவிகளைப் பற்றியும் அது அடுத்த முறை!!

(தொடரும்...)

இன்னும் எவ்வளவு நாள் தான் இந்த உருப்படாத கதையை இழுத்து இழுத்து ரம்பம் போடப்போகிறாய் என்று குமுறுவோர்க்கு ஒரு நற்செய்தி! அடுத்த பதிவுடன் மெகா பயணத்தொடர் முற்று பெறலாம். முற்றவேண்டும் என்று வேண்டி பிள்ளையாருக்கு இன்று ஒரு எக்ஸ்ட்ரா கொழுக்கட்டை போடுங்கள். ;-)

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. குத்தாலம் போன கதை - 1 : திருவில்லிபுத்தூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி
2. கு. போ. கதை -2: கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், திருச்செந்தூர், தென்காசி

கு. போ. கதை - 2 : கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

அப்படியென்ன விசேஷம் இந்த நெல்லை கோவிந்தரிடம் என்றால்... ஸ்டைலுதான்.

பிரம்மா மற்றும் ஏனையோர் புடைசூழ, மஹாலக்ஷ்மி பதமாய் காலை அழுத்திவிட தன் இடக்கையால் தலைக்கு முட்டுக் கொடுத்தபடியே ஆதிசேஷனின் மீது சாவகாசமாக படுத்துக்கொண்டு, புன்முறுவலுடன் சயனித்திருக்கும் பெருமாள், இதே போஸில் படுத்தபடியே சாவகாசமாக வலக்கையை நீட்டி, கீழேயிருக்கும் சிவலிங்கத்தினைப் பூக்களால் பூசித்தபடி ஆனந்தமாய் இருக்கிறார். இதன் அழகை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. நீங்கள் ஒருகணம் கற்பனை செய்து பார்த்தாலே தெரியும் காட்சியின் அழகு.

கடவுள் என்பவர் ஒன்றும் ஒரு அடி ஸ்கேலுடன் மிரட்டும் ஸ்கூல் டீச்சர் இல்லை. 2 ரூபாய் எலுமிச்சை வைக்காததற்கும், 10 ரூபாய் தேங்காய் உடைக்காததற்கும் லாரி ஏற்றிக் கொல்லும் கொடூரனல்ல. பக்தியோடு வந்தாயா, பக்தியில்லாமல் வந்தாயா, வேட்டி கட்டி வந்தாயா, காரிலே வந்தாயா, நடந்து வந்தாயா, திருநீறு பூசிக்கொண்டு சென்றாயா, பயபக்தியுடன் சரணாகதி அடைந்தாயா என்றெல்லாம் ஒவ்வொன்றையும் கண்கொத்திப் பாம்பாய் எதிர்ப்பார்ப்பவரும் இல்லை என்பதைத் எவ்வளவு அழகாக சொல்லாமல் சொல்கிறார் பெருமாள். பிறவி கொடுத்து, உன்னை நடத்திச் செல்பவன் நானென்ன கொடுங்கோலனா என்னைக் கண்டு பயந்து நடுங்குவதற்கு? அன்பு போதும். பயம் தேவையில்லை என்றல்லவோ சொல்கிறார். மனிதனாகப் பிறப்பது என்பதையே என்னவோ பெரும்பாவம் என்கிற ரேஞ்சுக்கு பல மதங்களும் முக்கியமாக இந்து மதம் திரித்திருக்கும்போதும், 'இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்' என்று தொண்டரடிப்பொடியார் பாடியதுதான் எவ்வளவு சரி என்பது புரிந்தது. இதையே தானே சிவனடியார்களும் 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று மனிதனாய்ப் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்று பாடினார்கள். இதைத்தான் கோவிந்தரும் காட்டுகிறார் போலும். மொத்தத்தில் சயனப்பெருமாள்களில் வித்தியாசமானவர் தான் இல்லையா?

பாளையங்கோட்டை முழுவதும் தோண்டி வைத்திருக்கிறார்கள். எந்த டிபார்ட்மெண்ட் என்று தெரியவில்லை. இனிவரும் சாலைக்கும் இதுதான் முன்னோடி என்பது போல், திருச்செந்தூர் ரோடு மகா மட்டம். வழியிலே திருவைகுண்டம் வைகுண்டநாதர், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன் ஆகியோரை முன்னரே ஒருசமயம் பார்த்திருப்பதால், வெளியிலிருந்தே ஹாய் சொல்லிவிட்டு திருச்செந்துர்ர் போய் சேருவதற்குள் பிரஷர் எகிறிவிட்டது. திருச்செந்தூர் - சிவந்தி ஆதித்தன் அவர்களின் ஊர். ஊருக்கு வெளியில் பெரிய கல்லூரி. வளைச்சு போட்டிருக்கார்னு சொல்வாங்களே, அதைப் பண்ணிருக்கார்.

திருச்செந்தூரில் இருக்கும் ஒரே டீஸண்டான ஓட்டல் எனக்கு தெரிந்து சிவமுருகன் லாட்ஜ் தான். தேவஸ்தான தங்குமிடங்கள் எல்லாம் ரொம்ப சுமாராகத் தான் இருக்கும். முருகனைப் பாக்க போனியா, இல்ல ஓட்டல் ரூம்ல படுத்துகிட்டு டீவி பாக்கப்போனியான்னு நீங்கள் நினைப்பது கேக்குது. இருந்தாலும், சிவமுருகனுக்கே போனோம். ரூம் ரெடியாக லேட்டாகும்னு சொன்னதால வெளியில வெயிட் பண்ணிக்கொண்டிருந்தபோது, பறவை முனியம்மா குடும்பத்தோட வந்திருந்தாங்க. எங்களைத்தான் அவங்களுக்கு அடையாளம் தெரியல.

சரி, அவரை விட்டுவிட்டு செந்திலாண்டவனைப் பார்க்க கிளம்பினோம். சந்தன அலங்காரம் ரொம்ப அழகு. மூலவருக்கு பின்னாடி பஞ்ச லிங்கங்கள் வச்சுருக்காங்க. உள்ளே குனிஞ்சு போயிட்டு வரதுக்குள்ள பெண்டு நிமிர்ந்து விட்டது. மூலவருக்கு இடப்பக்கத்தில் உற்சவர் சன்னதி. அவருக்குத்தான் சண்முகார்ச்சனை என்று சொல்லி நம்மை ஒரு அரைமணி கீழே உட்காரச்சொல்லிவிடுகிறார்கள். இந்த உற்சவரைப் பார்த்தால் முருகப்பெருமானின் official வாகனம் மயிலா இல்லை கரப்பான்பூச்சியான்னு ஒரு fundamental சந்தேகம் வரும். அவ்வளவு கரப்புகள். அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும், நம்மேலும், எதன்மேலும் ஓடி விளையாடுகின்றன. முருகன் மேலுள்பட. எப்படி இப்படி ஒரு மினி கரப்பு ஆராய்ச்சி மையம் வைத்து உங்களால் பராமரிக்க முடிகிறது என்று அவர்களை கேட்க நினைத்தேன். ஆனால் எப்படா விடுவார்கள்.. நாம் இந்த "fear factor" செட்டிலிருந்து தப்பிப்போம் என்று நினைத்து ஓடி வந்துவிட்டேன்.

அடுத்த நாள் ஒரு குட்டி விசிட் பீச்சிற்கு. அங்கிருந்து கிளம்பி அதே டப்பா ரோட்டில் திருநெல்வேலி டவுண் ரொம்ப டவுனாய் வந்தடைந்து ஒருவழியாக தென்காசி செல்லும் சாலையில் சேர்ந்தோம். நல்ல வேளையா, இது ரொம்ப நல்லாவே போட்டிருக்காங்க.

காத்துதான் பேய்க்காத்து. சாலையோரம் இருக்கிற மரங்களின் கிளைகள் எல்லாம் ஒரே திசையாகவே வளர்ந்திருந்தன.

தென்காசி - சின்ன ஊர். உலகம்மையுடன் இருக்கும் விசுவனாதரின் திருக்கோயில்தான் பிரதானம். கோயில் கோபுரத்தின் வழி நுழையும்போது அடிக்குது பாருங்க ஒரு காத்து. ஏதோ wind tunnel-க்குள்ள நுழஞ்ச மாதிரி ஒரு எப்பெக்ட். ஆளையே தூக்கிக்கிட்டு போற பலத்தோட அடிக்குது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு பராக்கிரம பாண்டியன்.. இல்லை.. ஜடிலவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி அரிகேசரிதேவ பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (அப்பா. இதுக்கே தனியா பதிவு போடணும் போலிருக்கே) கட்டிய கோயில். திருநெல்வேலியைப்போலவே இங்கும் இசைத்தூண்கள் உண்டு.

தென்காசி வரை பொறுத்தீங்க. குத்தாலம் இன்னும் 5 கிலோ மீட்டர் தானே.. கொஞ்சம் தூரம் தான்...பொறுத்துக்குங்க...ப்ளீஸ்

(தொடரும்)

குத்தாலம் போன கதை - 1-ன் தொடர்ச்சி இந்தப் பதிவு.

 

வார்ப்புரு | தமிழாக்கம்