211. என் அப்பா மரு. இராமதாஸ் இல்லையே!

மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸோட திட்டம் புல்லரிக்க வைக்குது. கிராமத்துல, சிறுநகரங்கள் கட்டாய சேவைனு மருத்துவ படிப்பை இன்னும் ஒராண்டு நீட்டுறாராம். அவனவன் அரியரில்லாம படிச்சு முடிச்சு பட்டம் வாங்கவே வயசு இருபத்தியஞ்சு ஆயிடுது. வெறும் எம்.பி.பி.எஸ்னா நீங்க என்ன.. கிராமத்து ஆளுங்க கூட போவாங்களா?

டாக்டர் கிட்ட போகணும்னா ஒடனே எம்.எஸ், எம்.சி.ஹெச் கிட்ட மட்டுமே போவோம்க வேண்டியது. ஒரு எம்.எஸ்ஸோ எம்.டியோ வாங்க ஒரு மனுசன் எவ்வளவு உழைப்பும் காலமும் செலவழிக்கணும்னு ஒருத்தருக்கும் இங்கே கவலையில்ல. சீட் அளவ அதிகப்படுத்துங்கன்னா அதுவும் மாட்டீங்க. எழுது பரிட்சைய பத்துவாட்டி. அந்தாளு பாவம் ஒரு இருபது வருஷத்த, மத்த தொழில் ஆளுங்களவிட அதிகமா செலவழிச்சு நாப்பது வயசுல வெளிய வந்தாருன்னா "இதோ பாருய்யா.. ஒண்ணுமில்லாத கன்சல்டிங்குக்கு இருநூறு ரூபாய் வாங்குறான்னு" கமெண்ட் அடிக்க வேண்டியது. ஏன் பிசாத்து சிவாஜி சினிமா படம் பார்க்க இருநூறு ருபாய் ஒரு டிக்கட் கொடுத்து பாக்குறீங்க. இருநூறு ருபாய்க்கு க்வார்ட்டர் வாங்கி அடிக்கிறீங்க. ஆனா இருபது வருஷம செலவழிச்சு படிச்சு வந்த தகுதியான ஒரு ஆளுக்கு கொடுக்கன்னா மட்டும் கசக்குது.

ஸோ இருபதுவருஷம் எக்ஸ்ட்ரா படிக்கணும்.. பீஸா இருபது ரூபாய்க்கு மேல வைக்கக்கூடாது. வாங்க, அப்படியே வந்து அல்லாரும் லாலிபாப் வாங்கி வாயில் வச்சுட்டு போங்க..

ஆகமொத்தம் வெறும் எம்.பி.பி.எஸ் பத்தாது. அதுக்கப்புறம் வெட்டி முறிச்சு திரும்ப ப்ளஸ் டூ பரிட்சை மாதிரி விழுந்து விழுந்து சில வருஷங்கள் படிச்சாக்ககூட பெரும்பாலும் க்ளினிகல் சப்ஜெக்ட்ஸ் கிடைக்காது. ஏதாவது கிடைக்கும். அப்படி இப்படி அடிச்சு பிடிச்சு அதுவரைக்கும் சொந்தக்காரங்க தொடங்கி 'எங்காத்து அம்பி லாஸ் ஏஞ்சலீஸ்ல "Le Code" எழுதுறான்; விப்ரோல தெரியுமோ னோக்கு.. லட்சத்துக்கு ரெண்டு ரூபா குறைச்சலாத் தராளாம்.. அதனால இன்போஸிஸ் போயிட்டா பொண்ணு' அப்டினு அளந்து விடும்போதே "ஏண்டிம்மா நம்ம விஜய் என்ன செய்றான்.. இன்னும் படிச்சுண்டு தான் இருக்கானா? இந்த நாலாவது அட்டெம்ட்லயாவது செப்டம்பர் Chandigarh PGI லிஸ்ட்ல வருவானா?" அப்படின்னும் கேட்டுப் போறதையும் வாங்கிகிட்டு, வீட்ல இருந்து வெட்டிச்சோறுன்னு பெத்தவங்க சொல்லலேன்னாலும் வீம்புக்காக ஏதாவது பெரிய ஊர்ல பார்ட் டைமா பத்தாயிரத்துக்கும் பதினஞ்சாயிரத்துக்கும் எங்காவது வேலைக்குச் சேர்ந்து படிக்கவும் செஞ்சு ஒருவழியா ஏதாவது மேல்படிப்பு கிடைச்சு அத முடிக்கறதுக்குள்ள முப்பது வயசு காரண்டி. அப்படியே படிச்சு முடிச்சாலும் என்ன வெறும் எம்.டியாப்பா? மேல எந்தப் பீல்டுல பா ஸ்பெஷலைஸ் செய்யப் போறேனு அதே மாமி வந்து கேட்டு, இன்னும் ஏதாவது படிக்க ஆசைப்பட்டு அதே சைகிள் ரிப்பீட் ஆகி வெளிய வரதுக்கு முப்பத்தேழு கம்மி.

இதுல என்னமோ சுரைக்காய் மாதிரி சும்மாதானே கெடக்குற.. போய் இன்னும் ஒரு வருஷம் லேட்டாத்தான் செட்டிலாகேனு அன்புமணி அண்ணாச்சி சொல்றாரு. அதென்னய்யா அது அநியாயம்? மருத்துவர்களெல்லாம் மட்டும் ஏழை, 'தலித்' மக்களோட வரிப்பணத்த சுரண்டி ஏப்பம் விட்டு படிச்சு வந்து நன்றிகெட்ட நாதாரிகளாட்டம் கிராமத்துக்கு போகமாட்டோம்னு போராட்டம் நடத்துறாங்கனு அப்படிங்கற மாதிரி பில்டப்?

வெளிநாடுகளுக்கு போறதோ ஏன் நம்மூர் தனியார் காலேஜ்ல முப்பது நாப்பது கொடுத்து மேல்படிப்பு வாங்கறதோ எல்லாரலையும் முடியிற காரியமா? இங்க இருக்குற எல்லாருக்கும் என்ன மாக்ஸிமம் ஒரு 35 வயசு இருக்குமா? உங்க பாட்ச்ல மெடிசின் எடுத்த பசங்க இப்ப என்ன செஞ்சிகிட்டிருக்காங்கனு யாருக்காவது தெரியுமா? சும்மாதானே இருக்கான்.. போடா கிராமத்துக்குன்னா. நான் கேட்கிறேன்.. "ஏண்டா போவனும்? உனக்கு ஆசையாயிருந்தா நீ போ.. இல்ல அப்டி போயே ஆகணும்னா செட்டில் ஆக வழி சொல்லு.. பணத்த கொடு.. தன்னால போவான். சட்டமே போட வேணாம்"

இன்னிய தேதிக்கு ஸ்டைபண்ட்னு சொல்லி என்ன கொடுக்கிறாங்கனு யாருக்காவது தெரியுமா? +2 முடிச்சு மருத்துவம் சேர்ந்தா என்ன எல்லாரும் தியாகிங்க ஆயிடுவாங்களா? அவனுங்களும் குழந்த குட்டி குடும்பம்னு ஒண்ணுத்த கட்டிக் காப்பாத்த வேணாமா? அததுக்குன்னு வயசுன்னு இருக்கா இல்லியா?

சரி.. இது சம்பந்தமில்லாதது.. விடுங்க.. இங்கன எங்கியோ படிச்சேன்.. எம்.எல்.ஏ எம்.பியெல்லாம் ஆகணும்னா கிராமத்துல வேலை செய்யணும்னுட்டு. நானும் அதே தான் நினைச்சேன். இஞ்சினியரெல்லாம் கிராமத்துக்கு ஒரு கோட் எழுதினாதான் பாரினோ பெங்களூரோ போவ முடியும்னு சட்டம் போடுவீங்களா? ஆடிட்டர்லாம் பண்ணையார் கணக்குப்பிள்ளையாய் ஒரு வருஷம் இருக்கணுமா? வக்கில் ஆர்கிடெக்ட்டெல்லாம்? பி.ஏ, பி.எஸ்.எஸி, பி.எட் படிக்கிறவங்க அப்பன் ஆத்தால்லாம் சொந்தமா காசு போட்டு காலேஜ் கட்டி படிக்கவைக்கிறானுங்களா? என்னங்கய்யா கத விட்டுகிட்டிருக்கீங்க.

கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை வேண்டாம்னு எங்கியாவது சொல்லிருக்கோமா? வேணும்தான். essential servicesனு பந்தாவா பெத்த பேரு கொடுக்கிறீங்க. essential servicesஉக்கு உண்டான தகுதியான பணம் கொடு. போவோம். அம்புட்டுதான் மேட்டரு. கடன உடன வாங்கி படிச்சு எப்போ லைப்ல எழுந்து நிப்போம்னே புரியாம முழிபிதுங்கி நிக்கிற மெடிகோஸ் மேலயா பாத்து பாத்து ஏனுங்கப்பா குண்டு போடறீங்க?

ஏன் பணம் பணம்னு அலையிறோமா? எங்கப்பா இன்னா மரு. அய்யாவா? சோனியாஜிய செல்லுல கூப்பிட்டு 'போனாப் போகுது.. நம்ம பையனுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியாவது போட்டுக்கொடுங்க"னு கேட்கிறதுக்கு. நாங்கள்லாம் சாதாரணப்பட்டவங்க.. எங்கள விட்ருங்க.

58 Comments:

  1. G.Ragavan said...

    அன்புமணி கொண்டுவந்துள்ள திட்டம் முழுமையாக சிறந்த திட்டமல்ல என்பது என் கருத்து. பயிற்சிக்கான ஒரு வருடத்தில் இது போன்ற இடங்களில் இடலாம். அதுவுமில்லாமல் இதை முதலில் அரசியல்வாதிகளிடமிருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும்....தொகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் மாதம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் சும்மா எட்டிப்பார்த்து காபி டீ சாப்பிடக் கூடாது. ஆறுமாதங்களுக்கு ஒருநாள் கண்டிப்பாக அந்த ஊரில் தங்க வேண்டும். இதை முதலில் கொண்டு வரட்டும். இதுதான் இப்பொழுதைக்கு உண்மையிலேயே தேவையானது.


  2. Unknown said...

    அவ்வளவு சிரமப்பட்டு அஞ்சு பைசாவுக்கு பிரயோசனமில்லாத அந்த சனியன்பிடிச்ச மருத்துவ படிப்பை என்னத்துக்குப் படிக்கணும். பேசாம சாஃப்ட்வேரோ கீஃப்ட்வேரோ படிச்சா நெறயா சம்பாதிக்கலாம்ல.


  3. Anonymous said...

    Cool down!!
    cool down!!


  4. இலவசக்கொத்தனார் said...

    மருத்துவர் என்ற உங்க ஆதங்கம் பதிவில் நல்லாத் தெரியுதுங்க. நீங்க சொல்லும் மாமிகள் நிறையாப் பேரை நான் பார்த்திருக்கிறேன். நான் பி.காம் படித்துவிட்டு பின் சி.ஏ. மூணு வருஷம் படிக்கிறதுக்குள்ள நம்ம சுக்குநீர் நண்பர்கள் (அதான் இஞ்சி காஞ்சு போச்சே) எல்லாம் சம்பாரிக்கிறதைச் சொல்லி காட்டுவாங்க. நல்ல வேளை அப்போ நீர் இந்த மாதிரி கணக்குப் பிள்ளை ஐடியா எல்லாம் தரலை. இல்லைன்னா இப்போ மருத்துவர் ஐயா அந்த மாதிரி கட்டாயப்படுத்தி சிதம்பரம் அப்படிச் செஞ்சாலும் செய்ய வேண்டியது வரலாம்.

    வோட்டு அரசியல் செய்யும் பொழுது என்ன கூத்து வேணும்னாலும் அடிக்கலாம். ஒரு தொலைநோக்கு இல்லாம தாந்தோன்றித்தனமா ஆட்சி செய்தா இப்படித்தான்.

    //'போனாப் போகுது.. நம்ம பையனுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியாவது போட்டுக்கொடுங்க"னு கேட்கிறதுக்கு.//

    இதுதாங்க உம்ம பஞ்ச்!


  5. VSK said...

    தமிழகச் சூழ்நிலையில் தற்போது இல்லையென்பதால்,இதைப் பற்றி அதிகம் சொல்ல முடியவில்லை.

    இருப்பினும், பொதுவாக ஒரு கருத்தைக் கூறிக்கொள்கிறேன்.

    7-8 ஆண்டுகளுக்குள் முடிக்கும் படிப்பை கிராம சேவைக்காக இன்னுமொரு ஆண்டு நீட்டிப்பது ஒருவிதத்தில் சரியே.
    மருத்துவர்கள் இதை வரவேற்க வேண்டும், தங்களது படிப்பை அனுபவமாக்க வழி வகுக்கும் ஒரு வாய்ப்பாக!

    கிராமமக்கள் இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், சாதிக்கொடுமை, அடிப்படை வசதியின்மை போன்றவற்றில் நகர மக்களை விடப் பின் தங்கியிருக்கும் இவர்களை இப்படி கற்றுக்குட்டி மருத்துவர்கள் கையில் ஒரு சோதனை எலிகளாகச் செய்யும் அரசின் இந்த கேவலமான, மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து.

    மகாத்மாவின் கருத்தான, இந்தியாவின் ஆத்மாவைச் சிதைக்கும் இந்த கேடு கெட்ட செயலை.


  6. குமரன் (Kumaran) said...

    நானும் தொலைக்காட்சியில் இந்தச் செய்தியைக் கேட்டபோது நினைத்துக் கொண்டேன். இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது என்று. தகுந்த வாய்ப்புகள் இருந்தால் கட்டாயம் கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்வார்கள் என்று நீங்கள் இந்த இடுகையில் சொன்னது போல் தான் நானும் நினைத்துக் கொண்டேன். வாய்ப்பு என்பது தகுந்த அளவிற்கு வருமானம் தரும் ஒன்று என்பதும் உண்மை. சட்டம் போட்டு கட்டாயமாக்குதல் வழியல்ல. அப்படி செய்ய நம் நாடு சர்வாதிகார நாடும் இல்லை. இது ஜன நாயக நாடு (யாராவது பண நாயக நாடு என்று சொன்னால் அதனையும் மறுப்பதற்கில்லை. :-) மாண்புமிகு அன்புமணி ஐயாவும் மறுக்கமாட்டார் என்று நினைக்கிறேன். பெயரளவிலாவது ஜனநாயகமாக இருக்கிறதே. அதுவும் போய்விடும் இது போன்ற சட்டங்கள் வந்தால்).


  7. சேதுக்கரசி said...

    உள்ளேன்ஸ் (பி.க :-))


  8. ramachandranusha(உஷா) said...

    சரி சரி கண்ணைத் தொட, இப்ப என்ன ஆச்சு.அதெல்லாம் கிடப்புல போடப்படும். கவலைப்படாதே!


  9. Anonymous said...

    Hahahaha,
    Gud joke. No, No am just telling abt ur blog.

    well, I have a small doubt. How many yrs did u take to finish off ur medico?

    If at all he can study for 7-8yrs which can be finished in 5 and half years, why cant he spend one more year for the benefit of people who paid his fees indirectly.

    Dont say such a silly points that IIT-ians are also the beneficiary. but Medicos are being paid in lakhs(for each individual). If you are not ready, just refuse their grants or the study. do some business (ofcourse u r going to the same with a degree - as u said)

    No one is crying for u. if u aint willing to join, No problem. there r lot of villagers ready to join.

    I cant understand in Blogs. why all r revert back questions as a answer, irrelevent to the subject.


  10. மணியன் said...

    நிரம்பவே உணர்ச்சிவயப்பட்டு மற்ற தொழிற்காரர்களை ஒரு காய்ச்சு காய்ச்சிருக்கிறீர்கள் :) அவரவர் பிரச்சினைகளை அவரவர் காலணி அணிந்தால்தான் தெரியும். ஊர்வம்பை காது கொடுத்துக் கேட்டால் எந்த உருப்படியான காரியத்தையும் செய்ய முடியாது.

    கிராமங்களுக்கும் சிறுநகரங்களுக்கும் அரசுமருத்துவர்கள் செல்வதை விரும்பாததால் மாணவர்களை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மருத்துவக் கல்வியின் காலம் நீட்டிக்கப் படக் கூடாது.

    கொடுக்கப்பட்ட கிராம பணியிடத்தை மாற்றக் கோரிவரும் விண்ணப்பங்களை அரசியல்/ஊழல் தாக்கமின்றி பரிசீலித்தாலே பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும். தமிழக அரசு சேவையில் சேர்ந்த தன் மகனின் போஸ்டிங் ஒரு கிராமத்தில் என்று முதல்வாரம் புலம்பிய நண்பர் அடுத்த வாரமே பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் பெற்றது நான் கண்டது. இதற்கு மாற்று தகுந்த ஊக்க ஊதியமும் பிற ஊழியர்நல திட்டங்களும் தான். மென்பொருள்/BPO ஊழியர்களை 'கவனித்துக்' கொள்வதைப்போல இளம் மருத்துவர்களின் ஆசாபாசங்களுக்கும் தீனி போடலாம்; 15 நாட்களுக்கு பக்கத்து பேருரில் பணி, ஒரு மாவட்டத்திற்குள் உல்லாச சந்திப்புக்கள் என்று....


  11. மெளலி (மதுரையம்பதி) said...

    உங்க பக்க நியாயத்தை நல்லா, உணர்வு பூர்வமா சொல்லியிருக்கீங்க.....


  12. பினாத்தல் சுரேஷ் said...

    மருத்துவர்கள் பக்கத்து நியாயங்களை தெளிவாவே சொல்லியிருக்கீங்க டாக்டர். ஆனா, உஷாக்கா சொன்னா மாதிரி இது கிடப்பில் போடப்படுவது திண்ணம் (பீடிக்கட்டுல மண்டையோடே இன்னும் வேலைக்கு ஆவலை:-)..

    மணியன் சொல்ற மாதிரி மத்த தொழில்காரங்களைத் திட்டியிருக்க மாதிரி எனக்குத் தெரியலையே.. அவர் சொல்லியிருக்க யோசனைகள் ஆக்கபூர்வமா இருக்கு.. அதனால் நிராகரிக்கப்படுகிறது :-)


  13. முகமூடி said...

    அம்பு மணி படிச்ச காலத்துலயே இந்த மாதிரி ஒரு சட்டம் இருந்திருந்தா, "ஜும்பலக்காம்பட்டி கிராமத்தில் சாதா தலைவலி என்று சிகிச்சை பெற வந்த இளைஞர் சாவு. பயிற்சி மருத்துவர் கைது. பட்டம் போலியா அல்லது போலி மருத்துவரா என்று ஆர்.டி.ஓ விசாரணை" அப்படீன்னு தினமூடி மூணாம் பக்கத்து பெட்டி செய்தியோட மேட்டர் முடிஞ்சிருக்கும். முந்தாநேத்து ப்ளாக் ஆரம்பிச்சி தன்னத்தானே இணைய ஆத்தாடி, நாடோடின்னு சொல்லிக்கிறவனெல்லாம் கொல்லைப்புர அமைச்சர்னு கிண்டல் செய்யிற அளவும் போயிருக்காது, நமக்கும் ஈகோ இல்லாத அமைச்சரு கிடச்சிருப்பாரு.. என்ன ஒண்ணு, எங்கூரு காரரு கோட் சூட்டெல்லாம் போட்டு எப்பிடி இங்கிலீஸ் பேசறாரு பாத்தியான்னு வாசிங்க்டன் டிசியில மயிலாடுதுறை பட்டிக்காட்டானுங்க மணிக்கூண்டு மிட்டாய்க்கடைய பாத்து வாய்பிளக்கிற சந்தோசம் மட்டும் இருந்திருக்காது. கம்பேரிட்டிவ்லி இது நோ பிக் (B not P) டீல்.

    மத்தபடி டோண்ட் ஓர்ரி.. ப.ம.கவுல newborns அணி - மருத்துவர் அமைப்பு செயலாளர் போஸ்டு நிரந்தரமா ஒங்களுக்குத்தான் (இசுடாலின் இளைஞர் அணியில இருந்து ரிடையர் ஆகும்போது உங்களுக்கும் toddlers அணிக்கு ப்ரமோஷன் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்திலே....)


  14. முகமூடி said...

    // கிராமமக்கள் இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், சாதிக்கொடுமை, அடிப்படை வசதியின்மை போன்றவற்றில் நகர மக்களை விடப் பின் தங்கியிருக்கும் இவர்களை இப்படி கற்றுக்குட்டி மருத்துவர்கள் கையில் ஒரு சோதனை எலிகளாகச் செய்யும் அரசின் இந்த கேவலமான, மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து. //

    இது பாயிண்டு...


  15. rv said...

    ஜிரா,
    //தொகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் மாதம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் சும்மா எட்டிப்பார்த்து காபி டீ சாப்பிடக் கூடாது. ஆறுமாதங்களுக்கு ஒருநாள் கண்டிப்பாக அந்த ஊரில் தங்க வேண்டும்.//
    :)))))))))

    விரக்தியில் வரும் சிரிப்புதான்.. வேறென்ன?


  16. rv said...

    உமையணன்,
    ஆமாம்.. நீங்கள் சொல்வது சரி. இப்படி கஷ்டப்பட்டு படிக்கவே தேவையில்லை.


  17. rv said...

    அனானி,
    கூலிங்... கூலிங்.. கூலிங்.. ரைசிங்.. ரைசிங்.. கூலிங்...


  18. rv said...

    கொத்ஸ்,
    ஆமா.. இந்த மாமிகளுக்கு மொதல்ல ஒரு வழிசெய்யணும்... சன் டிவியில் 24 மணிநேரமும் சீரியல் போட்டாதான் வீட்ட விட்டு வெளியே வரமாட்டாங்க.. அதுனால சன் டிவிக்கு மனு அனுப்புவோம்.

    வோட்டு அரசியலே தான். துறையின் கறைகளை துடைக்க...

    நன்னி.


  19. rv said...

    வீ.எஸ்.கே,
    //இவர்களை இப்படி கற்றுக்குட்டி மருத்துவர்கள் கையில் ஒரு சோதனை எலிகளாகச் செய்யும் அரசின் இந்த கேவலமான, மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து.//
    இது சூப்பர் பஞ்ச்.

    அநுபவப் பாடம் கிடைப்பதை யாருமே வேண்டாம்னு சொல்லலை. ஆனா ஒரு teaching hospitalஇல் கிடைக்கும் அனுபவப் பாடம் கிராமங்களில் கிடைக்கப்போகிறதா?
    ஏன்னா இப்ப இருக்குற நிலைமைக்கு அமைச்சர் படிப்புக் காலம் நீட்டிக்கப்படாது. ஆனா இந்த புது ஷரத்தும் மாற்றப்படுவதற்கில்லைனு ஒரு குழப்பலான அறிக்கை கொடுத்திருக்காரு.


  20. rv said...

    ஆம் குமரன்,
    //தகுந்த வாய்ப்புகள் இருந்தால் கட்டாயம் கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்வார்கள் //

    கட்டாயம் போவார்கள். இது ஏதோ சும்மா சொல்லவில்லை. எனக்குத் தெரிந்து எரிகிற கொள்ளியில் எறும்பைப் போல தவிக்கிறார்கள். பலவாண்டுகள் செலவழித்தாகிவிட்டது. வேறு துறைக்கும் செல்லமுடியாது. இங்கேயும் வழியில்லைனு கஷ்டமான நிலைமை தான்.

    இப்படி இருப்பவர்கள் நியாயமான சம்பளம் கிடைக்குமாயின் கண்டிப்பாக போவார்கள். குறிப்பாய் பெற்றோர்களோ நெருங்கிய உறவினர்களோவென இத்துறையில் இல்லாமல் ஒரு சிறிய base கூட இல்லாதவர்கள். இது என் கணிப்பு.


  21. Anonymous said...

    the point is well made. The government should ask all educated to do service in villages. what's needed is better medical facilities or the proper functioning of existing medical facilities doctors are our second concern.

    if people are forced to offer service what kind of service will they provide. I agree with VSK people should oppose this.

    anbumani can rather include social subjects in medical curriculam to inspire students. Make them do medical camps as part of their curriculam.. make them do summer projects as part of degree.


  22. rv said...

    சேதுக்கரசி,
    பி.க நன்றி சொல்லும் இந்த பி.கவிற்கு பதிலனுப்பும் எண்ணம் உண்டா??? :))


  23. rv said...

    உஷாக்கா,
    ஹூம்.. தொடச்சிட்டேன். கர்சிப் ரிட்டர்ன் அனுப்பி இருக்கேன்..

    கிடப்பில் போடப்படவேண்டும் என்பதே ஆசை. ஆனால் வீம்புக்கு பெயர் போனவர் சம்பந்தப்பட்டவர்.

    -------------
    நிறைய பேரு நான் அபெக்டட் பார்டி உணர்ச்சிவசப்பட்டுட்டேனு நினச்சுருக்காங்க. இல்லை, நம்ம நிலைமை முருகன் அருளால் நல்லாவே இருக்கு. ஒரே துறைங்கிறதால இந்த மேட்டர் பத்தி என் கருத்துகள் இவை. அவ்வளவே.


  24. rv said...

    மதன்,
    ஜோக்கா இருக்கு உங்களுக்கு..:))

    அடிமைப்பத்திரம் சேருவதற்கு முன்னாடி எழுதி வாங்கிருந்தாங்கன்னா இப்ப யாருங்க எதிர்ப்பு தெரிவிக்க போறாங்க. AFMC இதேமாதிரி செய்யுறாங்க. அத எதிர்த்து யாரும் போராட்டம் நடத்தலியே.. யோசிங்க.

    தனியொரு மாணவருக்கு பல லட்சங்கள் செலவுங்கறது உண்மைதான். படிப்பு அந்த மாதிரி. திருவிளையாடல் மாதிரி எந்த படிப்புக்கு எவ்வளவு செலவோ அந்த அளவுக்கு சேவையை பிழிஞ்சிக்கலாமா?

    அப்புறம் கொஸ்டின் இஸ் வெரி மச் ரெலவண்ட், யுவர் ஆனர்.

    மத்தபடி நான் எப்படி பாஸ் பண்ணேன், பிஸினஸ் மேட்டர் எல்லாம் விசாரிச்சதுக்கு நன்னி.
    எனி ஹெல்ப் தேவைப்பட்டா காண்டாக்ட் பண்ண ரிடர்ன் அட்ரஸ் வுடலியே!


  25. rv said...

    மணியன்,
    //நிரம்பவே உணர்ச்சிவயப்பட்டு மற்ற தொழிற்காரர்களை ஒரு காய்ச்சு காய்ச்சிருக்கிறீர்கள் //
    இல்லியே.. மற்ற துறையினரை தாக்கவேயில்லையே. அப்படி தோன்றினால் சொல்லவும், கண்டிப்பாக அது என் எண்ணமல்ல.

    //கிராமங்களுக்கும் சிறுநகரங்களுக்கும் அரசுமருத்துவர்கள் செல்வதை விரும்பாததால் மாணவர்களை பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள். //
    இதுதான் மேட்டரே.

    அவர்கள் ஏன் போக மறுக்கிறார்கள் என்ற கேள்வியை மக்கள் மறக்கும்படி செய்ய எளிதான மாஸ் ஹிப்னோடிக் "டாக்டர்கள் அனைவரும் பேராசைப்பட்டு, சிட்டியில் க்ளினிக் வைத்து அதிகம் பிடுங்குகிறார்கள்". இதை வலையுலகில் கூட பலரும் நம்புவது அதிசயமாக இருக்கிறது.

    நான் பதிவிலேயே கேட்டபடி, இப்போது முப்பது வயதாகும் பதிவர்கள் தங்கள் பாட்சில் மெடிசின் சேர்ந்த ஆளுகளின் நிலைமையை அறிந்துகொண்டால் பிரச்சனை கொஞ்சமாவது புரியலாம்.

    நீங்கள் சொல்லும் யோசனைகள் சரியானவை. ஆனால் அதன் காரணமாகவே நிராகரிக்கப்படும் என்று பெனாத்தலார் சொன்னதுதான் உண்மை.


  26. துளசி கோபால் said...

    அமைச்சர் பதவியிலே ச்சும்மாக் கெடந்தா எப்படிங்க? எதாவது
    சொல்லணுமேன்னு சொல்லிப்புட்டார். அதுக்கு ஏன் இந்த அளுவாச்சி..........
    அதெல்லாம் கிடப்புலே போட்டுட்டாங்க(ளாம்)

    ஆமாம். நம்ம ஜிரா சொல்றாரே 'ஊருலே ஒரு நாள்' தங்கணுமுன்னு.........
    எதாவது விவகாரமாயிரப்போது...........................
    எல்லா ஊருலேயும் 'ட்ராவலர்ஸ் பங்களா' கட்டச் சொல்லுங்கப்பா முதல்லெ:-))))


  27. வடுவூர் குமார் said...

    அட! இதில இவ்வளவு பிரச்சனையா?
    பதிவையும் & பின்னூட்டத்தையும் படித்த பிறகு உங்க பீலீங்கு ்கு மரியாதை கொடுத்து கொஞ்ச நாளில் மறக்கப்படும் என்று நினைக்கிறேன்.
    VSK சொன்ன மாதிரி "கத்துக்குட்டி" பிரச்சனையும் வர அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளது.
    அரசியல்வாதிகள் தாங்கள் இந்த மாதிரி பேசுவதற்கு முன்பு யாரிடமாவது இதைப்பற்றி விஜாரிக்கமாட்டார்களா?


  28. Boston Bala said...

    மருத்துவ பட்டத்திற்கு கட்டாய சேவை…- கருத்துக்கணிப்பு

    தற்போதைய நிலை:
    சரியான திட்டம் [ 21 ]
    தவறான திட்டம் [ 7 ]

    என் வாக்கு - சரியே :)


  29. ரவி said...

    ஏ என்னப்பா இது...பதிவை படிச்சுட்டு, எதிர்த்து கருத்து சொல்லலாம்னு க்ளிக்கினா யாருமே எதிர்த்து கருத்து சொல்ல மாட்டேங்குறாங்க...

    ஓவர் ஜல்லியா இருக்கே...!!!

    வி.எஸ்.கே அய்யா சொல்வதை ஏத்துக்க முடியாது...அஞ்சு ஆறு வருஷம் படிச்ச பிறகும் கத்துக்குட்டி டாக்டர்னு எப்படி சொல்லலாம் ? ஏன் அதே டாக்டர் சிட்டியில் இருந்தா என்ன கத்துக்காத குட்டியா ? அதே டாக்டர் அப்பல்லோவுல ஜாய்ண் பண்ணா அவருக்கிட்ட போறவங்க பரிசோதனை எலி இல்லையா ? மருத்துவ படிப்பு என்பதை ஏன் ப்ராக்ட்டீஸ்னு சொல்றாங்க படிச்சு முடிச்ச பிறகும் ? ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா கத்துக்கிட்டே இருக்கனுமுன்னு தானே...என்ன நியாயம் உங்க நியாயம் வி.எஸ்.கே அய்யா ? இதுக்கு முகமூடி வேற சப்போட்டு..

    அடுத்தது...

    ஏன் ? ஒரு வருஷம் கிராமத்துல போயி வேலை செய்யுங்கப்பா அப்படீன்னா தலையில இருந்து காலு வரைக்கும் எரியுது ? மெரிட்ல தானே படிச்சு வந்தீங்க ? இல்லை அமவுண்டு கொடுத்து "மருத்துவ படிப்பை" வாங்கீட்டீங்களா ? மருத்துவ படிப்பு ஒரு "சேவை" என்பதை ஒத்துக்கிறீங்களா இல்லையா ? தன்னலம் பாராமல் மக்களுக்காக உழைக்கும் "மக்கள் பணி" என்பதை ஒத்துக்கறீங்களா இல்லையா நீங்க ? அப்படின்னா ஏன் மக்களுக்காக - அவன் கிராம வாசியா இருந்தாலும் - நரக, ச்சே நகர வாசியா இருந்தாலும் செய்யவேண்டியது தானே ?

    ஏன் கிராமமுன்னா மெடிக்கல் ரெப்பு வந்து வாசப்படியில நிக்கமாட்டான், கிளுகிளுப்பா நர்சுங்க இருக்காது, லேப்டாப்பு, மாருதி ஸ்விப்ட்டு, கண்ட்ரி க்ளப் மெம்பர்ஷிப்பு, மால்ல ஷாப்பிங், சத்யம்ல படம்னு டைமை ஓட்ட முடியாதுன்னா வேனாங்கறீங்க ?

    நெஞ்சத்தொட்டு சொல்லும்யா, மனித சேவை, மக்கள் சேவைக்காக டாக்டர் படிப்புக்கு வந்தீரா, இல்லை காசு பார்க்க மட்டுமா ?

    காசு பார்க்க ஆயிரம் தொழில் இருக்கேய்யா...டாக்டரை கடவுளா இல்லை நினைக்கிறான் நம்மாளு...

    அவன் நினைப்புல மண்ணை போடுறமாதிரி போராட்டம் நடத்துற மருத்துவ மாணவர்களை நினைச்சு, நெஞ்சு கொதிக்குதுய்யா...

    ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க இராமநாதன். பொறவு பகிரங்க அறிக்கையோ, அடுத்த பதிவோ, எதுவார்ந்தாலும் எங்களுக்கு ஓக்கேதான்..

    ::)) (சிலபல ஸ்மைலிகள்)


  30. முகமூடி said...

    பாஸ்டன் பாலா @ சற்றுமுன் ஓட்டுச்சாவடி சொன்னது ::

    // அவர்களாகத்தான் கிராமங்களுகு செல்ல மாட்டேன் என்கிறார்கள். ‘ப்ராக்சிஸ்’ என்னும் பெயரில் பயிற்சிக்காலத்திலோ, மருத்துவ அனுபவம் முழுமையாக இல்லாத ஆரம்பகாலத்திலோ, பணியாற்றுவதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? //

    பாபா, தமிழ்நாட்டில் பொறியியல் முடித்த மாணவர்களுக்கு அப்ரண்டீஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது தெரியுமா? அதற்கு பதிவு அலுவலகம் சென்னை தரமணியில் இருக்கிறது. அரசு பணி கனவில் இருக்கும் மாணவர்கள் அதில் பதிவார்கள். பின்பு சொற்ப பணம் இடம் மாறினால் பொறியியலாளர்களுக்கு பொபது, மின்வாரியம் என்று ஏதோ ஒரு அரசு நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி காலம் ஒதுக்குவார்கள். அதற்கு மாத ஊதியம் (ஊக்கத்தொகை) ரூ.1120 - பத்து வருடங்களுக்கு முன்பு. இப்போது ஒரு பத்து இருபது ஏ(ற்)றியிருக்கலாம். என் சிவில் நண்பன் ஒருவன் இத்திட்டம் மூலம் பொ.ப.து (PWD)ல் அப்ரண்டீஸ் ஆனான். அவனது குறிக்கோள் அதன் மூலம் தொடர்புகள் + பொபது பணியாளர்களின் அறிமுகம் வளர்த்துக்கொண்டு பின்பு அதிலேயே காண்ட்ராக்டர் ஆவது. இத்திட்டத்தை அனைத்து பொறியியலாளர்களுக்கும் - ஏன் அனைத்து பட்டதாரிகளுக்கும் - விரிவு படுத்தி ஆற்காடு வீராசாமி ஒரு சட்ட திருத்தம் கொண்டு வருகிறார் என்று கொள்வோம். திட்டம் நல்ல திட்டம். குறைந்த சம்பளத்தில் நிறைந்த மனிதவளம். வருடா வருடம் புதிய சிந்தனைகள் கொண்ட இளம் மனங்கள். லஞ்சம் இல்லாமல் மின் இணைப்பு உடனே கிடைக்கும். ஆசிரியர் பற்றாக்குறை என்பதே இல்லாமல் அனைவருக்கும் கல்வி. நீங்கள் சற்றுமுன் வாக்குப்பதிவு ஏற்படுத்தினால் எப்படி ஓட்டு போடுவீர்கள். ஒருவேளை அப்போதும் சரியே ;) என்று போட்டாலும் போடுவீர்கள்.

    இப்போது ப்ரச்னை கிராமத்தில் பயிற்சி என்பது மட்டுமல்ல. அதன் பின்னால் உள்ள அரசியல். பயிற்சி என்பதால் ஊதியம் என்பதற்கு பதில் ஊக்கத்தொகை மட்டும் தந்தால் போதும். ஒரு வருடம் முடிந்த பின் சுலபமாக கழட்டி விட்டு விடலாம். இத்திட்டம் மூலம் அரசு பணிக்கு நிரந்தர மருத்துவர்கள் எடுக்க வேண்டிய வேலை இல்லை.

    முன்பே ஒரு திட்டம் இருந்தது. இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறேன். எம்.பி.பி.எஸ் முடித்த மாணவர்கள் அரசு மருத்துவர்களாக தேர்வாணையம் மூலம் தேர்வான பின்னால் அவர்கள் தன்னாலே ஒரு கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிக்கு சென்றால் அவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்கு முன்னுரிமை. இதன் மூலம் நிறைய பேர் - என் மூன்று நண்பர்கள் உட்பட - "கட்டாயம்" என்றில்லாமல் தன் உயர்கல்வி கனவுக்காக வேண்டி கிராமங்களுக்கு சென்றனர். (ஆனாலும் கிராம மக்கள் நிலைமை மேம்படவில்லை என்பது வேறு விஷயம். இவர்கள் டவுனில் இருந்து கிராமத்துக்கு காலை சாவகாசமாக சென்று மதியம் திரும்பி விடுவார்கள். அங்குள்ள செவிலியர் கட்டுப்பாட்டில்தான் ஆ.சு.நிலையங்கள் இயங்கின. அவர்கள் கிராம மக்களை அதட்டுவது, பத்து இருபது என்று லஞ்சம் வாங்குவது என்று எததயும் இவர்களால் கட்டுபடுத்த முடியவில்லை. உன் வயசு என் அனுபவம் என்ற அலட்சியம் ஒரு புறம், எப்படி இருந்தாலும் ஒரு வருசத்துல ஓடப்போகுது என்ற தெளிந்த சிந்தனை மறுபுரம்) அது போன்ற திட்டங்களை இன்னமும் வலுவாக்கி நடைமுறைப்படுத்தலாம். மேற்படிப்பு கிராம ஒதுக்கீடு முறையில் கிடைத்தால் அவர்கள் மீண்டும் ஒரு வருடமோ இரு வருடமோ பகுதி நேரம் - மாஸ்டர்ஸ் முடித்த ஸ்பெஷல்ட்டி டாக்டர்களை கிராம சுகாதார நிலையங்களில் முழுநேரம் பணியமர்த்துவது துரோகம் - வேலை செய்ய வேண்டும் என்று கொண்டு வரலாம். கிராம டாக்டர்களுக்கு டவுன் டாக்டர்கள் இணை சம்பளம் கொண்டு வரலாம். அதை விடுத்து பயிற்சி - ஹவுஸ் சர்ஜன்ஸ் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ப்ராக்ஸி என்ற பெயரில் - காலத்தில் அவர்கள் பெரியாஸ்பத்திரியில் நிறைய வித நோயாளிகளிடம் அனுபவம் பெறாமல் கிராமத்தில் கொண்டுபோய் அரைகுறை மருத்துவர்களாக்குவது அவர்களுக்கும் கிராம மக்களுக்கும் செய்யும் துரோகம். கத்துகுட்டி அமைச்சர் இனியாவது தன் ஆசையை அறிக்கையாக வெளியிடும் முன்பு அறிஞர்களிடம் ஆலோசனை பெற்று பின் தீர்மானமாக விடலாம். ஜோக்கர் பட்டமாவது மிஞ்சும்.


  31. முகமூடி said...

    மேற்படி கமெண்டை சற்றுமுன்னில் ஒரு பிரதி போடலாம் என்று போனால் புகுபதியணும்னு என்னவோ சொல்லுது. ஸாரி, அல்ரெடி வே மெனி புகுபதியல்ஸ்.. நோ மோர் நியூ புகுபதியல்ஸ் :))


  32. ரவி said...

    என்னுடைய பின்னூட்டம் இன்னும் வெளிவரக்கானோமே பாஸ்...


  33. rv said...

    மதுரையம்பதி,
    நன்றி.

    பினாத்தலார்,
    //இது கிடப்பில் போடப்படுவது திண்ணம் //
    உப்புமா கிண்டினாலும் கரெக்டா நாடி நரம்ப பிடிச்சுடறீங்க.

    //மணியன் சொல்ற மாதிரி மத்த தொழில்காரங்களைத் திட்டியிருக்க மாதிரி எனக்குத் தெரியலையே//
    எனக்கும் அப்படி தொனிப்பதாக தெரியவில்லை. மணியன் தான் சொல்லவேண்டும்.


  34. rv said...

    தல,
    அட தூங்கிகிட்டிருந்த சிங்கத்த எழுப்பிட்டோமா?? :)))

    //கம்பேரிட்டிவ்லி இது நோ பிக் (B not P) டீல்.
    //
    :)))

    கட்சியில டாட்லர்ஸ் அணியா? டாலர்ஸ் அணிக்கு வேணா நான் இருந்துக்குறேனே..


  35. rv said...

    அனானி
    நன்றி.

    மற்ற துறை அமைச்சர்களும் எடுக்கவேண்டிய முடிவு பற்றி அவர்களிடம் தான் கேட்கவேண்டும். நான் என் துறையில் எடுத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அன்புமணியார்.

    இங்கேயும் இன்னும் சில பதிவுகளிலும் சிலர் இங்கே மக்கள் வரிப்பணத்தில் படிக்கிறாய்; அடிமையாய் இருந்து அமைச்சர் சொல்வதைக் கேளுனு அப்படின்னெல்லாம் தொனிக்கிற மாதிரி கருத்து சொல்லிருக்காங்க.

    அப்படிப்பட்ட லாஜிக் சிகாமணிகளுக்கு பதில் சொல்வதே நேரவிரயம் என்று நான் நினைக்கிறேன். இந்த 'செஞ்சோற்றுக்கடன்' கான்ஸெப்டை, அதே லாஜிக்கின் படி, எங்கேயிருந்து அப்ளை செய்ய ஆரமிப்பது என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது எனக்கு. :)))))


  36. rv said...

    அக்கா
    //அதுக்கு ஏன் இந்த அளுவாச்சி..........
    அதெல்லாம் கிடப்புலே போட்டுட்டாங்க//

    இப்படி எல்லாரும் ஏறிக்குத்தினா என்னாதான் செய்யிறதாம். அதான் அளுதுட்டேன். உஷாக்கா கர்சீப் புண்ணியத்தில் துடச்சிகிட்டேன்.

    கிடப்புல போடட்டும். அப்புறம் ஸ்மைலி போடுறேன்.


  37. rv said...

    வடுவூர் குமார்,
    //அட! இதில இவ்வளவு பிரச்சனையா?//
    மணியன் சொன்னது போல் அவரவர் பிரச்சனை அவர்களுக்கு.

    சும்மா விதிவிலக்குகளை வச்சுகிட்டு அல்லா டாக்டரும் க்ரோர்பதியா பென்ஸு கார்ல சுத்திகிட்டிருக்காங்கனு நினைச்சுகிட்டிருக்கறவங்கள என்ன செய்ய?

    அப்புறம் சுளுவா சொல்லிட்டாங்க.. ஒரு வருஷம் தானே.. போனா என்னனு..

    இந்த ப்ரைம் ஏஜ்ல ஒரு வருஷத்தோட வால்யூ அத இழப்பவனுக்குத்தான் தெரியும்.


  38. rv said...

    பாலா,

    சரியேங்கிறது சரின்னு உங்களுக்குத் தோணுது..

    உங்க லாஜிக் உங்களுக்கு. மெடிக்கோக்களின் பிரச்சனை அவங்களுக்கு.
    :)))


  39. rv said...

    ரவி,
    கொஞ்சம் நீள அகலமா கத்தி சுத்தி அத நம்ம பக்கம் வேற தாக்குறிங்க.. :))))

    பெருசா போவதால் பாகங்களாய் பதில் சொல்றேன்.

    1) //அதே டாக்டர் அப்பல்லோவுல ஜாய்ண் பண்ணா அவருக்கிட்ட போறவங்க பரிசோதனை எலி இல்லையா //
    internship is supervised. PHCla வேலை is invariably 'unsupervised'. அது ஏன் அப்படிங்கிறதுக்கு காரணமா கட்டமைப்புகளில் ஆரம்பித்து சீனியர் டாக்டர்கள் அங்கு வேலை செய்ய ஆர்வம் காட்டாதது வரை நிறைய இருக்கு.

    பிரச்சனையின் ஊற்று அமைச்சகத்திலும் அதன் செயல்பாடுகளிலும் இருக்கிறது. அதை மேம்போக்காய் வெள்ளையடிக்க கிடைத்திருக்கும் திட்டமே இந்த புதியது.

    அப்புறம் அப்பல்லோவிலோ எந்த கிரகத்திலுமோ எம்.பி.பி.எஸ் முடிச்சோன கிடைக்கும் வேலை கன்ஸல்டண்ட் வேலை இல்லை. அதுனால பரிசோதனை எலிகளும் இல்லை புலிகளும் இல்லை.

    2) //மெரிட்ல தானே படிச்சு வந்தீங்க ? இல்லை அமவுண்டு கொடுத்து "மருத்துவ படிப்பை" வாங்கீட்டீங்களா ? //

    பெர்ஸனலா எடுத்துக்காம பொதுவாவே சொல்றேன். பணம் கொடுக்க முடிந்தவர்கள் காபிடேஷன் கொடுத்து சேர்ந்துக்கறாங்க.

    பர்ஸ்ட் ஆப் ஆல், ரொம்ப நாளா சொல்ல நினைச்ச விஷயம்.. எப்படி கல்லூரியில சேர்ந்தாங்ககறத மட்டும் வச்சு அவங்களோட தரத்தை நிர்ணயம் செய்யலாம்னு சொல்லும் சமயமே, ரிஸர்வேஷனில் சேர்ந்த மாணவர்களினால் தரம் குறைகிறது என்கிற வாதத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டிவரும். இதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. மத்தவங்களுக்கு எப்படியோ...

    சரியா.. மெரிட்ல வந்தவங்க மட்டும் என்ன? அரசு வைத்திருக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். subsidy யினால் பீஸ் ரொம்ப குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. எல்லாமே உண்மைதான். இன்கம்டாக்ஸ் அது இதுவென்று நகரத்தவர் (என் தந்தையும் உங்கள் தந்தையும்) கட்டும் வரிப்பணமும் சாதாரணமானது அல்ல. கிராமத்துக்கும் நகரத்துக்கும்.. எதனால் ரெவின்யூ எப்படி உண்டாகிறது, யாருக்கு அதிக சப்சிஸிடி என்றெல்லாம் ரொம்ப அப்ஜெக்டிவ்வா ஆராயப் போனா நாறும். விட்றுவோம்.

    சிம்பிளா சொல்றேன். சைக்கிள் வச்சுக்கறவன் ரோடு யூஸ் பண்ணலாமானு கூட கேள்வி கேட்கலாம். சட்ட வல்லூறுகளுக்குத்தான் சட்ட நுணுக்கங்கள். பொதுமக்களுக்கு அல்ல. மனிதநேயத்தோடு அணுகினாலே போதும்.


  40. rv said...

    //மருத்துவ படிப்பு ஒரு "சேவை" என்பதை ஒத்துக்கிறீங்களா இல்லையா ? தன்னலம் பாராமல் மக்களுக்காக உழைக்கும் "மக்கள் பணி" என்பதை ஒத்துக்கறீங்களா இல்லையா நீங்க ?//

    இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னாலும் என் பசு புனிதமா இல்லியான்னு ஏற்கனவே இருக்கும் பிம்பங்களே முடிவு சொல்லிருக்கும்.

    சேவை என்பதும் அங்கம்னு தான் பதில் சொல்வேன். பணம் மட்டுமே குறிக்கோளல்லனு சொல்றதை காந்தி ஓரத்துல உக்காந்து கதர் நூத்ததுக்கு சமமா பாக்கும் பார்வைதான் தவறு. யாருக்கு தேவையோ அவர்களுக்கு சேவை. அவ்வளவுதான். இதில் யாருக்கு சேவை செய்யணும், எவ்வளவு செய்யணும், எத்தன மினிமம் க்யாரண்டின்னெல்லாம் எனக்கு டிக்டேட் பண்ண யாருக்குமே உரிமை கிடையாது. என் மனசாட்சியைத் தவிர.

    இது என் எண்ணம். சிலர் மாறுபடலாம். சிலருக்கு தப்புன்னு தோணலாம். well.. to each their own..

    //ஏன் கிராமமுன்னா மெடிக்கல் ரெப்பு வந்து வாசப்படியில நிக்கமாட்டான், கிளுகிளுப்பா நர்சுங்க இருக்காது, லேப்டாப்பு, மாருதி ஸ்விப்ட்டு, கண்ட்ரி க்ளப் மெம்பர்ஷிப்பு, மால்ல ஷாப்பிங், சத்யம்ல படம்னு டைமை ஓட்ட முடியாதுன்னா வேனாங்கறீங்க ?
    //
    இதுதான் stereotyping. மாமின்னா அசடு வழிஞ்சிண்டே இடுப்பு மடிசார் தெரிய காபி கொடுப்பா... முஸ்லீமெல்லாம் குண்டு போடுவான்.. அப்படிங்கிறா மாதிரி. அதுவும் தவிர மேற்சொன்ன எந்த விஷயத்துக்காவது மருத்துவர்களோ படிப்போ அவர்களின் தொழிலோ தகுதியானது இல்லியா? finer things in life அநுபவிக்கிறது இந்நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமான உரிமை. நர்ஸு,ரெப்பு இதெல்லாம் சொந்த கற்பனை, பார்த்த anecdotesனு சொல்லி விட்டுடறேன். அத வச்சு சர்வசாதாரணமா நகரங்களில் வாழும் மருத்துவர்களுக்கு ட்யூரபிள் பூச்சு கொடுக்குறீங்க. எத்தன டாக்டர்கள பெர்ஸனலா தெரிஞ்சுகிட்டு இப்படியொரு டிஸ்க்ரிப்ஷன் கொடுத்தீங்கனெல்லாம் நான் கேட்க போறதில்லை.

    //நெஞ்சத்தொட்டு சொல்லும்யா, மனித சேவை, மக்கள் சேவைக்காக டாக்டர் படிப்புக்கு வந்தீரா, இல்லை காசு பார்க்க மட்டுமா ? //
    இவ்ளோ செண்டியெல்லாம் ஆகவேண்டாம். சேவையின் வழி கிடைக்கும் நியாயமான ஊதியம். அவ்வளவே. இதில் சேவை என்பது serviceprovider என்று மக்களாலேயும் சில டாக்டர்களாலும் அவமரியாதைக்குட்பட்டுவிட்ட வஸ்துவாகவும் இருக்கும். உண்மையான மக்கள் சேவையும் இருக்கும். எது எந்த சதவிகிதம் என்று நிர்ணயிக்கும் உரிமை வெளியாட்களுக்கு கண்டிப்பாக கிடையாது. அதை ஒப்புக்கொள்வீர்களா?


  41. rv said...

    //காசு பார்க்க ஆயிரம் தொழில் இருக்கேய்யா...டாக்டரை கடவுளா இல்லை நினைக்கிறான் நம்மாளு...//
    டாக்டரை கடவுளா நினைக்கிறான். ஆனா என்ன செய்ய கடவுளுக்கும் நிவேத்தியம் இல்லாட்டி கஷ்டம்தான். மற்ற இளைஞர்களைப் போலவே கனவுகளுடன் வெளிவருகிறான் மருத்துவ மாணவன். அவன் அவன் வீட்டையும் வாழ்க்கையும் முதலில் கவனித்துவிட்டு அப்புறம் நாட்டுச்சேவை ஆற்றப் போனால்/சொன்னால் ஒத்துக்கொள்ள முடியும். வேலையும் கிடையாது, ஊக்கத்தொகை சும்மா கொடுப்போம். வந்து வேலை செய்யிற வழியப் பாரு என்பது பாண்டட் லேபருனுடன் தான் ஒப்பிட முடியும்.

    கடவுளா நினைக்கிறான்னு எத்தன உதாரணம் சொல்றீங்களோ அதே அளவுக்கு contemptuous ஆக மருத்துவர்களை அவர்களின் தவறு சிறிதுமன்றி அணுகும்/ஏச்சும்/மிரட்டும்/ கொடுத்த காசுக்கு வேலைப் பார்த்தவனுக்கு என்ன நன்றி/ என்று சொல்லும் ஆட்களை என்னால் காட்ட முடியும். இதெல்லாம் நடைமுறைக்கு சற்று உதவாது. ரொம்பவும் ரோமாண்டிக்காக அணுகுவது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிக எளிது.

    அப்புறம் அது என்ன கல்லூரிகளோட லிஸ்ட் நிறுத்திட்டோம்? அரசுப் பள்ளிகளில் மற்றும் அரசாங்க நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் மற்ற நாடுகளைப் போலவே கட்டாய ராணுவ சேவை கொண்டுவரலாமா? அரசாங்க வரிப்பணம் என்று வந்தபின் ப்ரி கே.ஜியென்ன கல்லூரியென்ன?

    //அவன் நினைப்புல மண்ணை போடுறமாதிரி போராட்டம் நடத்துற மருத்துவ மாணவர்களை நினைச்சு, நெஞ்சு கொதிக்குதுய்யா...//
    ஏன்னா சராசரி பொருளாதார நிலையிலிருக்கும் குடும்பங்களில் தந்தை ரிட்டையர் ஆகவேண்டிய பலவிடங்களில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களைத் தெரியுமா? அப்படி இருப்பவர்களுக்கு இன்னும் ஒரு வருஷம்தானே.. இருந்துட்டு போ என்று சொல்வது எத்தனை கொடூரமானது என்பது பலருக்கு புரியவில்லை என்பதே எனக்கு ஆச்சரியமா இருக்கு. அதைதானே முட்டிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய மற்ற துறையினரை விட அதிக காலம் தேவைப்படுது. இதில் மேலும் அதிகரிப்பது சற்றும் நியாயமில்லைனு. பொதுச்சேவை, கூட்டு இடியாப்பம் எல்லாம் சுகம்தான். அடுத்தவருக்குச் சொல்லும்வரையில். ஒரு வருஷம் என்பது போனால் திரும்ப வருமா என்ற கேள்விக்கு நியாயமான பதில் சொல்ல யாருமில்லை. நாட்டுச்சேவை செய்யப்போவென்று அடுத்தவருக்கு ஆலோசனை சொன்னால், நீயென்ன செய்து கிழித்தாய் என்றுதான் திரும்ப கேட்பார்கள். அந்தக்கேள்வியில், ப்ராக்டிக்கலீ பார்த்தா, தவறிருப்பதா எனக்குத் தெரியவில்லை.

    இத்தகைய அரசியல் நிர்வாக குளறுபடிகளுக்கு ஒரு சராசரி மருத்துவ மாணவனும் அவன் குடும்பமும் தரும் விலையென்ன? அவன் குடும்பமும் சேவை இடியாப்பமெல்லாம் செட்டிலானப்புறம் செய்யலாம். முதல்ல வீட்ட நிமுத்தற வழியப் பாருன்னுதான் சொல்வாங்க. அதையேதான் நானும் சொல்றேன்.

    //ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க இராமநாதன். பொறவு பகிரங்க அறிக்கையோ, அடுத்த பதிவோ, எதுவார்ந்தாலும் எங்களுக்கு ஓக்கேதான்..//
    நீங்களும் யோசிச்சிட்டு சொல்லுங்க. எனக்கும் ஓகேதான்.


  42. Anonymous said...

    கேள்வி: தமிழகத்தில் மருத் துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண் டிருக்கிறார்களே?

    கலைஞர்: கிராம மக்களுக்குப் பணிபுரிகின்ற ஆர்வமும், அக்கறையும் மருத்துவத்துறை மாணவர்களுக்கு வரவேண்டுமென்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அதற்காக அவர்கள் ஓராண்டு காலம் மேலும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்ற கால நீடிப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூறியுள்ள கருத்துகளை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தம்பி அன்புமணி ஏற்று செயல் படவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.

    http://viduthalai.com/20070909/news09.htm


  43. Geetha Sambasivam said...

    என்ன சொல்றது? ராகவன் சொல்றாப்பலே, இஞ்சினீர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் என்று எல்லாரையுமே சில ஆண்டுகள் கிராமத்தில் பணி புரியவும் கிராம மேம்பாட்டுக்காகவும் அனுப்பறது நல்லது. ஆனால் இந்த நாட்டில் அப்படி எல்லாம் நடக்குமா?
    பயிற்சிக்கு என்று கிராமத்துக்கு இளம் வைத்தியர்களை அனுப்புவதை விட அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் கட்டாயமாய் மூன்றாண்டுக் காலமாவது கிராமங்களில் பணி புரியச் சட்டம் கொண்டு வரலாம். மற்றபடி இந்தியாவில் அரசியல் புகுந்து விளையாடாத துறையே இல்லை. இது மட்டும் விதி விலக்கா என்ன?


  44. இலவசக்கொத்தனார் said...

    கூடைக்குள்ள போகப் போகுது அப்படின்னு முடிவு செஞ்ச ஒரு திட்டத்துக்கு இம்புட்டு பேச்சு.

    ரொம்ப நாளா சைலண்டா இருந்த தலைவரை அறிக்கை விட வெச்சதுதான் இந்த பதிவோட வெற்றின்னு நான் நினைக்கறேன். :))


  45. rv said...

    தல,
    //அதற்கு பதிவு அலுவலகம் சென்னை தரமணியில் இருக்கிறது. அரசு பணி கனவில் இருக்கும் மாணவர்கள் அதில் பதிவார்கள். பின்பு சொற்ப பணம் இடம் மாறினால் பொறியியலாளர்களுக்கு பொபது, மின்வாரியம் என்று ஏதோ ஒரு அரசு நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி காலம் ஒதுக்குவார்கள். //
    அதே.. வாலண்டரியா வச்சுருக்காங்க. ஏன் ஆளுங்க வர்றதில்லேங்கிற கேள்வி அந்தந்த துறைதான் கேட்டுக்கணும். என்ன அப்படியா நல்ல ஆளுங்க குறைஞ்சு போயிட்டாங்க நாட்டுல...

    பாபாவின் பார்வை என்னன்னு தெரியலியே. அவர் வந்து விளக்கினாதான் புரியும். வெயிட்டுவோம்.

    அரசாங்க சர்வீஸில் இருந்தால் மேல்படிப்புக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கோட்டா இருக்கு. சில கண்டிஷன்ஸ் இருந்தாலும் அந்த மாதிரி சேர்ந்து மேல்படிப்பு படிக்க நினைப்பவர்கள் நிறையபேர் உள்ளனர்.

    //பெரியாஸ்பத்திரியில் //
    இதுவும் முக்கியமான மேட்டர்தான். ரெகுலர் இண்டர்ன்ஷிப்பை குறைச்சு இத்திட்டத்த வச்சாலும் தவறுதான். காரணம் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

    அஞ்சு வருஷத்துல கத்துனகுட்டிகளானாலும் கத்தாதகுட்டிகளானாலும் அந்த ஒரு வருஷத்துல கத்துக்கறது ரொம்ப நிறையவே..


  46. rv said...

    ரவி,
    சாரி.. காலையில பார்த்தவுடன் பப்ளிஷ் பண்ணிட்டேன். டைம் டிப்பரன்ஸ்ல கொஞ்சம் லேட்டாயிருச்சு.


  47. Boston Bala said...

    ---இன்னிய தேதிக்கு ஸ்டைபண்ட்னு சொல்லி என்ன கொடுக்கிறாங்கனு யாருக்காவது தெரியுமா?---

    கிராமங்களில் சேவை செய்யும் காலத்தில் மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஸ்டைபெண்ட் தரப்போவதாக படித்தேன்.

    The Hindu : Front Page : “Medicos’ rural service to stay”: "During the rural posting, students would be given stipends ranging from Rs.8,000 to 12,000 a month jointly by Central and State governments. They need not stay in remote villages and could stay either at the district or taluk headquarters."

    எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் என் வயதொத்தவர்களின் ஜெனரேஷன் அனுபவித்து வருகிறது.

    உங்கள் கருத்தை ஆதரித்து தினமணியில் வெளியான கட்டுரை: கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை :: ஜி.ஆர்.ரவீந்திரநாத்

    இன்னொரு கட்டுரையில் இரா. சோமசுந்தரம் :மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை.
    .....
    கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

    அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

    தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

    தினமணி தலையங்கம்: இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும்

    கடைசி கருத்து பன்ச்:
    75 per cent of the country’s population, living in rural areas, had access to only 25 per cent of medical facilities.


  48. மயிலாடுதுறை சிவா said...

    ....என்ன ஒண்ணு, எங்கூரு காரரு கோட் சூட்டெல்லாம் போட்டு எப்பிடி இங்கிலீஸ் பேசறாரு பாத்தியான்னு வாசிங்க்டன் டிசியில மயிலாடுதுறை பட்டிக்காட்டானுங்க மணிக்கூண்டு மிட்டாய்க்கடைய பாத்து வாய்பிளக்கிற சந்தோசம் மட்டும் இருந்திருக்காது....

    அன்புமணி இந்த திட்டத்தில் நான் உடன்படவில்லை. அதே சமயத்தில் அவரை நான் ரசித்து எழுதிய விசயமும் உண்மை!!!

    முகமுடி போல நமக்கு அகண்ட அறிவும், திறந்த மனதும் நமக்கு இல்லேயே....மூகமூடியை பல பேர்
    நார் நாராக கிழித்தும் புத்தி வரவில்லையே!!!!

    மயிலாடுதுறை பட்டிகாட்டான்
    சிவா...


  49. முகமூடி said...

    // மூகமூடியை பல பேர்
    நார் நாராக கிழித்தும் புத்தி வரவில்லையே //

    ஓ... இப்படி வேற ஒரு நெனைப்பா... நெனப்புதான் பொளப்ப கெடுக்குமாம். ஓகே. ஜ்டார்ட் மீஜிக்.

    கனவு காணும் காலம் யாவும்...


  50. erode soms said...

    நெத்தியடி அடித்துள்ளீர்!
    கிராமத்து மருத்துவருக்கு இருமடங்கு சம்பலம் என்றால் யார் மருப்பார்கள்!


  51. rv said...

    பாபா,
    விளக்கமான சுட்டிக்கு நன்றி.

    அதிலிருக்கும் விஷயங்களுக்கு இங்கேயெ பதில் இருக்குனு நினைக்கிறேன். :)

    அனானி,
    கேள்வியும் நானே பதிலும் நானேனாலும் கரீக்டாதான் சொல்லிருக்காரு கலைஞரு.


  52. rv said...

    கீதாக்கா,
    நன்றி

    //அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சுழற்சி முறையில் கட்டாயமாய் மூன்றாண்டுக் காலமாவது கிராமங்களில் பணி புரியச் சட்டம் கொண்டு வரலாம். //

    எல்லாத்துக்குமே தகுந்த ஊக்கம் இருந்தா செய்ய ஆளுங்க நிறையபேரு இருக்காங்க.


  53. rv said...

    கொத்ஸூ,
    தல அப்புறம்.. சித்தன் வேற வந்துருக்காரு.. இன்னும் யாரு யாருன்னு hibernationலேர்ந்து வர்றாங்கனு பார்ப்போம். :)))


  54. rv said...

    சித்தன்,
    கேள்வி மட்டுமே கேக்குற நிலைமைல இருக்கோம். நாம கேட்கிற கேள்விய காதுகொடுத்துக் கேட்க ஆளில்லேங்குறதுதான் வருத்தமா இருக்கு.


  55. Anonymous said...

    For my comments

    http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html


  56. Anonymous said...

    maruthuva papippu kasu sambathikka enru ugalukku yaar sonnathu? sevai manam illathavargal etharku medicine padikkireerkal?unakku panam than mukkiam endral veru ethavathu sei. indria maruthuvarkalidam marunthuku kooda manithabimanam illai.kasu koduthu padikka vendiyathu,mamanar selavil maruthuvamanai, patient ezhaya,panakkarana enru pedham parkkamal 300,400 enru fees, ekapatta testgalai thevaiye illamal edukka vaippathu idhu than endraya drkalin latchanam!


  57. சோழன் கொடி said...

    KASU SAMPARIKA MATTUMTHAN MBBS PADIKIRANKA, ITHU PONTRA THITTANKAL AVARKALUKU THIYAKA MANAPANMAYAI VALARKUM BY RAJA


  58. Unknown said...

    சேவை மனப்பான்மை குறைச்சுட்டே வருது..இவ்வளவு ரேசம் இருக்கிறவங்க தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கனும்..மக்களின் வரி பணத்துல நடத்துற அரசு மருத்துவ கல்லூரியில படிக்கக் கூடாது..மத்தப்படி மருத்துவம் அல்லாத மற்றப் படிப்பு படிக்கிறங்களும் கிராமத்திற்கு சேவைச் செய்யனும்னு நீங்க நினைக்கிறது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது..உங்களுக்கு திறமையிருக்கிறதுனாலதான் அரசு மருத்துவ கல்லூரியில இடம் கிடைச்சது..ஒத்துக்கிறேன்..அந்த திறமைய மதிச்சுதான் அரசாங்கமும் மக்கள் வரி பணத்துல உங்களுக்கு படிக்க வாய்ப்பு கொடுக்குது..பண மட்டுமே குறியா இருக்கிறவங்க மருத்துவம் படிக்கிறது துரதிஷ்டம்..ஏனா இது உயிர் காக்கும் தொழில்..கொஞ்சம் சேவை மனப்பான்மையும் இருக்கனும்..இன்னிக்கு எங்களுக்கு கிராமத்துல காசு கம்மியா கிடைக்குது அதுனால போகமாட்டோம்னு சொல்றவங்க, ஒரே நேரத்துல ரெண்டு நேயாளிகள் வந்தா ரெண்டு போருள யார் பெரிய பணக்காரங்களோ அவனுக்குத்தான் மருத்துவம் பார்பீங்க..அதே நேரம் உங்களுக்கு தேவையான வசதிய அரசாங்கமும் செஞ்சு கொடுக்கனும்..அதையும் ஒத்துக்கிறேன்..ராமதாஸ், அன்புமணி இருவரும் மோசமான தலைவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை..அரசியலுக்குக்காக ஏதாவது செய்துக் கொண்டு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..


 

வார்ப்புரு | தமிழாக்கம்