218. தமிழகத்தின் அடுத்த முதல்வர்?

தமிழக அரசியல்வாதிகளின் இப்போதைய லேட்டஸ்ட் அறிக்கை டெம்ப்ளேட்டில் சேர்ந்துள்ள வாசகம் 'அடுத்த தமிழக முதல்வர் நான் தான்/என் மகன் தான்/என் வளர்ப்பு நாய்க்குட்டி ஜிம்மிதான்'. இப்படி புரட்சிகலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், மருத்துவர் த.குடிதாங்கி, சுப்ரீம் ஸ்டார், நவரச நாயகன், இல.கணேசன், ஜி.கே.வாசன், இளங்கோவன், தொல். திருமாவளவன், குட்டி மருத்துவர் என புதியவர்கள் ஒருபக்கம் முழக்கமிட.. மற்றொரு பக்கம் பழம்தின்று கொட்டை போட்ட கலைஞரும் தானைத்தலைவியும் இப்போதைக்கு ரிட்டையர் ஆவதற்கான அறிகுறிகளையே காட்டாமல் இருக்கிறார்கள். கலைஞராவது ஹிண்ட் கொடுத்திருக்கிறார்.

இதில் சிலர் ஒருபடி மேலே போய் - தமிழர்கள் எல்லாம் என்னமோ அவர்கள் வீட்டுக்கு தினமும் காலையில் வந்து தயவுசெய்து பதவியேத்துகிட்டு எங்களைக் காப்பாத்துங்க, போராடுங்கனு லட்சக்கணக்குல மனு கொடுத்தா மாதிரி தமிழகத்தின் பிரதிநிதிகளாகவே சுய பில்டப் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். விவேக் ஏதோ படத்தில் சொன்னபடி "தமிழ்நாடே என் பின்னாடி பின்னாடின்னு ஆளாளுக்கு என்னடா சொல்றீங்க? தமிழ்நாடு உங்க பின்னாடி இருக்க நீங்க என்ன ஆந்திரா பார்டர்லயா நிக்கிறீங்க"னு கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தின் இருபெரு தலைவர்களுக்கென்று சேருகிற கூட்டம் - இப்படி தினந்தோறும் நாளைய தமிழகம் நம்முடையது என்று முழக்கமிடும் தலைவர்களுக்கு கண்டிப்பாக இல்லை என்பதுதான் நிஜம். கலைஞருக்காகவும், ஜெயலலிதாவுக்கும் அதைவிட ஏன் இருபது வருடங்களானபின்னும் இன்னமும் கூட புரட்சித்தலைவருக்குமே வோட்டு குத்துபவர்கள் பெரும்பான்மையான தமிழர்கள். எந்தப் பக்கம் அரசியல் எவருக்கு ஒத்துவருகிறதோ அந்த வரிசையில் கலைஞரோ தலைவியோ தமிழகத்தின் விடிவெள்ளியாய் இருப்பர்.

இவர்களைத் தவிர்த்து தமிழகத்தின் மாபெரும் சக்தியென சொல்லிக்கொள்ளும்படியாக திமுகவின் நம்பர் டூக்களான ஸ்டாலினோ அழகிரியோ கூட இல்லை. கலைஞருக்கு பின் பிரியுமா நிற்குமா என்ற கேள்வி ஒருபுறம் என்றாலும் தி.மு.க என்ற அமைப்பாவது கண்டிப்பாக இப்போதைய வலிமையில் ஐம்பது சதவிகிதத்துடனாவது இருக்கும் என்பது என் எண்ணம். அதிமுக நிலைமை மிகவும் கவலைக்கிடம். ஜெயலலிதா இல்லாத அதிமுக அ.. தி.. மு.. க என்ற அளவில் சிதறுண்டாலே அதிருஷ்டத்தை எண்ணி திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான் என்ற நிலையில் இருக்கிறது.

இது கிடக்கட்டும். இப்ப எதுக்கு இந்தப் பதிவுன்னா.. 23.12.07 குமுதம் ரிப்போர்டர்ல ஒரு செய்தி படிச்சேன். அத காப்பி & பேஸ்ட் பண்ணவே இது. கோவையில் பசும்பொன் தேவரின் நினைவு விழாவை நடத்தி வைத்திருக்கிறார் எம். நடராஜன் (சசிகலா). இனி குமுதம் செய்தி.

_______________________________________________________________
விழாவில் பேசிய அனைவரும் நடராஜனைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அதன் உச்சகட்டமாக திருச்சி வேலுச்சாமி தன் பேச்சில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். ‘‘நடராஜன் விரும்பியிருந்தால் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு அவரே முதல்வராகி இருக்க முடியும். தனி மனிதராக முதல்வராகும் தகுதி இங்கே உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதற்கு பசும்பொன் தேவரும் அருள் புரிவார்!’’ என்று ஒரு போடு போட, அங்கே ஒரே கரகோஷம்.

நடராஜன் என்ன பேசப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, முதலில் பிடி கொடுக்காமல் நழுவல் நடையில் பேசிய நடராஜன், ‘‘அரசியல் பற்றி இங்கே பேச மாட்டேன். அதற்கான மேடை இதுவல்ல. அதைப்பற்றி ஜனவரி 17_ம்தேதி தஞ்சையில் நான் நடத்தும் தைப்பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் அறிவிப்பேன்!’’ என்று பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார்.

கூடவே, ‘‘அன்று என்னை நரசிம்மராவ், சென்னா ரெட்டி போன்றவர்கள் கூப்பிட்டு முதல்வராகச் சொன்னார்கள். அப்போது நினைத்திருந்தால் நானே முதல்வராகியிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை’’ என்றவர், கலைஞர் பற்றியும் பேசினார்.

‘‘கலைஞருக்கும் எனக்குமான நட்பு கோப்பெருஞ் சோழன்_பிசிராந்தையாரின் நட்பு போன்றது. கலைஞருக்கு என்மீதிருப்பது ஒருவித பயம் கலந்த நட்பு. கலைஞருக்கு என்னைத் தெரியும். ‘நடராஜன் எதைச் செய்தாலும் சரியாகச் செய்வான். நம்மை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்!’ என்று நினைத்து, ரொம்ப கவனமாக பயத்துடனேயே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். அது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்களுக்குத் தெரியவில்லை!’’ என்றபோது கூட்டத்தில் செம கை தட்டல்.

நடராஜன் வந்து இப்படிப் பேசிவிட்டுப் போனது கோவை அ.தி.மு.க.வில் வினோத சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நடராஜன் புதிதாக கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கு மேற்பட்டவர்களும், அறுபது சதவிகித மாவட்டச் செயலாளர்களையும் அவர் தன்பக்கம் கொண்டு வந்து அ.தி.மு.க.வை உடைக்கப்போகிறார். ஒரிஜினல் அ.தி.மு.க. நாங்கள்தான். இரட்டை இலைச் சின்னமும் எங்களுக்குத்தான் என்று மல்லுக் கட்டப் போகிறார்!’ என்பதுதான் அந்தச் சலசலப்புகள்.
__________________________________________________________________
படிச்சுட்டீங்களா?

1. இந்த நடராஜன் யாரு (உ.பிறவா சகோதரியின் மாஜி கணவர் என்பதைத்தவிர)?

2. அவருக்கும் அதிமுக விற்கும் என்ன கொடுக்கல்வாங்கல்?

3. அவருக்கெல்லாம் யாரு செலவு பண்ணி டிஜிடல் பேனர் முதக்கொண்டு பிரியாணி பொட்டலம் வரை செலவு செய்யறாங்க? என்ன எண்ணத்துல அவர் பின்னாடி கூட்டத்துக்கெல்லாம் போய் இப்படியெல்லாம் பேசறாங்க?

4. தோராயமா அவரு பின்னாடி எத்தன பேரு இருப்பாங்கன்னு எல்லாம் தெரிஞ்சா எனக்கும் சொல்லிட்டு போங்க. ஏன்னா கலைஞரும் ஜெயலலிதாவும் இவரோட பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்போது... நமக்கு இந்தாளோட பேக் கிரவுண்டே தெரியலியேனு ரொம்ப வெக்கமா இருக்கு.

அதோட கூட, தி.மு.க அதிமுக போன்ற கட்சிகளில் முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டம். ஏன்னா கூட்டமும் போட்டியும் நிறைய இருக்கும். அதனால ஒரு இயக்கம் தொடங்கறப்பவே சேர்ந்தாதான் சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம் (ஏன்னா அப்புறம் எல்லார்கிட்டயும் நான் கட்சி தொடங்கின காலத்துலேர்ந்து இருக்குற சீனியர்னு சொல்லிக்கலாமே!) என்று சொல்லி பாரம்பரிய தி.மு.க குடும்ப நண்பன் தடாலடியாக தே.மு.தி.க வில் சேர்ந்தான். இன்றைக்கு ஓரளவுக்கு வளர்ந்தும்விட்டான் என்பது வேறு கதை. அதனால் அதே இசுடைலை இந்தாளை நம்பி பண்ணலாமா என்று தயவு செய்து சொல்லவும்.

கொசுறு: தன் சொத்தையெல்லாம் வித்து புது இயக்கம் தொடங்கி விரைவில் தமிழகத்தை இவரும் கலக்கப் போறாராம். பார்க்க ஜூ.வி. இந்த இயக்கத்துல சேர மினிமம் ரிக்குவிஸிட்: சொத்தையெல்லாம் வித்து இயக்கத்துக்கு கொடுக்கணுமாம். அப்படிச் செய்றவங்கள மட்டுமே சேர்த்துப்பாராம்.

16 Comments:

  1. நாகை சிவா said...

    ஹய்யோ ஹய்யோ...

    தஞ்சாவூர்ல இருந்துக்கிட்டு நடராஜனின் திறமை அறியாமல் இப்படி சந்தேகப்படுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா?

    டி.ஆர். அப்ப அப்ப செய்வதை இவர் எப்போதும் செய்யுறார். அம்புட்டு தான் வித்தியாசம். கூடவே சின்ன எம்.ஜி.ஆர். தஞ்சை நாகை வரும் போது அடித்த கூத்துக்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது சாமியோவ்...


  2. நாகை சிவா said...

    "தமிழகத்தின் அடுத்த முதல்வர்"

    இதை பற்றி ஒரு நாள் சாட்டியது நினைவு இருக்கும் என்று நம்புறேன்.

    உள்துறையை மறக்க வேண்டாம்.ஐ'ம் யூவர் பெஸ்ட் பிரண்ட்... :)


  3. தருமி said...

    நம் ஊடகங்களில் இந்த ஆளுக்கும், சு.சாமிக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் எனக்குப் புரிவதேயில்லை.


  4. Unknown said...

    தமிழகத்தின் சில புரியாத(!?) புதிர்களில் இவரும் ஒருவர் :)


  5. rv said...

    புலி,
    இந்தாளு அடிக்கடி ரிப்போர்டர்லயும் ஜூவில வருவாரு தெரியும்.. அப்பப்போ அவரோட மண்டபத்துல (காவேரி மண்டபம் or something) எதுனாச்சும் கூட்டம் நடத்துவாரு.

    அதுக்கு மேல தெரியலையே.. அதான் இது..

    சின்ன எம்.ஜி.ஆரா..

    ---

    உள்துறை கேக்குதா? பாக்கலாம்.. பாக்கறேன்... (துக்ளக் மனோரமா ஸ்டைலில் படிக்கவும்)


  6. rv said...

    பெரியப்பா,
    ஒரு வேளை comic reliefஆ நினச்சு நிறைய கவர் செய்யறாங்களோ என்னவோ? :))


  7. பினாத்தல் சுரேஷ் said...

    //விவேக் ஏதோ படத்தில் சொன்னபடி "தமிழ்நாடே என் பின்னாடி பின்னாடின்னு ஆளாளுக்கு என்னடா சொல்றீங்க? தமிழ்நாடு உங்க பின்னாடி இருக்க நீங்க என்ன ஆந்திரா பார்டர்லயா நிக்கிறீங்க"னு கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வருகிறது//

    அது கில்லியில பிரகாஷ் ராஜ் சொன்னது,,

    இதுவே தெரியல.. நடராஜனோட பேக்கிரவுண்டு எப்படித் தெரிஞ்சிருக்கும்?

    ஒண்ணும் பாதகமில்ல.. ஆச்சு, இன்னும் 3 வருஷம். 2011ல முதல்வர் ஆனவுடனே எல்லாப் பத்திரிக்கையிலேயும் வாழ்க்கை வரலாறு போடுவான்.அப்ப தெளிவா தெரிஞ்சுக்கலாம்.


  8. இலவசக்கொத்தனார் said...

    புடின் பத்தி பேசறீங்க. ஜார்ஜியா அரசியலை புட்டு புட்டு வைக்கறீங்க. ஆனா நடராஜன் தெரியலை, சின்ன எம்ஜியார் தெரியலை. இதுலேர்ந்து உம்ம நுண்ணரசியல் நல்லாத் தெரியுது. :))


  9. Anonymous said...

    ராமநாதன் - சரியான நேரத்தில் சரியான பதிவு. இவர் (நடராஜன்) தமிழரசி என்னும் பத்திரிக்கைக்கு ஆசிரியர் (யார் வாங்கி படிக்கிறாங்க என்பது தெரியவில்லை.) இன்னொன்றும் புரியவில்லை. இதை யாராவது விளக்கினால் நலம்.

    அதிமுகவுக்கு கூடும் கூட்டம்/ஓட்டு எல்லாம் ஜெ.க்காகவே. அப்படியிருந்தும் எதற்காக சசிகலாவுடன் நட்பு ? அப்படி சசி என்னதான் ஜெ.க்கு உதவி/கைமாறு செய்துள்ளார் ? அல்லது இது ஒரு எமோஷன்ல் ப்ளாக்மெயிலா ? அடிக்கடி சசியுடன் மோதல் அல்லது மீண்டும் சேரல், எங்கு சென்றாலும் (மகாமகக் குளியலானாலும் சரி, ஓட்டுகேட்க சென்றாலும் சரி, ஹைதராபாத்தோ, சிறுதாவூரோ, பணிக்கர் பூஜையோ) அவரையும் கூடவே கூட்டிச்செல்லும் அளவிற்கு அதென்ன டிபெண்டன்ஸ்சி ? அப்படியென்ன ஜெ.வின் ரகசியம் ஏதாவது சசியிடம் உள்ளதா ? சசிக்குத் தெரிந்திருந்தால் நடராஜருக்கும் தெரிந்துவிடுமே ? கணவனை விட்டுவிட்டு ஜெ.கூட இருப்பதில் சசிக்கு அப்படி என்ன டிபெண்டன்சி ? என்னதான் சொத்துக்கள் வாங்கிப் போட்டிருந்தாலும் அதை பிற்காலத்தில் யார் அனுபவிக்கப் போகிறார்கள் ? விடியோ கேசட் கடை நடத்தி வந்த ஒருவருக்கு இப்படிப்பட்ட ஆம்பிஷன் யார் மூலம் ஏற்பட்டது ?

    ஒண்ணுமே புரியல.


  10. Geetha Sambasivam said...

    எது எப்படிப் போனா என்ன? இணையத்தின் தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஒரே தனிப்பெரும் தலைவி ஒருத்தி இருக்காங்கறதை மறக்காமல் இருந்தால் போதுமே! :)))))


  11. rv said...

    தஞ்சாவூரான்,
    //சில புரியாத(!?) புதிர்களில//
    :))))

    இதெல்லாம் புரிஞ்சுக்கவே முடியாத கேஸுகள் தான்...


  12. rv said...

    பெனாத்தலார்,
    //இதுவே தெரியல.. நடராஜனோட பேக்கிரவுண்டு எப்படித் தெரிஞ்சிருக்கும்?//

    :))

    உண்மைதான்... சன் ரிவியோட மிடில் ஈஸ்ட் ஸ்போக்ஸ்மேன் இருக்கறத மறந்து தப்பா பேசிட்டேன்.. மாப்பிடுங்கோ...

    //எல்லாப் பத்திரிக்கையிலேயும் வாழ்க்கை வரலாறு போடுவான்.//
    சொந்த டிவி தொடங்கி ஞாயித்துக்கிழமை கவியரங்கம் நடத்துவாரா? இல்ல தினசரி அறிக்கைவிட்டு ரிவியில காமிப்பாரா?


  13. rv said...

    கொத்ஸூ,
    புடின், ஜியார்ஜியா எல்லாம் சாதா உலக பாலிடிக்ஸு..

    நம்மாளுங்க ரேஞ்செல்லாம் எங்கியோன்னா இருக்கு?

    ஆமா... சென்னா ரெட்டியும், பி.வி.என் னும் சேர்ந்து இவர முதல்வர் ஆகணும்னு கட்டாயப்படுத்தினாங்களாமே... அது என்ன ஹிஸ்டரி? உமக்காவது தெரியுமா?


  14. rv said...

    அனானி,
    என்னவிட அதிகமா கேள்வி கேக்கறீங்க..

    நடராஜன் மேட்டரே புரிய மாட்டேங்குது... இதுல ஜெயா-சசி ரகசியமெல்லாம் புரிஞ்சுரவா போகுது? அதெல்லாம் அநுபவிக்கணும்... ஆராயக்கூடாது கேட்டகரி.

    முகமது பின் துக்ளக் படம் இன்னொரு வாட்டி பாக்கணும். 60-ல வந்தது இன்னிக்கும் அட்சரம் பிசகாம பொருத்தமா இருக்கு நம்மூர் அரசியலுக்கு. :)


  15. rv said...

    தங்கத்தலைவியே,
    மயில் வந்தாலும் வராட்டியும் வந்து ஆசீர்வாதம் செய்யும் நன்னெஞ்சை மறக்க முடியுமா?

    நன்னி.


  16. வவ்வால் said...

    அய்யா,
    கஞ்சா கருப்பு என்ற நகைச்சுவை நடிகர் அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்காராம், அதுவும் உண்மையானு விசாரிச்சு சொன்னா தேவலை.

    ஏன் எனில் அடுத்த வருசம் நானும் சினிமால திறமைக்காட்டலாம்னு திட்டம் போட்டு இருக்கேன், வேற எதுக்கு அடுத்த முதல்வர் ஆக தான்! :-))(எனக்கு எத்தனை போட்டியாளர்கள் வருவாங்கனு தெரிஞ்சுக்கிட்டா கவுண்டர் தர வசதியா இருக்கும்ல)


 

வார்ப்புரு | தமிழாக்கம்