மைடியர் பெனாத்தலாரே என்று சமீபத்தில் நீங்கள் பெனாத்தலார் இன்னும் சமீபத்தில் எழுதிய பதிவொன்றினுக்கு எதிர்வினையாக எழுதியதை கண்டேன்.
இதுவரை பின்னூட்டக்கயமைத்தனம் மட்டும் செய்துவந்த தாங்கள் பறிமானக் கோட்பாட்டின்படி முன்னேறி இப்போது ஒருவர் இட்ட பதிவையே வைத்து கயமைத்தனம் செய்துள்ளதில் - வலையுலக முதிர்ச்சியின் இளவேக பாய்ச்சலைக் கண்டு ஒரு புறம் பூரித்தாலும், மறுபுறம் இத்தகைய இடுகையமைத்தனம் செய்வது வலைப்பூவுலகின் தற்போதைய ஆரோக்கியமான போக்கிற்கு எவ்வாறான கேடுகளை விளைவிக்கும் என்பதை எண்ணுகையில் முன்னர் உப்பிய பூரி சப்பென்று அடங்கிவிடுகிறது. அதன் காரணமாகவே இக்கடிதம்.
*******************************************
ஐபிஎல்லை தமிழ் படுத்துகிறதா அல்லது ஐபிஎல் தமிழைப்படுத்துகிறதா என்று இனமானக்காவலர்கள் வெகுண்டெழுந்து வேட்டியவிழ்த்து போராடிவரும் வேளையில்: ஐபிஎல்லுக்கு பதிலாக மாநிலகிட்டிப்புற்கழகம் சார்பில் இனி மாவட்டத்துக்கு ஒன்றாக சர்வதேச கிட்டிப்புல் வீரர்களை விலைபேசி: அவர்களுக்கு தமிழக நகரங்களின் தெருக்களில் இருக்கும் கோடிகளில் சிலவற்றை கொடையாகத்தந்து சிறப்பு கிட்டிப்புல் கூட்டுசம்பந்தத்தில் சேர்த்துக்கொண்டு, ஆட்ட இடைவேளைகளில் ஒயிலாட்டம், மயிலாட்டம் என கலாச்சாரத்துடன் விளையாட்டார்வத்தை வளர்த்துவருவதுடன்; 2011ல் சிறப்புப் கிட்டிப்புல் வளர்ச்சி மண்டலங்களுக்கான வெள்ளையறிக்கையும் தயாராகிவருவது தெரிந்தும் இவ்வாறான கேள்வியை நீர் எழுப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல விஷமானதும்கூட.
*******************************************
தமிழகத்தில் பிறநது தமிழ் நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தனாக அல்லாமல் வேலைபிழைக்கச் சென்ற தாங்கள், ஏதுமறியாதவரைப்போல, கருநாக்காவுக்கும் புதரகத்துக்கும் கொடி பிடிக்கும் சூட்சுமம் எங்களுக்கு புரியாமலில்லை. இன்று தமிழர்கள் தண்ணியடிக்கிறார்கள் தண்ணீரில்லை என்று கருநாடகாவும், சோறு சாப்பிடுகிறார்கள் சோறில்லை என்று அமெரிக்காவும் சொல்வதை ஒப்புக்கொண்டால், நாளை தமிழர்கள் ஏதோ செய்தார்கள் அதான் சுனாமி பேரலை வந்தது என்று இந்தோனேஷியா புலம்ப வாய்ப்புகள் உண்டு என்று அறியாதவரா தாங்கள்? இந்தச் சமூக அவலத்தினை தோலுரித்துக்காட்டி - அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்ல முயன்ற அருமை பெனாத்தலாரின் கருத்தை, நகைச்சுவை என்ற பெயரில் பூசி மெழுகுவது அழகா?
*******************************************
ஆச்சரியத்தை ஆச்சர்யமாக வெளிப்படுத்துவது தவறா இல்லை எல்லாவற்றிலும் ஆச்சார்யங்களை - உங்களைப்போல் - தேடுவது தவறா? சினிமா போஸ்டரில்கூட நாம் தேடும் விஷயத்தை மட்டும்தான் தேடுவோம் என்று ஆடுகிறீர்களே? ஆச்சார்யங்களை வலிந்து தொலைத்த கமலே, ஆச்சார்யர்களைப் பற்றி படமெடுத்தால் படம் ஓடும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைக்கண்டு பரிதாபப்பட்டு ப்ளாசில் அவரை விளாசாமல் விட்டார் நமது கொ.ப.செ. மேலும் ப்ளாசில் அதைப் போட்டால் வேறு 'எதெதை' போடுவது என்ற குழப்பமும் குட இருந்திருக்கலாம்
*******************************************
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி பிரமிட் ஸ்கீம்களை முதன்முதலில் வகுத்து அதன் மூலமாய் சொத்துகளை குவித்தவர்கள் பண்டைய எகிப்தியர்கள் தான். அப்படி சுரண்டியவர்களை பின்னர் சுரண்டியது ஒரு கூட்டம். இங்கேயும் அதே கதைதான் நடக்கும். மன்மோகன் சிங்கிற்கு நம்ம கைச்செலவில் நாலு லெட்டர்பேட் அடித்துக்கொடுத்தால் வேலையாயிற்று. அவரே பிரதியெல்லாம் எடுத்து அனுப்பவேண்டியவர்களுக்கு அனுப்பி சபாநாயகருக்கு அறிவுரைத்து அனைத்தையும் அமுக்கிவிடுவார். சொல்ல முடியாது, இப்போது கம்ப்ளெயிண்ட் கொடுத்த பொதுமக்கள் மீதே சொத்துக்குவிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்கள். ஸோ கவலைப்படாமல் நைஜீரியன் திட்டத்தினை விரைவில் தொடங்கவும்.
*******************************************
புதிய தமிழ்மணம்/மறுமலர்ச்சி தமிழ்மணம் பற்றியும் உத்தப்புரம் மற்றும் அது குறித்து தலைவர்கள் தந்த பொன்மொழிகள் பற்றியும் பலரும் பல்வேறு கோணல்களில் ஆராய்ச்சி செய்து ஆகிவிட்டபடியால் அப்பகுதிகளுக்கு 'பாஸ்'
*******************************************
வலைப்பூக்களில் எழுதுவது மன அழுத்தத்தை குறைக்கிறதா அல்லது மன அழுத்தத்தை எகிறடித்து கல்யாணியை விட்டு ஆத்த வைக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை படிப்போர்களிடமே விட்டுவிடுகிறேன்.
*******************************************
டிஸ்கி 1: கொத்ஸைக்குறித்து சிபிஐயிடம் விசாரிக்க உத்தரவிட வேண்டி இக்கடிதத்தினை சாதாரண தபாலில் நடுவண் அரசிற்கு எழுதியனுப்பாமல், இன்ஷ்டண்டாக அனைவரையும் சென்றடையும் மின்னணு தகவற்தொடர்பு ஊடகத்தை பயன்படுத்துவது தமிழகத்தின் நாகரிகத்திற்கு எதிரானதொன்று என்றாலும் சூடு ஆறுவதற்குள் சுடவேண்டும் என்ற பொறுப்பும் சொரணையும் இருந்ததால், ஏற்பட்ட இப்பிழையினை பொறுத்தருள வேண்டும்.
டிஸ்கி 2: மேட்டர் இல்லாத வறட்சியில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற எனது அவலநிலையை அறிந்து அவலாய் பதிவொன்று தந்த பெனாத்தலாருக்கும் அதையே வறுத்தெடுத்து நூறடித்த கொத்ஸிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.
கொத்தனார் என்னும் கோயபல்சுக்கு ஒறு பகிறங்கக் "கடி"தம்
233. அடுத்தவர் வீட்டிற்குள் எட்டிப்பாருங்கள்!
நம் வீட்டில் நடக்கும், இருக்கும் விஷயங்களை விட அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பலமடங்கு சுவையானது இல்லியா? அவன் என்ன சொன்னான், ஏன் சொன்னான், இந்த மாசம் ஏன் சம்பளம் பிடிச்சுட்டாங்க, ஈ.எம்.ஐ கட்ட முடியல இந்த மாசம் தொடங்கி அடுத்தவங்க என்ன செய்யறாங்கனு ஒக்காந்து அனலைஸ் பண்ணி அத நாலுபேர்கிட்ட பகிர்ந்துகிறதுல இருக்குற அல்ப சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது.
பக்கத்தாத்து அம்பியாகட்டும், எதிர்த்த வீட்டு முருகனாகட்டும் - இப்படி நம்மள மாதிரியான சாதாரண ஆளுங்க வீட்டுக்குள்ளயும் வாழ்க்கைக்குள்ளயும் தேவையில்லாம மூக்கை நுழைச்சு எட்டிப்பார்க்கும் நமக்கு சுளையா வந்து ஒரு பெரிய ஆளு வந்து மாட்டினா சும்மா விட்ருவோமா சான்ஸை?
விஜயகாந்த் ராதிகாவ வச்சிருந்தாரு, எம் சி ஆரு ஜெயலலிதா கூட சுத்தினாரு, கலைஞர் வேற என்னமோ செஞ்சாருன்னு எல்லாம் நேரா போட்டா கேஸ் வரும்கறதால வாரமலர் துணுக்குமூட்டை தொடங்கி இண்டிபெண்டன்ட் வரைக்கும் இந்த மாதிரியான செய்திகளை ஏதோ பெரிய ரீபஸ் போட்டியாட்டம் க்ளூ க்ளூவா கொடுத்து நம்மள பைத்தியம் அடிச்சிர்றாங்க. ஆனா பாருங்க, இதப் பத்தி குறை சொல்றேனே தவிர நானும் சான்ஸ் கிடச்சா படிக்காம விடறதில்லேங்குறது வேற மேட்டர்.
இப்படி அடுத்தவங்களப் பத்தி பேசுறது மனித இயல்புனு சும்மா போயிடமுடியுமா? அடுத்தவங்களோட தனிமனித சுதந்திரம்,தனிப்பட்ட வாழ்க்கைல நாம தலையிடுறோமேனு ஒரு நிமிஷம் கூட தோணமாட்டேங்குதே. பத்திரிகைகளுக்கு காசு பார்க்கணும். அதுக்குச் சொல்ற சாக்கு பொதுவாழ்க்கைல ஈடுபட்டா - all is fair game. எனக்கென்ன டவுட்டுன்னா நீங்களும் நானும் எதுனாச்சும் மனித நடமாட்டம் அற்ற தீவுல இருக்கிறோமா? பொதுவாழ்க்கைல இல்லியா? நாமும் சமூகத்துல ஒரு பொதுவெளியில தான இயங்கறோம். இன்னிக்கு கமலஹாசனோட மனைவிகள்னு ஜூவில கட்டுரை போட்டா நாக்கை தொங்கப்போட்டுகிட்டு படிக்கிற நாம, நம்மளோட எலும்புக்கூடுகள் வெளில வந்தா இதே ஆர்வத்தோட அடுத்தவங்க படிக்கறத விரும்புவோமா?
எலும்புக்கூடுகள் இல்லாம ஒருத்தரும் இல்லை. காந்தியும் நேருவும் என்ன புத்தர் வரைக்கும் இதே கதைதான். நமக்கு இருக்கும் மதிப்பு நாம இயங்கும் தளத்தில் நமது திறமைக்கானதாக மட்டுமில்லாமல் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் இருந்தால்? திரும்பிப்பார்த்தால் எல்லாரும் ஏதாவதொரு தருணத்தில் சறுக்கியிருப்போம். இப்போது நினைத்தால் ஏன் அவ்வாறு செய்தோம்னு புரியாதுன்னாலும், கண்கெட்ட சூரிய நமஸ்காரம் பண்ணி புண்ணியமில்லேங்கிறதால தவறுகளை பீரோக்களில் இறுக்கமாக பூட்டிவச்சுட்டு தெனாவட்டா திரியிறோம். ஆனா பாருங்க, எப்படிப்பட்ட லாக்கருக்கும் ஒரு சாவி இருக்கு. அந்த சாவிக்கும் ஒரு டூப்ளிகேட் இருக்கு.
ஒரு பிரபலத்தின் நிலைமையில் நாம் இருந்தால் இம்மாதிரி விஷய(ம)ங்கள் வெளியாகும் போது ஏற்படும் மன உளைச்சலை இருந்து அனுபவித்தால் தான் தெரியுமோ என்னவோ? அதுவரைக்கும் ‘பத்திகிச்சு' தாராளமா படிச்சு அரிப்பத் தீத்துக்கலாம்.
--------------------
கீழ இருக்கும் படத்துக்காக ஒரு முன்னுரை எழுதணும்னு ஆரமிச்சு என்னவோ சீரியஸா போச்சு. எனக்கு வந்த மின்னஞ்சலின் படி இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸோட ஆபீஸ் ரூமாம். இல்லேங்கிறேன் நானு. ஏன் இல்லேனு பத்துவினாடிகளுக்குள்ள கண்டுபிடிச்சு சொல்ற அனைவருக்குமே ‘வலையுலக தகவல் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனையாளர்/சாதனையாளினி' அப்படிங்கற பட்டத்தை கொடுக்கத்தயார். வலையுலக கைநாட்டுகள்னு சொல்லிக்கிற அல்லாருக்கும்,அரசியல்வாதியாட்டம் இன்ஷ்டண்ட் டாக்டர் பட்டம் மாதிரி தகுதியோட, இந்தப்பட்டத்தை போட்டு தகுதியை வளர்த்துக்க அருமையான சான்ஸ்.
என்ன கண்டுபிடிச்சாச்சா?
232. பெண்களுக்கான புரட்சி பட்ஜெட்! - CNN-IBN
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதியறிக்கையில் புரட்சிகரமான புதியதொரு அம்சத்தை சத்தமில்லாமல் சேர்த்துள்ளார். இதுபற்றி வேறெந்த ஊடகமும் கண்டுகொள்ளாத நிலையில், சிஎன்என் - ஐ.பி.என் மட்டுமே பொறுப்பாக நடந்துகொண்டுள்ளது.
இவ்விடயத்தை பொறுப்புடன் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனத்துக்கு பாராட்டுகளுடன் நன்றிகளும்!

